இந்த நேரத்துக்கு எல்லாம் ஷம்சுதின் முல்லா வயல்வெளிகளில் இருப்பார். எஞ்சின்களையும் பம்புகளையும் சரிசெய்து கொண்டிருப்பார்.
ஊரடங்கின் இரண்டாவது நாளான மார்ச் 26ம் தேதி சுல்குட் கிராமத்திலிருந்து (கொல்காப்புர் மாவட்டத்தின் காகல் தாலுகாவில் இருக்கிறது) இரு சக்கர வாகனத்தில் நம்பிக்கை வறண்டு போய் ஒரு விவசாயி வீடு தேடி வந்த போது ஷம்சுதின் முல்லா வெளியே கிளம்பினார். “என்னை அவருடைய வயலுக்கு அழைத்துச் சென்றார். டீசலில் இயங்கும் தண்ணீர் பம்பு செட்டின் எஞ்சினை நான் சரி செய்து கொடுத்தேன்”. ஷம்சுதின் அப்படி செய்திருக்காவிட்டால், கரும்பு விளைச்சலுக்கு நீர் பாய்ச்ச வழியின்றி விவசாயி திணறியிருப்பார்.
பத்து வயதில் பழுது நீக்கும் வேலை பார்க்கத் தொடங்கி கடந்த 74 ஆண்டுகளில் இப்போதுதான் இரண்டாவது முறையாக ஒரு இடைவெளி எடுத்திருக்கிறார் 84 வயதான ஷம்சுதின். 2019ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் முதல் இடைவெளி எடுத்திருந்தார். ரத்தக்குழாய் அடைப்பு நீக்கும் அறுவை சிகிச்சைக்காக எடுக்கப்பட்ட இடைவெளி.
எழுபது ஆண்டுகளில் ஆழ்துளை பம்புகளிலிருந்து டீசல் எஞ்சின்கள் வரை 5000க்கும் மேலான எஞ்சின்களை ரிப்பேர் செய்து நிபுணத்துவம் கண்டிருக்கிறார் ஷம்சுதின். கர்நாடகாவில் உள்ள பெலாகவி மாவட்டத்தின் சிக்கோடி தாலுகாவிலிருக்கும் அவரது வீடே இயந்திரங்கள் பழுதாகி தவிக்கும் விவசாயிகளுக்கு உதவி மையமாக இருந்திருக்கிறது. வழக்கமான வருடங்களில் அதிகமான பணிகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் அவருக்கு இருக்கும். அந்த காலகட்டத்தில் பல ரகங்களை சேர்ந்த 30 எஞ்சின்கள் வரை சரி செய்திருப்பதாக குறிப்பிடுகிறார். ஒவ்வொரு இயந்திரத்துக்கும் 500 ரூபாய் கட்டணம் என்றளவுக்கு சம்பாதித்திருக்கிறார். தற்போது அந்த காலகட்டம்தான் ஊரடங்கால் பாதிப்படைந்திருக்கிறது.
பிப்ரவரி மாதத்திலும் மார்ச் மாத தொடக்கத்திலும் அவர் சம்பாதித்த 5000 ரூபாயிலும் அரசு அறிவிக்கும் இலவச அரிசி, பருப்பு உதவியிலும் மட்டுமே அவருடைய குடும்பம் தற்போது பிழைத்துக் கொண்டிருக்கிறது.












