இரவுணவை முடித்த பிறகு எப்போதும் போல தொலைக்காட்சி பார்க்கக் கூடாது என முடிவெடுத்தாள். இன்று இரவு சாப்பாட்டுக்கு ஸ்கெஸ்வான் சாஸ்ஸில் காய்கறிகளும் வேண்டும் என குழந்தைகள் கேட்டிருந்தனர். காய்கறிக்காரரிடம் சிவப்பு குடைமிளகாயும் இல்லை. மஞ்சள் குடைமிளகாயும் இல்ல. “மண்டி பந்த் கர் தியா மேடம். லாக்டவுன் தொ ஹை ஹி, உபர் சே கர்ஃபியூ. சப்சி கஹான்சே லாயென்? யே சப் பி அபி கெத் செ லெ கெ ஆதே ஹை (மார்க்கெட் மூடியிருக்கிறது மேடம். இந்த ஊரடங்கு நேரத்தில் எங்கே போய் காய்கறி வாங்குவது? இந்த காய்கறியை எல்லாம் விவசாய நிலங்களிலிருந்து வாங்கி வருகிறேன்),” என பழைய காய்கறிதான் இருக்கிறது என்ற அவளின் புகாருக்கு அவன் புலம்பினான்.
அதற்குப் பிறகு வாழ்க்கையின் சோதனைகளை பற்றி அவன் பேச ஆரம்பித்ததும் அவள் கவனிப்பதை நிறுத்தினாள். அவளுடைய மனம் மாலை உணவை எப்படி ருசியாக சமைப்பது என யோசிக்கத் தொடங்கியது. சைனீஸ்-தாய் குழம்பு மற்றும் கோக் என்ற அவளது யோசனை குழந்தைகளை மாலை நேர உணவில் அமைதிப்படுத்தியதில் சந்தோஷமடைந்தாள். தொலைக்காட்சி பார்ப்பது அவளுக்கு சமீப நாட்களாக சந்தோஷத்தை கொடுக்கவில்லை.
செய்திச் சேனல்களை அவள் வெறுத்தாள். திரும்பத் திரும்ப ஒரே படங்கள்தான் காண்பிக்கப்படுகின்றன. குடிநீரின்றி தவிக்கும் ஏழை மக்கள், பாதுகாப்பு இல்லாத துப்புரவு பணியாளர்கள், வீடுகளுக்கு செல்லும் வழிகளிலும் நகரங்களில் மாட்டிக்கொண்டும் பசியால் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், மருத்துவ வசதி மற்றும் உணவு இன்றி இறப்பவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் சிலர் மற்றும் தெருக்களில் பல கோரிக்கைகளை முன் வைத்து போராடுபவர் என பல காட்சிகள்.
எவ்வளவு நேரம்தான் மனம் பேதலித்து செயல்படும் பூச்சிகளை பார்த்துக் கொண்டிருப்பது? சமையற்கலையில் புதியவைகளை விவாதிக்கும் வாட்ஸ் அப் குழுக்களுக்கு அவள் திரும்பி விடுவாள். சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை உள்ளிடுகிறாள். இன்னொரு குழுவில் மும்பையின் ப்ரீச் கேண்டி க்ளப்புக்கருகே இருக்கும் கடலில் தோன்றும் டால்ஃபின்கள், நவி மும்பையின் ஃப்ளமிங்கோ பறவைகள், கோழிக்கோட்டு சாலைகளில் அலையும் பூனை வகை மிருகம், சண்டிகரில் தென்பட்ட சம்பர் வகை மான் முதலிய காணொளிகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். திடீரென மொபைல் ஃபோனிலிருந்து வரிசையாக சிவப்பு எறும்புகள் வருவதை அவள் பார்த்தாள்…..



