நம்முடம் பேசிக்கொண்டிருக்கும் போதும், முகமது அஸ்கரின் கைகள், இயந்திரம் போல, மிகத் துல்லியமாக வேலை செய்கின்றன.
“குச் பல் கே லியே பீ ஹாத் ருக் கயா தோ காம் கராப் ஹோ ஜாயேகா [நான் எனது கைகளை சிறிது நேரம் நிறுத்தினாலும் கூட, வேலை வீணாகி விடும்],” என்று மூன்று நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கலையைத் தொடர்ந்து வரும் இந்த 40 வயது கைவினைஞர் கூறுகிறார்.
சாப்பா காரிகரான (கைகளால் வடிவங்களை அச்சிடும் கைவினைஞர்) அஸ்கர், ஒரு தசாப்தமாக இந்தக் கலையை செய்து வருகிறார். மர அச்சு கொண்டு அச்சிடும் மற்ற கைவினைஞர்கள் போல் அல்லாமல், அஸ்கர் மெல்லிய அலுமினியத் தகடுகளைக் கொண்டு உலோக பூக்களையும் மற்ற வடிவங்களையும் தனித்துவமாக ஆடைகளில் அச்சிடுகிறார்.
தபக் என்னும் இந்த மெல்லிய அலுமினியத் தகடை, பெண்களின் புடவைகள், ஷராராக்கள், லெஹங்காக்கள் போன்ற மற்ற ஆடைகளில் அச்சிடும் போது, ஒரு விழாக்கோல உணர்வை கொணர்கிறது. அஸ்கருக்கு பின்னால் இருக்கும் அலமாரியில், சாதாரான ஆடைகளை, விழாக்கால ஆடைகளாக மாற்றும் பல நுண்ணிய வடிவங்களைக் கொண்ட டசன் கணக்கான மர அச்சுகள் உள்ளன.













