“நாங்கள் தொடர்ந்து பசியோடு இருக்கலாம். ஆனாலும் அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் எங்கள் கட்சிக்கொடிகளோடு வீதிகளில் ஊர்வலமாக போவோம். வேறு வழி கிடையாது. கட்டாயம் நாங்கள் செய்யவேண்டிய கடமை இது.”  என்கிறார் நாராயணசாமி.

அனந்தப்பூர் மாவட்டத்தின் ராப்டாடு சட்டப்பேரவைத் தொகுதியில் அவர்  ரேஷன் கடை வைத்திருக்கிறார். ஏப்ரல் 11 ஆம் தேதி வரைக்குமான தேர்தல் பிரச்சாரப் பணிகள் பற்றி அவர் பேசினார். நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் நடைபெறுகிற இந்தத் தேர்தலில் யார் எந்த முறையில் வாக்களிப்பார்கள், ஏன் அப்படி வாக்களிப்பார்கள் என்று விரிவாக விளக்கமாக அவர் பேசினார்.

இந்துப்பூர் மற்றும் கடப்பா நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளே வருகிற சட்டப்பேரவைத் தொகுதிகளான, ராப்டாடு மற்றும் புலிவேண்டுலா ஆகியவற்றின் மீதுதான் பெரும்பாலான கவனமும் விவாதமும் இருந்தது.

ராப்டாடு தொகுதியில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் பரிதாலா ஸ்ரீராம் என்பவருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தோப்பு துருத்தி பிரகாஷ் ரெட்டி என்பவருக்கும்தான். 2009லிலும் 2014லிலும் ஸ்ரீராமின் அம்மா பரிதாலா சுனிதாவிடம் பிரகாஷ் ரெட்டி இந்த தொகுதியை இழந்திருந்திருந்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சதீஷ்குமாருக்கும் போட்டி இருக்கிறது. அடுத்த முதலமைச்சராக வருவதற்கு வாய்ப்பு உள்ள ஜெகன்மோகனுக்குத் தான் வாய்ப்பு இருப்பதாக கணிசமானோர் கருதுகின்றனர்.

இந்துப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நிம்மலா கிஸ்டப்பாக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கோரண்ட்லா மாதவுக்கும்தான் போட்டி. கடப்பா நாடாளுமன்றத் தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அவினாஷ் ரெட்டி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரை எதிர்த்து நிற்பவர்களில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதிநாராயண ரெட்டி முக்கியமானவராக இருக்கிறார்.

ஆனாலும், அனந்தபூர் மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள மக்கள் போட்டியிடுபவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்துகொண்டு அவர்களைப் பற்றி அக்கறைப்படுவதைவிட கட்சிகள் மற்றும் அவற்றின் பிரிவுகள் தொடர்பான விசுவாசிகளாகவே உள்ளனர்.ராப்டாடு பகுதியில் உள்ள கிராமத்தினரிடையே நாங்கள் பேசினோம். அவர்கள் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைக்கும் வாக்களிக்க வேண்டியவர்களாக இருந்தபோதும் அவர்களின் கவனம் கூடுதலாக சட்டப்பேரவை தொகுதியில்தான் இருக்கிறது என்பது போல தோன்றுகிறது. இந்த தொகுதிகளில் உள்ளவர்களில் பொதுவாகவே நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி அக்கறை செலுத்துவதைவிட மிக அதிகமாக அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தல் பற்றியே அக்கறை செலுத்துகிறார்கள் என்பதைப் பார்க்க முடிந்தது.

Bags with Chandrababu Naidu’s image, are given at ration stores in Andhra Pradesh.
PHOTO • Rahul M.
A farmer, who supports Naidu's TDP, watches as a TDP leader campaigns in Anantapur city
PHOTO • Rahul M.

இடது: சந்திரபாபு நாயுடு படம் போட்ட இந்த பைகள் ஆந்திரப்பிரதேசத்தின் ரேஷன் கடைகளில் தரப்படிருக்கின்றன.  அனந்தபூர் நகரத்தில் தெலுங்குதேசம் கட்சியின் பிரச்சாரக்கூட்டத்தில் ஒரு விவசாயி

தனிப்பட்ட உங்களின் அக்கறைகளையும் தொகுதியின் பிரச்சனைகளையும் உங்களின் கட்சி விசுவாசம் மறக்கடித்துவிடும் என்கிறார்கள் அனந்தபூரின் நாராயணசாமியும் மற்றவர்களும். இந்த கிராமங்களில் உள்ள செயல்பாட்டாளர்கள் பல நேரங்களில் தங்களின் சொந்த வேலைகளையும் விட்டுவிட்டு குலைபட்டினியோடு தங்களின் கட்சி வேலைகளைச் செய்கிறார்கள்.

“வாக்காளர்களில் ஒரு சிறு பகுதியினர்  எப்போதும் எந்தப் பக்கமும் சேரமாட்டார்கள். ஆனால் ஏதாவது ஒரு அரசியல் கட்சியிடம் ஏதாவது தங்களுக்கு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எங்களது அரசாங்கம் ஒத்தை ரூபாய் அளவுக்குக் கூட பயன்களை அளிக்கவில்லை”  என்கிறார் நாராயணசாமி. அவரும் ஒரு தெலுங்கு  தேசம் கட்சியின் விசுவாசிதான்.

அனந்தபூர் பற்றி தெரியாதவர்கள் குழம்பிப்போவார்கள். அரசியல் கட்சிகள், அவற்றில் உள்ள கோஷ்டிகள், சினிமா நட்சத்திரங்களின் மேல் உள்ள பக்தி இவை எல்லாம் அவர்களைக் குழப்பும். இத்தகைய பிரிவுகளிலிருந்து கிளம்பும் குழுவாதமும் இந்த மாவட்டத்தில் உண்டு. இவை எல்லாம் சேர்ந்து அரசியல் மோதல்கள் வன்முறைகள் நிறைந்த மாவட்டமாக இதை ஆக்கியிருக்கிறது.

இத்தனை வருடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த மாவட்டத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரை விட்டிருக்கிறார்கள். தங்களின் தொகுதி அல்லது பகுதியின் பிரச்சனைகள் பற்றிய புரிதலோ விழிப்புணர்வோ இல்லாதவர்களாகத்தான் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் பிரச்சனைகளின் அடிப்படையில் வாக்களிப்பதில்லை. அவர்கள் தங்களின் விசுவாசங்களின் அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள்.

அனந்தபூரில் நீங்கள் எதைச் சார்ந்திருக்கிறீர்களோ அதுவே உங்களின் விஷயமாக எளிதாக ஆகிவிடுகிறது.

ராயலசீமா மண்டலம் முழுவதிலும் உள்ள கிராமங்களில் இதுவே உண்மையான நிலவரம். இதில் ஒரு பகுதியாகத்தான் அனந்தபூர் இருக்கிறது. தேர்தல் நடக்கிற வருடத்தில் இது மேலும் அதிக வெளிப்படையாகத் தெரிகிறது.

தெலுங்குதேசம் கட்சியின் ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு திட்டங்களின் நிலைமை என்பது அரசியல் விசுவாசங்களால் தீர்மானிக்கப்படுகிறது. மற்ற கட்சிகளின் ஆட்சிகளிலும் இது நடக்கவே செய்தது. ஆனாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இது மிகவும் தீவிரமான முறையில் வெளிப்படுகிறது.

தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியில் தங்களுக்கு எதுவும் பயன்கள் கிடைக்கவில்லை என்றாலும் அவர்கள் அந்தக் கட்சியின் பின்னால் போகிறார்கள். ஒரு சினிமா  நட்சத்திரத்தின் தீவிர ரசிகர்கள் அந்த நட்சத்திரம் எந்த வழியில் போகிறாரோ அந்த அரசியல் வழியில் போவார்கள். மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியின் பிரிவுகளுக்கு ஆதரவு தருவார்கள்.

A TDP admirer in Anantapur is excited about an N. T. Rama Rao biopic.
PHOTO • Rahul M.
A poster of the biopic features Paritala Sunitha and Paritala Sreeram and other TDP leaders
PHOTO • Rahul M.

அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் கோஷ்டிகளைச் சார்ந்து இருப்பது, சினிமா நட்சத்திரங்களின் மீது பக்தியோடு இருப்பது  இவை எல்லாம் வாக்குகளாக மாறுகிறது.  இடது:ஒரு தெலுங்கு தேசம் கட்சியின் விசுவாசி என்.டி,ராமராவ் போல நடித்துக்காட்டுகிறார்.  வலது: பரிதாலா சுனித்ரா மற்றும் பரிதாலா ஸ்ரீராம் மற்றும் இதர தெலுங்கு தேச தலைவர்களின் படங்கள் கொண்ட ஒரு பேனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் உள்ளேயும் இந்த விசுவாசங்கள் செயல்படுகின்றன. ராப்டாடு தொகுதியைச் சேர்ந்த கீழ்மட்டத் தலைவர் ஒருவர் தனக்கு அவசரமாக தேவைப்பட்ட ஒரு வங்கிக் கடனுக்கு அவரது கட்சி உதவி செய்யாது என்றவுடன் வெறுத்துப்போய்விட்டார். கட்சி விசுவாசங்களின் மூலம் பயன்கள் கிடைக்கவும் செய்யும். அதே விசுவாசங்கள்   எப்படி கட்சிக்குள் அதிகார கட்டமைப்பை உருவாக்குகிறது என்பது பற்றிய தகவல்களை அரசியல் செயல்பாட்டாளர்கள் நமக்குச் சொல்கின்றனர். விசுவாசங்களின் மூலமும் சாதியின் காரணமாகவும் தலைமைக்கு நெருக்கமாக இருப்பவர்கள்தான் அதிகமாக பயன்களை அடைவார்கள்.  அடுத்தவர்களைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலும் இத்தகைய முறையில் பயன்களை அடைவார்கள் என்பதும் இதில் வெளிப்படும்

“அந்த கீழ்மட்டத் தலைவர் அவருக்குத் தேவையான வங்கிக் கடனுக்கான எல்லா உதவிகளையும் பெற்று விட்டார். கடைசி நிமிடத்தில் அவரது கடனுக்கான அனுமதி கிடைக்கவில்லை. இருந்தாலும் இது மாதிரியான விஷயங்களை நினைக்க ஆரம்பித்தால் அது நன்றாக இருக்காது” என்கிறார் தெலுங்கு தேசம் கட்சியின் ஒரு ஆதரவாளர். பல நேரங்களில் இத்தகைய ஒரு அரசாங்கக் கடனோ அல்லது ஒரு திட்டத்துக்கான ஒப்புதலோ கிடைப்பது என்பது அதைக் கேட்பவர் எந்த வகையான  கட்சித் தொடர்புகளோடு இருக்கிறார் என்பது சார்ந்தே இருக்கிறது என்கிறார் அவர்.

ராப்டாடு என்பது தெலுங்கு தேசம் கட்சியின் கோட்டையாக சில வருடங்கள் இருந்துள்ளது. மாநில அளவில் ஆட்சி மாறும்போது கிராமங்களில் உள்ள அதிகார மட்டங்களும் மாற்றம் அடையும். 2004 சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியடைந்த ஒரு வருடத்துக்குள் பட்டப்பகலில் பரிதாலா ரவீந்திரா கொல்லப்பட்டார். அவரது மனைவிதான் தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் சட்டபேரவை உறுப்பினராக இந்தத் தொகுதியில் உள்ளார்.

பழிவாங்கும் வெறியோடு அலையும் இரண்டு குடும்பங்களின் நாற்பத்தி ஐந்து ஆண்டுகால போர்க்களத்தின் ஒரு பகுதிதான் அந்த பட்டப்பகல் கொலை. இரண்டு தலைமுறைகளாக இது தொடர்கிறது. அதில் கவரப்பட்டுதான் ‘ரத்த சரித்திரா’ எனும் திரைப்படத்தை இரண்டு பகுதிகளாக ராம் கோபால் வர்மா எடுத்தார். அந்தப் படம் ஒரு குழந்தை பிறக்கிற காட்சியோடு முடியும். அதில் கொல்லப்படுகிற கதாபாத்திரம் கொல்லப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரான பரிதாலா ரவீந்திராதான். அந்தப் படத்தில் உள்ளதுபோலதான் கொல்லப்பட்டவரின் மகன் ஸ்ரீராம் அதே ராப்டாடு தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசத்தின் அரசியலுக்குள் நுழைகிறார்.

YSRCP activists in a village in Raptadu constituency
PHOTO • Rahul M.
YSRCP activists in a village in Raptadu constituency
PHOTO • Rahul M.

ஒஎஸ்ஆர் கட்சியின் தொண்டர்கள் ராப்டாடு தொகுதியின் ஒரு கிராமத்தில் .

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகான ராயலசீமா மண்டலத்தின் அரசியல் வரலாறில் கொலைகளும் வன்முறையும்தான் ஒரு பகுதி அவர்களின் அரசியல் தொடர்புகள் காரணமாகவே பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

கடப்பா மாவட்டம் என்பது 2010இல் ஒய்எஸ்ஆர் மாவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு இது சொந்த ஊர். ஆனாலும் இந்த மாவட்டத்திலும் அரசியல் கோஷ்டிகள் உண்டு. ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர். அவர் 2009இல் ஒரு விபத்தில் இறந்துபோனார். அவரது மகன்தான் ஜெகன்மோகன் ரெட்டி. காங்கிரசிலிருந்து அவர் வெளியேறியபோது உருவாக்கியதுதான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. ஆந்திரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக தீவிரமாக போட்டி போடுகிற க.ட்சி அது.

அரசியல் சார்புகள் காரணமாகக்  கொல்லப்படுவதிலிருந்து மிகவும் பலம் படைத்தவரும் தப்பமுடியாது. ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் அப்பா ஒய்.எஸ். ராஜா ரெட்டியும் 1999இல் கொல்லப்பட்டவர்தான். அந்தக் கொலைக்காக ஒரு முன்னாள் அமைச்சர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தண்டனை விதிக்கப்பட்டார். அதன்பிறகு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்த வருடம் மார்ச் மாதத்தில் ராஜா ரெட்டியின் சகோதரர் விவேகானந்த ரெட்டி புலிவேண்டுலாவில் உள்ள அவரது வீட்டில் கொல்லப்பட்டார். இந்தத் தொகுதியிலிருந்துதான் ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். தற்போதும் இங்கே தான் போட்டியிடுகிறார்.

கடப்பா  நாடாளுமன்ற தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருப்பவர் அவினாஷ் ரெட்டி. அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியின்  வேட்பாளரை விட இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிக வாக்குகள் பெற்று 2014இல்வெற்றி பெற்றார். 2011ஆம் ஆண்டில் இதே தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிட்டு எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட ஐந்தரை லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்தார்.  இருந்தாலும் இந்த முறை மக்களின் கவனம் என்பது கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவேண்டுலா சட்டப்பேரவைத் தொகுதியின் மீதுதான்.

At the entrance to Talupuru village.
PHOTO • Rahul M.
TDP/YSRCP campaign autos in Anantapur city
PHOTO • Rahul M.

இடது:தாலுபூரு கிராமத்தின் முகப்பு. வலது: அனந்தப்பூர் நகரில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார ஆட்டோக்கள்

மாநில அளவில் அதிகாரங்கள் கைமாறுவதை வெளிப்படுத்துவதாகவும் ராயலசீமா மண்டலத்தில் கொலைகள் நடைபெறும். மாநிலத்தில் அரசியல் அதிகாரம் கையை விட்டுப்போனால், அதன் விளைவுகள் என்னவாகும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் ஊழியர்கள் அனந்தபூரில்  பதறுவார்கள். எந்த கட்சியின் சார்புகள் அவர்களுக்கு அதிகாரத்தையும் நல்வாழ்வையும் கொண்டுவந்தனவோ அவையே அவர்களுக்கு தற்போது ஆபத்தையும் கொண்டுவரக்கூடியவையாக மாறும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்கட்சியின் ஊழியர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதே நேரத்தில் எச்சரிக்கையாகவும் இருக்கிறார்கள். ஒரு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்னை ஒரு தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவாளர் என்று தவறாக புரிந்துகொண்டார். நான் ஏதோ விசாரணை நடத்துகிறேன் என்று காவல் அதிகாரியிடம் புகாரும் செய்தார். ராப்டாடு சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வோடிப்பள்ளி எனும் அவரது கிராமத்தில் நான் யாரையும் நேர்காணல் எடுக்கக்கூடாது என்று அவர் என்னைத் தடுத்தார்.

எந்த அரசியல் சார்புகளும் இல்லாத வாக்காளர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி திட்டமிட்டே எந்த நல்வாழ்வு பணிகளும் வளர்ச்சிப் பணிகளும்  செய்யவில்லை என்பதுதான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது.

கங்கண்ணா ஒரு கூடை முடைபவர். ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எந்த கட்சியும் சார்பு இல்லை. அதில் இருக்கிற எந்த பிரிவுகளோடும் அவருக்கு பழக்கமில்லை. சாலையை விரிவுபடுத்துகிற பணியின் காரணமாக அவரது குடிசை இடிக்கப்பட்டுவிட்டது. தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவாளர்கள் அவருக்கு மாற்றாக அருகில் ஒரு இடம் தந்துள்ளார்கள். “ அவர்களிடம் எனது குடிசையை எப்படியாவது காப்பாற்றிக்கொடுங்கள் என்று கெஞ்சினேன். அவர்கள் முடியாது என்று எனது முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டார்கள் என்றார் அவர். இந்த முறை அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கப்போகிறார்.

அவர் தான் முடைகிற பைகளையும் மரத்தாலான பொருள்களையும் விற்பதற்காக சுமார் ஐம்பது கிலோ மீட்டர்கள் அளவுக்கு அலைகிறார். “எங்களது தொழில் கைவேலை. எங்களுக்கு எந்த ஒரு நிலமும் இல்லை.அதனால் சகோதரரே! எங்களுக்கு எந்த ஒரு அரசியல் தலைவர் பற்றியும் கவலை இல்லை. நாங்கள் யாரையும் விமர்சிப்போம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைக்கூட அவர்கள் தங்கள் கடமையிலிருந்து நாங்கள் விமர்சிப்போம்” என்கிறார் அவர். கங்கண்ணா மாதிரியானவர்கள்  அரசாங்கத்தின் பயன்கள் கிடைக்காதவர்கள். அத்தகையோரின் வாக்குள் ஆந்திராவில் ஆட்சிகளை மாற்றக்கூடியவை.

தமிழில்: த நீதிராஜன்

Rahul M.

Rahul M. is an independent journalist based in Andhra Pradesh, and a 2017 PARI Fellow.

Other stories by Rahul M.
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

Other stories by T Neethirajan