செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஒருநாள் கோரமாராத் தீவுக்கு வந்த ஒரு படகு பரபரப்பாக இருந்தது.. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் படகிலிருந்து இறங்கிச் செல்லும் வேகத்தில் இருந்தனர். மழைவெள்ளத்தால் வேறு இடங்களில் இருக்கும் உறவினர்களின் வீட்டில் தங்கியிருந்துவிட்டு, நீர் வற்றியதும் வீடுகளுக்கு அவர்கள் திரும்புகின்றனர். கக்த்வீப் நிலத்திலிருந்து தீவுக்கு படகில் 40 நிமிடங்கள் ஆகும். மாதத்துக்கு இருமுறை படகு இரு பக்கமும் சென்று வருகிறது. ஆனால் இந்த வழக்கம், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் இருக்கும் சிறுத் தீவில் வசிக்கும் கோரமாரா கிராமவாசிகளின் நீண்டகாலப் போராட்டத்தை மறைத்துவிடுகிறது.
கடல் மட்ட உயர்வு, புயல்கள், கனமழை முதலிய காலநிலை மாற்ற நிகழ்வுகள் கோரமாரா மக்களின் வாழ்க்கைகளை கடினமாக ஆக்கியிருக்கிறது. பல காலமாக நேர்ந்த வெள்ளமும் மண் அரிப்பும் தனித்திருக்கும் அத்தீவை ஹூக்ளியின் முகத்துவாரமாக மாற்றியிருக்கிறது.
யாஸ் புயல் மே மாதத்தில் தாக்கியபோது சுந்தரவனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் சாகர் ஒன்றியத்தில் இருக்கும் கோரமாராவும் ஒன்று. மே 26ம் தேதி புயலுடன் பொங்கிய கடல் தீவின் கரைகளைக் கடந்து மொத்தத் தீவையும் 15-20 நிமிடங்களில் வெள்ளத்தில் மூழ்கடித்தது. 2020ம் ஆண்டின் அம்ஃபான் புயல் மற்றும் 2019ம் ஆண்டின் புல்புல் புயலால் பாதிக்கப்பட்டிருந்த தீவுவாசிகள் மீண்டும் அழிவைச் சந்தித்தனர். அவர்களின் வீடுகள் பிய்த்தெறியப்பட்டு நெல், வெற்றிலைகள் இருந்த சேமிப்புக் கிடங்குகளும் சூரியகாந்தி நிலங்களும் வெள்ளத்தில் அழிந்தன.
காசிமாரா படகுத்துறைக்கு அருகே இருக்கும் அப்துல் ராஃப்ஃபின் வீடும் புயலில் அழிக்கப்பட்டது. “மூன்று நாட்கள் உணவில்லை. மழை நீர் குடித்து உயிர் வாழ்ந்தோம். பிளாஸ்டிக் போர்வைகள்தான் பாதுகாப்புக்கு இருந்தன,” என்கிறார் தையற்காரரான ராஃப். 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொல்கத்தாவில் வேலை பார்க்கிறார். அவரும் அவருடைய மனைவியும் நோய்வாய்ப்பட்டபோது, “எங்களுக்கு கோவிட் வந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர்,” என்கிறார் அவர். “பலர் கிராமத்திலிருந்து தப்பி விட்டனர்,” என்கிறார். “நாங்கள் அங்கேயே இருந்தோம். பாதுகாப்பாக தப்பிக்க வழி இல்லை.” ஒன்றிய வளர்ச்சி அதிகாரிக்கு தகவல் சொல்லப்பட்ட பிறகுதான் ராஃப்ஃபுக்கும் அவரது மனைவிக்கும் மருத்துவம் கிட்டியது. “எப்படியேனும் கக்த்வீப்புக்கு வந்து விடுமாறு ஒன்றிய வளர்ச்சி அதிகாரி கூறினார். அங்கு அவசர ஊர்தி வசதிகளை அவர் செய்து வைத்திருந்தார். கிட்டத்தட்ட 22,000 ரூபாய் (மருத்துவத்துக்கு) செலவழித்தோம்.” ராஃப்ஃபும் அவரது குடும்பமும் அப்போதிருந்து தீவின் முகாமில்தான் வசிக்கின்றனர்.
வீடுகள் அழிந்த பலரும் தற்காலிக முகாம்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மந்திர்தலா கிராமவாசிகள், தீவிலேயே உயரமான பகுதியான மந்திர்தலா சந்தைக்கு அருகே இருக்கும் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். சிலர் அருகே இருக்கும் குறுகிய சாலையில் முகாம் அமைத்திருக்கின்றனர். ஹத்கோலா, சுன்புரி மற்றும் காசிமாரா பகுதிகளைச் சேர்ந்த 30 குடும்பங்கள், கோரமாராவுக்கு தெற்கே இருக்கும் சாகர் தீவு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் இடம் மாறுவதற்கென அங்கே நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.



























