துப்பாக்கிச்சூடு நடத்தப்படவே இல்லை. “காவல்துறையினரால் விவசாயி சுட்டுக்கொலை” என பலவகை தலைப்புச் செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. பஹதுர் ஷா சஃபர் மார்கில் “கொலை” என செய்திகள் பரவின. ஆனால் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த வதந்தி குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி டெல்லியின் புகழ்மிக்க வருமான வரித்துறை அலுவலகம் (ஐடிஓ) நோக்கி வந்த போராட்டக்காரர்களிடையே குழப்பம், கலவரத்தை ஏற்படுத்தியது. இது செங்கோட்டை போன்ற பிற பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுத்தது.
டிராக்டர் ஓட்டி வந்த இளம் விவசாயி ஒருவரை காவல்துறையினர் மிக நெருக்கமாக வந்து சுட்டுக் கொன்றதாக ஒரு கதை நிலவியது. சமூக ஊடகங்களும் சரிபார்க்காமல் அனைத்து திசைகளிலும் வதந்தியைப் பரவவிட்டன. சில தொலைக்காட்சி சேனல்களிலும் இச்செய்தி வந்தது. காவல்துறையினரின் வன்முறை, துப்பாக்கிச்சூடு என மக்களும் கண்டித்தனர். ஐடிஓ சந்திப்பின் அருகே இருந்த போராட்டக்காரர்களும் எல்லா இடத்திற்கும் சிதறி ஓடினர்.
உண்மையில் 45 வயது நவ்நீத் சிங் என்பவர் டிராக்டர் ஓட்டிவந்தபோது கவிழ்ந்ததில் உயிரிழந்தார் - யார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. இச்செய்தி தெளிவுப்படுத்தப்பட்டபோதும் அதற்குள் செங்கோட்டையில் வன்முறை பரவிவிட்டது. இதனால் 2020 செப்டம்பர் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மூன்று சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி தடைபட்டது.
இந்த நாள் வேறுவிதமாக விடிந்தது என்பதுதான் துயரமானது.
இருள், குளிருக்கு பிறகு இந்தியாவின் 72ஆவது குடியரசு தின கொண்டாட்டம் கதகதப்பான வெயிலில் தொடங்கியது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேசிய தலைநகர எல்லையில் போராடி வரும் விவசாயிகளும் அவர்கள் திட்டமிட்ட வழித்தடத்தில் அமைதியான டிராக்டர் பேரணியை நடத்தி வரலாறு படைக்க இருந்தனர். டெல்லியின் மத்திய பகுதியான ராஜ்பாத்திற்கு மதியம் ஊர்வலம் வந்த பிறகு அவர்களுக்கு சிங்கு, டிக்ரி, காசிபுர் ஆகிய மூன்று எல்லைகள் தடுக்கப்பட்டன.
இந்த அணிவகுப்புகள் குடியரசு தினத்தின் மிகப் பெரிய குடிமக்கள் கொண்டாட்டங்களாக இருந்தன. ஆனால் அவையெல்லாம் மாலையில் பொதுமக்கள் கவனத்தையும் ஆர்வத்தையும் இழந்தன.







