“பெண் குழந்தை பிறந்திருக்கிறது”, என்று மருத்துவர் கூறினார்.
இது ஆஷாவின் நான்காவது குழந்தை. ஆனால் நிச்சயமாக இது அவரது கடைசி குழந்தையாக இருக்க முடியாது. மகப்பேறு மருத்துவர் அவரின் தாய் கண்டாபென்னிடம் ஆறுதல் சொன்னதை அவர் கேட்டார்: “அம்மா, நீங்கள் அழாதீர்கள். அவளுக்கு தேவைப்பட்டால் நான் இன்னும் எட்டு முறை கூட சிசேரியன் பிரசவம் மேற்கொள்கிறேன். அவள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் வரை நான் இங்கு இருப்பேன். அவள் என்னுடைய பொறுப்பு.”
இதற்கு முன் ஆஷா பெற்றெடுத்த மூன்று குழந்தைகளும் சிசேரியன் முறையில் பிறந்த பெண் குழந்தைகளே. தற்போது அவர் அகமதாபாத் நகரில் மணிநகர் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனக்கு எடுக்கப்பட்ட ’கருவின் பாலினத்தை கண்டறியும்’ பரிசோதனை முடிவை தன் மருத்துவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். (இத்தகைய பரிசோதனைகள் இந்தியாவில் சட்டவிரோதமானது. ஆனால் நடைமுறையில் பரவலாக இருக்கிறது.) கடந்த பல வருடங்களில் தற்போது நான்காவது முறையாக அவர் கர்ப்பமாக இருக்கிறார். நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கான்பர் கிராமத்திலிருந்து இங்கு தன் தாய் கண்டாபெனுடன் வந்திருக்கிறார். தாய் மற்றும் மகள் இருவரும் ஆறுதல்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். ஆஷாவின் மாமனார் கருத்தடைக்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது அவர்களுக்கு தெரியும். “அது எங்கள் நம்பிக்கைக்கு எதிரானது”, என்கிறார் கண்டாபென்.
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இது ஆஷாவின் கடைசி கருத்தரிப்பாக இருக்காது.
ஆஷா மற்றும் கண்டாபென் இருவரும் பார்வாத் மேய்ச்சல் சமூகத்தை சேர்ந்தவர்கள். அச்சமூகம் பொதுவாக வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை மேய்க்கும் வேலையைச் செய்கிறது. அச்சமூகத்தின் பெரும்பான்மை அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தொல்கா தாலுகாவில் உள்ளனர். அங்குதான் அவர்களின் கான்பர் கிராமம் உள்ளது. அதில் வெறும் 271 வீடுகள் இருக்கின்றன. 1500 க்கும் குறைவான மக்களே உள்ளனர் (2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி). மாடுகளையும் எருமைகளையும் சிறு அளவில் அவர்கள் வளர்க்கின்றனர். சமூக கலாச்சார ஏற்றத்தாழ்வுகளில் மேய்ச்சல் சாதிகளில் மிகவும் தாழ்வான சமூகமாக அச்சமூகம் பார்க்கப்படுகிறது. குஜராத்தின் பட்டியல் பழங்குடியாக பட்டியலிடப்பட்டிருக்கிறது.







