பருத்தி நிலத்தின் ஒரு தனித்தப் பகுதியில்தான் சம்பட் நாராயன் ஜாங்க்ளே விழுந்து இறந்தார்.
மகாராஷ்ட்ராவின் இப்பகுதிகளில் அதை ஆழமற்ற நிலம் என அழைப்பார்கள். கிராமத்திலிருந்து தள்ளியிருக்கும் இந்தத் தனி விவசாய நிலம் அந்த் குலத்துக்கு சொந்தமானது. அலையலையாய் இருக்கும் நிலத்தின் பின்னணியில் பசுமையான குன்று காட்சியளிக்கிறது.
காட்டுப் பன்றிகளிடமிருந்து விளைச்சலை காவல் காக்கவென, இரவுபகலாக நிலத்திலேயே சம்பட் தங்குவார். வெயில் மற்றும் மழையிலிருந்து காத்துக் கொள்ள ஓலை வேயப்பட்டு படுதா தொங்கும் இடத்தில்தான் அவர் தங்கியிருப்பார். கற்கள் நிரம்பிய இப்பரப்பில் இன்னும் அந்த குடிசை இருக்கிறது. எப்போதும் அங்கேயே இருந்து நிலத்தைப் பார்த்துக் கொள்வார் என அண்டைவீட்டார் நினைவுகூருகின்றனர்.
40 வயதுகளிலிருந்த, பழங்குடி விவசாயியான சம்பட், அக்குடிசையில் இருந்து பார்க்கும்போது வளர்ச்சிக் குன்றி காய்களற்ற செடிகளும் முழங்கால் உயர துவரைச் செடிகளும் முழுமையாகத் தெரிந்திருக்கும். கூடவே, முடியாமல் தொடரும் நஷ்டங்களும் பூதாகரமாக தெரிந்திருக்கும்.
அறுவடை தொடங்கி விளைச்சல் ஒன்றுமில்லை என்றதுமே உள்ளூர அவருக்கு இரண்டு மாதங்களிலேயே தெரிந்திருக்க வேண்டும்.கடன்கள் இருந்தன. வீட்டுச் செலவுகளும் இருந்தன. அவரிடம் பணம் இல்லை.
















