”நீங்கள் எல்லாம் எப்படி இருக்கிறீர்கள்? அங்கே என்ன நடக்கிறது? இது இன்னும் எத்தனை நாளுக்குத் தொடரும்?” - மகனிடம் தொலைபேசியில் விசாரித்தார், செனகொண்டா பாலசாமி. "எல்லை மீறிப் போய்விட்டதுதானே? ஊருக்குள் போலீசு இருக்கிறதா? நம் மக்கள் ( கூலி உழவர்கள்) வேலைக்குப் போகவில்லையா? - என அடுக்கினார்.
தெலுங்கானாவின் வனபர்தி மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊரான கெத்தெபள்ளியில் இருந்து கடந்த நவம்பரில் புறப்பட்டார், பாலசாமி. அவருடன் வேறு நான்கு இடையர்களும் சேர்ந்துகொண்டனர். கிட்டத்தட்ட வெள்ளாடும் செம்மறியாடுமாக 1,000 ஆடுகளை இவரே பராமரித்துக்கொள்ள வேண்டும் (ஒரு ஆடுகூட அவருக்குச் சொந்தமானது இல்லை). எல்லா ஆடுகளுக்கும் தீவனம்தேடியபடி அவற்றுடன் அவர் பயணித்துக்கொண்டு வருகிறார்.
அவரும் மற்ற மந்தைக்காரர்களும் தெலுங்கானாவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள கால்நடை மேய்க்கும் யாதவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கெத்தெபள்ளியிலிருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள கோப்போளி கிராமத்தை மார்ச் 23 அன்று அடைந்திருந்தனர். அதாவது, ஒட்டுமொத்த நாடே முடக்கத்துக்குள் போனதற்கு சரியாக இரண்டு நாள்களுக்கு முந்தைய நாள் அது!
நலகொண்டா மாவட்டத்தின் குரும்போடு மண்டலத்தில் உள்ள கோப்போளியில், நாடு முடக்கத்துக்குப் பிறகு, உணவுப்பொருள்களை வாங்குவது கடினமாகிவிட்டது. அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் மற்றும் பிற மளிகைப் பொருள்களை அவர்கள் சில நாள்களுக்கு ஒரு முறை ஓரளவுக்கு மட்டும் வாங்கிவைத்துக்கொள்வார்கள்.
பொதுப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதாலும் மாறிமாறி வரும் நாடுமுடக்க நிலைமைகளாலும் இந்த மந்தைக்காரர்கள் பாடு திண்டாட்டமாகிவிட்டது. ஆடுகளுக்கு வேண்டிய மருந்துகளை வாங்குவது, வழக்கம்போல அவ்வப்போது அவரவர் கிராமங்களுக்குப் போய் குடும்பத்தினரைக் கண்டுவருவது, செல்பேசிக் கட்டணம் ஆட்டுமந்தைக்கான புது மேய்ச்சல் பகுதியைப் பார்த்துவைப்பது என எதையுமே செய்யமுடியாமல் போய்விட்டது.








