திரௌபதி சபர் கண்ணீரை அடக்க முடியாமல் புடவையின் நுனியால் கண்களைத் துடைத்துக் கொண்டே இருக்கிறார். அவரது பேரன்களான மூன்று வயது கிரீஷ்ஷும் ஒன்பது மாத குழந்தை விராஜ்ஜும் ஒடிசாவின் குடாபெலி கிராமத்திலுள்ள அவரது வீட்டிற்கு வெளியே அமைதியாக விளையாடுகிறார்கள். தனது பேத்தி துல்சாவின் மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் 65 வயது மூதாட்டிக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆறுதல் கூற முயலுகின்றனர்.
"இப்போது யாரை 'எங்கள் மகள்' என்று அழைப்பது?" என அவர் பொதுவாகக் கேட்கிறார்.
நுவாபாடா மாவட்டத்தின் காரியார் ஒன்றியத்தில் பாதி கட்டி முடிக்கப்பட்ட செங்கல் வீட்டின் முன் ஒரு பிளாஸ்டிக் பாயில் அமர்ந்து, சபார் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த துல்சாவின் குடும்பம், அவர்களின் திடீர் இழப்பை சமாளிக்க முயற்சிக்கிறது. பெற்றோரான தாய் பத்மினியும் தந்தை தேபானந்த்தும் அவர்கள் மகளின் கைக்குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். குறிப்பாக கைக்குழந்தை விராஜ். “நானும் என் மருமகள் பத்மினியும் மாறி மாறி இந்தக் குழந்தைகளை கவனித்து வருகிறோம்” என்றாள் திரௌபதி.
குழந்தைகளின் தந்தை துல்சாவின் கணவர் போசிந்து அருகில் இல்லை. தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள ரங்காபூர் என்ற கிராமத்தில் 500 கிலோமீட்டர் தெற்கே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். அவர் தனது தாயார் மற்றும் துல்சாவின் தங்கை தீபாஞ்சலியுடன் டிசம்பர் 2021-ல் சூளையில் ஆறு மாதங்கள் வேலை செய்வதற்காக சென்றிருந்தார். அவர்கள் நாளொன்றுக்கு சுமார் ரூ.200 வருமானம் ஈட்டச் சென்றிருந்தார்கள்.
ஜனவரி 24, 2022 அன்று இரவு, 25 வயது துல்சா சபர் குடாபெலியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சனாடமால் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்தார். இரவு 8 மணியளவில் கடுமையான வயிற்று வலி இருப்பதாக புகார் கூறினார். "நான் அவளை காரியாரில் [நகரில்] உள்ள துணை-பிரிவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்," என்று அவரது 57 வயது மாமனார் தஸ்மு சபர் கூறுகிறார். அங்குள்ள மருத்துவர், நிலைமை மோசமாக இருப்பதாகவும், நுவாபாடாவில் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குச் செல்லும்படி கூறினார். ஆனால் நாங்கள் சென்றடைவதற்குள் துல்சா இறந்துவிட்டாள்.”








