ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் ஆகஸ்ட் 5ஆம் தேதி மல்யுத்த வீரர் ரவி தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்று அரங்கில் நிற்பதை கண்டு ருஷிகேஷ் கக்டே உணர்ச்சி வசப்பட்டார். இதுபோன்று அவர் அண்மையில் இவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்திருக்கவில்லை.
கோவிட்-19 பெருந்தொற்று 2020 மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து 18 மாதங்களாக மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மல்யுத்த வீரரான 20 வயது ருஷிகேஷ் விரக்தியில் உள்ளார். எதிர்காலத்தில் இச்சூழல் மாறுவதாக தெரிவதில்லை. “இது மிகவும் மனஅழுத்தம் தருகிறது,” என்கிறார் அவர். “என்னுடைய நேரம் கரைவதாக உணர்கிறேன்.”
விரக்தி கலந்த புன்னகையுடன் பிரச்னைகளை அவர் பேசத் தொடங்குகிறார்: “மல்யுத்த போட்டி பயிற்சியுடன் சமூக இடைவெளியையும் எப்படி கடைபிடிப்பது?”
உஸ்மானாபாத்தின் புறநகரில் ஹட்லாய் குஸ்தி சங்குல் எனும் மல்யுத்த அகாடமியில் ருஷிகேஷ் தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள நண்பர்களுடன் சேர்ந்து டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை உன்னிப்பாக கவனித்தார். ஆகஸ்ட் 8ஆம் தேதியுடன் போட்டிகள் நிறைவுற்றபோது இந்தியா மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றிருந்தது - அவற்றில் இரண்டு மல்யுத்தத்தில் வென்றவை.
ஆண்கள் 57 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் தாஹியாவின் வெள்ளிப் பதக்கமும், 65 கிலோ எடை பிரிவில் பஜ்ரங் புனியாவின் வெண்கல பதக்கமும் மல்யுத்த குடும்பங்களைச் சேர்ந்த ருஷிகேஷ் போன்ற வீரர்களுக்கு ஊக்கமளித்துள்ளது. டோக்கியோ போட்டியில் வென்ற பிறகு பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவில் பேசிய ஹரியானாவின் நாஹ்ரி கிராமத்தின் விவசாயி மகனான 23 வயது தாஹியா, தனது வெற்றிக்காக குடும்பத்தினர் நிறைய தியாகம் செய்தனர் என்றார். ஆனால் இதுவரை மூன்று ஒலிம்பியன்களை கொடுத்துள்ள அக்கிராமம் இப்போதும் அடிப்படை வசதிகளின்றியே இருக்கிறது. “இக்கிராமத்திற்கு எல்லாமே தேவை... நல்ல பள்ளி, அத்துடன் விளையாட்டு வசதிகளும்,” என்கிறார் அவர்.












