குழந்தையாக இருக்கும்போது, தந்தையும் தாத்தாவும் சிறுவர்களுக்கு பயிற்சி அளிப்பதை ஜன்னல் வழியாக ரஜிதா பார்த்திருக்கிறார். ஏன் தன்னால் பங்குபெற முடியவில்லை என அவருக்கு தெரிந்திருக்கவில்லை. குறிப்பாக பொம்மைகள் சிறுமியின் கவனத்தை ஈர்த்தது. பாடலின் இசையும் அவரின் செவிகளுக்கு ஈர்ப்பாக இருந்தது.
“பொம்மலாட்டத்தின் மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பை என் தாத்தா கவனித்தார்,” என்கிறார் 33 வயது ரஜிதா. “பாடல்களை சொல்லிக் கொடுக்க முன் வந்தார்.”
ரஜிதா புலவர் ஷொர்னூரில் குடும்பத்த்துக்கு சொந்தமாக இருக்கும் ஸ்டுடியோவிலுள்ள ஒரு மரபெஞ்சில் அமர்ந்து கொண்டு தோல்பாவைக்கூத்து பொம்மை ஒன்றுக்கு முகத்தை செதுக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன்னிருக்கும் மேஜையில் குத்தூசிகள், உளிகள் மற்றும் சுத்தியல்கள் போன்ற கருவிகள் இருந்தன.
அது ஒரு மதியப்பொழுது. ஸ்டுடியோவில் அமைதியாக இருந்தது. பொம்மைகள் செய்யப்படும் கொட்டகையில் ரஜிதாவுக்கு அருகே உள்ள ஃபேன் எழுப்பும் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. வெளியே, திறந்த மாடியில், பொம்மை செய்ய பயன்படும் தோல் பாய்கள் வெயிலில் காய வைக்கப்பட்டிருக்கின்றன.
“நவீன கருப்பொருட்களை கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கான பொம்மைகள் இவை,” என்கிறார் ரஜிதா, அவர் செய்து கொண்டிருக்கும் பொம்மையை காண்பித்து. தோல்பாவைக்கூத்து, இந்தியாவின் மலபார் கரையோரத்தின் பாரம்பரியக் கலை. பத்ரகாளிக்கு கொண்டாடப்படும் வருடாந்திர விழாவில் கோவில்களில் நடத்தப்பட்ட கலை இது














