பி.பூங்கொடி
மீனவப் பெண்,
செருத்தூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு
எனக்குத் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதிருந்து என் சொந்த ஊரிலுள்ள கடற்கரைக்குக் கூட நான் சென்றதில்லை. ஆனால், என்னுடைய கேமரா என்னை கடற்கரைக்கு இட்டுச் சென்றது. படகுகளை எப்படி கடலுக்குள் தள்ளுகிறார்கள் என்பதையும் எப்படி மீன் பிடிக்கிறார்கள் என்பதையும் இந்த சமுதாயத்துக்கு பெண்கள் அளிக்கும் பங்கையும் நான் ஆவணப்படுத்தினேன்.
ஒருவருக்கு சும்மா படங்களை கிளிக் செய்வதற்குப் பயிற்சி தருவது எளிது. ஆனால், படங்களின் மூலமாக கதைகளைச் சொல்ல பயிற்றுவிப்பது சின்ன விஷயம் அல்ல. பழனி அதை எங்களுக்குச் செய்தார். மக்களைப் படம் எடுப்பதற்கு முன்பாக அவர்களிடம் எப்படி தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பயிற்சியின்போது அவர் சொல்லிக் கொடுத்தார். (அதன் பிறகு) மக்களைப் படம் பிடிப்பதற்கான நம்பிக்கை எனக்குக் வந்தது.
மீன்களை விற்பது, சுத்தம் செய்வது, ஏலம் விடுவது என மீனவ சமுதாயத்தின் வெவ்வேறு தொழில்களை நான் ஆவணப்படுத்தினேன். இந்த சமுதாயப் பெண்களின் வாழ்க்கை முறையைப் பார்க்கவும், புரிந்துகொள்ளவும் இந்த வாய்ப்பு எனக்கு உதவியது. இந்த வேலையில் அவர்கள், மீன்கள் நிறைந்த கூடையை தங்கள் தலைகளில் சுமந்துசெல்ல வேண்டியிருக்கிறது.
குப்புசாமி பற்றிய புகைப்படக் கட்டுரையில் அவரது வாழ்க்கையைப் பற்றி – அவர் எப்படி எல்லையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் சுடப்பட்டார் என்பதைப் பற்றி - தெரிந்துகொண்டேன். இதனால், அவர் தனது கையையும் காலையும், பேச்சையும் இழந்தார்.
துணி துவைப்பது, தோட்ட வேலை செய்வது, சுத்தம் செய்வது என்று அவர் தனது தினசரி வேலைகளை செய்வார். அவரை சென்று பார்த்து அவரது வேலைகளில் உடனிருந்தேன். கையையும் காலையும் பயன்படுத்த முடியாத நிலையில், அவர் எதிர்கொள்ளவேண்டிய சிரமங்களை நான் புரிந்துகொண்டேன். சுவாரசியமில்லாத, சலிப்பூட்டும் தினசரி வேலைகளை செய்வதன் மூலம் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை அவர் காட்டினார். அவரது உடல் குறைபாடு, வெளியுலகுக்கு செல்லும் வாய்ப்பை அவருக்கு மறுப்பது குறித்து அவருக்குக் கவலை ஏதுமில்லை. சில நேரங்களில் தனக்குத் தோன்றும் வெறுமை, செத்துப்போகலாம் என்று கருதவைக்கும் என்கிறார் அவர்.
மீனவர்கள், மத்தி மீன்கள் பிடிப்பதைப் பற்றி ஒரு புகைப்படத் தொடர் செய்தேன். மத்தி மீன்கள் பொதுவாக நூற்றுக் கணக்கில் பிடிபடும் என்பதால் அவற்றை சமாளிப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும். எப்படி ஆண்களும், பெண்களும் சேர்ந்து உழைத்து, இந்த மீன்களை வலைகளில் இருந்து வெளியே எடுத்து அவற்றை ஐஸ் பெட்டிகளில் சேமிக்கிறார்கள் என்பதை நான் ஆவணப்படுத்தினேன்.
பெண் புகைப்படக் கலைஞராக இருப்பது சவாலானது. இதே சமூகத்தில் இருந்து வந்திருந்தாலும்கூட ‘ஏன் அதைப் படம் எடுக்கிறாய்? ஏன் பெண்கள் புகைப்படம் எடுக்கவேண்டும்?’ என்பது போன்ற கேள்விகளை நாங்கள் எதிர்கொள்கிறோம்.
தன்னைப் புகைப்படக் கலைஞர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த மீனவப் பெண்ணுக்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய சக்தி, பழனி அண்ணா.