ஒரு கார் அவர் அருகே நின்றபோது, அவர் பாதி முடிக்கப்பட்ட குதிரை பொம்மையை தலையணையாக வைத்து, சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த கார் நின்ற சத்தம் அவரை எழுப்பியது. 60 வயதான கைவினை கலைஞர் காரில் அமர்ந்திருந்தவரிடம் ஓடிச்சென்று, அதன் உறுதித்தன்மையை காட்டுவதற்காக குதிரை பொம்மையின் மீது அமர்ந்து காட்டுகிறார். நிச்சயமாக 300 ரூபாயிலிருந்து பேரம் நடந்தது. வாடிக்கையாளர் 200 ரூபாயாக குறைத்தார். அதன் மூலம் ஜீவாரா ராம் அன்றைய நாளின் முதல் மற்றும் இறுதி விற்பனையை மாலை 4 மணிக்கு செய்து முடித்தார்.
அவர் ஓய்வெடுக்கும் இடத்திற்கு அருகில்தான் அவர்கள் வசிக்கும் குடிசை உள்ளது. ஜீவாரா ராமின் வீடு மூங்கில் குச்சிகளில் தார்ப்பாய் மற்றும் பிளாஸ்டிக் ஷீட்களால் மூடப்பட்டது. அவர் அங்கு அவரது மனைவி புக்லிபாய் மற்றும் அவர்களின் 2 மகன்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளோடு வசிக்கிறார். அவர்களின் குடிசை, அதே போன்ற 40 – 50 குடிசைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு மேற்கு ஜெய்பூரின் அம்பாபரி தர்கா பகுதியில் அமனீஷா ஓடையின் மீதுள்ள பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள குடும்பத்தினர் அனைவரும் பாட் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். (ராஜஸ்தானின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்), இவர்கள் அனைவரும் காய்ந்த புல் அல்லது வைக்கோலை வைத்து யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் மற்றும் பல அலங்கார பொருட்கள் செய்பவர்கள்.
“நாகவுர் மாவட்டத்தின் திட்வானா நகரில் இருந்து எனது தந்தை ஜெய்பூருக்கு வந்த ஆண்டு எனக்கு நினைவில் இல்லை“ என்று ஜீவாரா ராம் கூறுகிறார். பொம்மை தயாரிக்கும் வேலையில் அவரது முக்கியமான பணியாக கருதுவது வைக்கோலை வைத்து செய்யப்போகும் உருவத்தினுடைய எலும்பு கூட்டை உருவாக்குவதே. அதை செய்யும்போது, மெல்லிய மூங்கில் குச்சிகளை உள்ளே செலுத்தி, அந்த கூட்டை நன்றாக பிடித்துக்கொள்ளும்படி செய்துவிடுகிறார். பின்னர் காய்ந்த புற்கள் வைத்து, வயர் மற்றும் நூலைக்கொண்டு கட்டுகிறார். பின்னர், அதை சிவப்பு வெல்வெட் துணியை வைத்து தைப்பதற்கு புக்லிபாயிடம் கொடுக்கிறார். பின்னர் அது தங்க நிற லேசால் அலங்கரிக்கப்படும். அவர்களுக்கு ஒரு பொருள் செய்வதற்கு 2 முதல் 3 மணி நேரம் ஆகிறது.
அவர்களுக்கு வீடு, வேலை செய்யும் இடம், செய்து முடித்த பொருட்களை சேமிக்கும் கிடங்கு என அனைத்துமே அவர்கள் அமர்ந்திருக்கும் குடிசைதான். ஒவ்வொரு முறையும் போலீஸ் மற்றும் ஜெப்பூர் நகர அதிகாரிகள் அவர்களின் குடியிருப்புகளை அகற்றியபின்னர், இந்த தற்காலிக குடிசையை அவர்கள் 4 முறைக்கு மேல் மாற்றிவிட்டார்கள். இதை சட்டவிரோதமாக கருதியதால் அவ்வாறு செய்கிறார்கள். இவர்கள் தற்போது தங்கும் இடத்தில், தண்ணீருக்கு டேங்கர் லாரிகளையும், அருகில் உள்ள கடைகளையும், பொது கழிவறைகளை அல்லது அமனீஷான் ஓடைக்கு அருகில் உள்ள திறந்தவெளிகளையும் பயன்படுத்துகிறார்கள். ஒளிக்கு, பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய லைட்களை பயன்படுத்துகிறார்கள்.
ஜீவாரா ராம் குடும்பத்தைப்போல் பாலத்திற்கு அருகில் வசிக்கும் அத்தனை குடும்பத்தினருக்கும் சொந்தமாக விளை நிலங்கள் கிடையாது. அதில் பெரும்பாலானோர் ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் நாக்பூர் மாவட்டங்களின் கிராமங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களின் பாரம்பரிய தொழில் தோற்பாவை கூத்துக்கு பயன்படுத்தப்படும் மரப்பொம்மைகள் செய்து, அதை வைத்து தோற்பாவை கூத்து நடத்துவது. ஆனால், தற்போது இவர்கள் பெரும்பாலும் காய்ந்த புற்கள் மற்றும் வெல்வெட்டால் அலங்காரப்பொருட்கள் செய்கிறார்கள்.








