தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் நடனமாடிய 40 போராளிகளுக்கு நவ்ஷியா குர்வா இப்போதுதான் தும்சி எனப்படும் பறையிசைக் கருவியை வாசித்து முடித்திருந்தார். இரவு 11 மணியளவில் ஓய்வெடுக்க அமர்ந்தபோது, அவரை மூன்று பேர் அணுகினர்.

“திருமணமா? என்ன தேதியில்?” என கேட்கிறார் நவ்ஷியா. அவருடன் உரையாடிவிட்டு தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டு மூவரும் நகர்ந்தனர். ஜனவரி 25ஆம் தேதி மைதானத்தில் போராட்டத்திற்கு கூடிய விவசாயிகளை பார்த்து அவர் சிரித்தபடி சொன்னார்: “ எனக்கு ஒரு வேலைவந்துவிட்டது.”

தஹானு தாலுக்கா கின்ஹவாலி கிராமத்தில் நவ்ஷியா, அவரது மனைவி பிஜ்லி இணைந்து சோளம், துவரை, அரிசி ஆகியவற்றை ஐந்து ஏக்கர் வனநிலத்தில் பயிரிட்டு வருகின்றனர். அவர் வயல் வேலை இல்லாத நேரத்தில், இதுபோன்ற இசை நிகழ்ச்சியில் ஈடுபடுவார். அவர் மாதம் 10-15 திருமணங்களுக்கு இலவசமாக பறை வாசிக்கிறார். அவரது பயணம், உணவு, தங்கும் செலவுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.“ பெரும்பாலும் [பறை இசைக்க] நாஷிக்கிற்கு, சில சமயம் வெளியிலும் செல்கிறேன். தானே, குஜராத்திற்குக் கூட சென்றுள்ளேன்,” என்கிறார் நவ்ஷியா.

அவர் 40 ஆண்டுகளாக பறை இசைக்கிறார். “என் கிராமத்தில் மற்ற இசைக் கலைஞர்களைப் பார்த்து இசைக்க கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர்.

காணொலியை காண - இசையின் ஓசை: ஆசாத் மைதானத்தில் விவசாயிகள் போராட்டத்தில் தர்பா, தும்சி

“திருமணம், திருவிழா என்றால் நாங்கள் இந்த நடனத்தை ஆடுவோம்,” என்கிறார் அவர். “நாள் முழுவதும் ஆடினால்கூட நாங்கள் சோர்வடைவதில்லை.” மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாராஷ்டிரா முழுவதிலும் இருந்து திரண்ட 15,000 போராட்டக்காரர்களுக்காக இம்முறை இசை நிகழ்ச்சி நடந்தது. சம்யுக்தா ஷெத்கரி கம்கார் மோர்ச்சா ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்திற்கு 21 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஜனவரி 23ஆம் தேதி மாலை தொடங்கி இரண்டு நாட்களில் 180 கிலோமீட்டர் பயணம் செய்து நாஷிக்கிலிருந்து வந்துள்ளனர்.

ஜனவரி 25ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு நவ்ஷியா பறை இசைத்தார், ஜனவரி 23ஆம் தேதி பல்கார் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் இப்போதும் சோர்வடையவில்லை: “எனக்குப் பழகிவிட்டது. இரவு முழுவதும்கூட திருமணங்களுக்கு நான் இசைத்துள்ளேன்,” என்கிறார் அவர்.

“[எனது சமூகத்தில்] எல்லோருக்கும் இந்த நடனம் தெரியும்,” என்கிறார் பட்டியல் பழங்குடியினமான வார்லி சமூகத்தைச் சேர்ந்த நவ்ஷியா. அவருக்குப் பின்னால் தஹானு தாலுக்காவின் தமனகாவ்ன் கிராமத்தைச் சேர்ந்த 53 வயத வார்லி பழங்குடியின தைகாக்டி தபட் அமர்ந்திருந்தார். “தசரா காலத்தில் திருவிழா தொடங்கியது. அப்போதுதான் விதைப்பதும் நடக்கும்,” என்கிறார் தபட். “தசராவிலிருந்து தீபாவளி வரை [நவம்பரில்], இந்த நடனத்துடன் கொண்டாடுவோம். இப்படித்தான் நானும் கற்றுக்கொண்டேன்.”

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு  எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக  அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.
Navshya Kuvra (left), along with Taikakde Thapad (in red saree, centre) and other Adivasi women, and Navji Hadal (right) were among the performers at Azad Maidan
PHOTO • Riya Behl
Navshya Kuvra (left), along with Taikakde Thapad (in red saree, centre) and other Adivasi women, and Navji Hadal (right) were among the performers at Azad Maidan
PHOTO • Riya Behl
Navshya Kuvra (left), along with Taikakde Thapad (in red saree, centre) and other Adivasi women, and Navji Hadal (right) were among the performers at Azad Maidan
PHOTO • Riya Behl

நவ்ஷியா குவ்ரா (இடது) தைகக்டி தபட்டுடன் (சிவப்பு புடவையில், நடுவில் இருப்பவர்) மற்றும் பிற பழங்குடியின பெண்கள், ஆசாத் மைதானத்தில் பங்கேற்ற நவ்ஜி ஹடால் (வலது) உள்ளிட்ட கலைஞர்கள்

பெருமுதலாளிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், விவசாயிகள், விவசாயத்தின் மீது அதிகளவு அதிகாரத்தை அவர்கள் செலுத்த வழிவகுக்கும் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் இந்த புதிய சட்டங்களை எதிர்க்கின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி), வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (ஏபிஎம்சிஸ்), மாநில கொள்முதல் போன்ற பல ஆதரவு அம்சங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றனர்.  மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.

“அரசின் மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிராக உள்ளன,” என்கிறார் நிலையான மற்றும் குறைந்த ஒலியுடன் கூடிய காற்று கருவியான கொம்பு இசையை காலை முதல் இடைவெளியின்றி வாசித்த நாராயண் கொர்கானா. “இதனால்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம்.” பட்டியல் பழங்குடியினமான கோல் மல்ஹார் சமூகத்தைச் சேர்ந்த கொர்கானா பல்காரின் ஒசர்விரா கிராமத்தில் உள்ள ஒரு ஏக்கருக்கும் அதிகமான வன நிலத்தில் அரிசி, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகிறார்.

ஆசாத் மைதானத்தில் மற்றொரு கொம்பு இசை கலைஞரான 60 வயதாகும் நவ்ஜி ஹடாலையும் சந்தித்தேன். அவர் கடந்த 40 ஆண்டுகளாக வாசித்து வருகிறார். “நான் ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறேன். ஆனால் எனக்கு ஒரு நிலத்திற்கு தான் உரிமை கிடைத்தது,” எனும் அவர் வன உரிமைகள் சட்டம் 2006 ஐ குறிப்பிடுகிறார். இந்த சட்டத்தின் கீழ் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்பதே மகாராஷ்டிரா பழங்குடியின விவசாயிகளின் போராட்டங்களில் முன் வைக்கப்படும் தொடர்ச்சியான குற்றச்சாட்டாகும். “இந்த மூன்றுச் சட்டங்களால், வேளாண்மையில் பல நிறுவனங்களும் நுழையும். அவர்கள் எங்களுக்கு விலையை நிர்ணயிப்பார்கள். எங்களுக்கு அது தேவையில்லை.”

முகப்பு புகைப்படம் : ஊர்னா ராவத்

மொழிப்பெயர்ப்பிற்கு உதவிய பார்த் எம்.என் அவர்களுக்கு நன்றியுடன்

தமிழில்: சவிதா

Oorna Raut

Oorna Raut is Research Editor at the People’s Archive of Rural India.

Other stories by Oorna Raut

Riya Behl is Senior Assistant Editor at People’s Archive of Rural India (PARI). As a multimedia journalist, she writes on gender and education. Riya also works closely with students who report for PARI, and with educators to bring PARI stories into the classroom.

Other stories by Riya Behl
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha