தாதர் நிலையத்தை ரயில் அடையும் போது, தனது பழைய புடவைகளில் கட்டி வைத்த இரண்டு பெரிய இலை மூட்டைகளை ஒவ்வொன்றாக நடைபாதையில் ரயில் நிற்பதற்குள் வீசுகிறார். ஒவ்வொன்றும் தலா 35 கிலோ எடை இருக்கும். “ரயில் நிற்பதற்குள் சரக்கை நாங்கள் வீசாவிட்டால் அவ்வளவு சுமையை தூக்கிக் கொண்டு இறங்குவது சிரமம். ஏராளமானோர் ரயிலில் ஏற காத்திருப்பார்கள்,” என்கிறார் அவர்.
நடைபாதையில் வீசிய கட்டுகளில் ஒன்றை துளசி வேகமாக சென்று தலைக்கு மேல் சுமந்து நிலையத்திற்கு வெளியே உள்ள பூச்சந்தையை நோக்கி கூட்டத்தில் இடிபட்டுக் கொண்டு செல்கிறார். அங்கு அவர் வழக்கமாக வைக்கும் இடத்தில் ஒரு கட்டை வைக்கிறார். மீண்டும் உள்ளேச் சென்று இரண்டாவது கட்டையும் எடுத்து வருகிறார். “ஒரே நேரத்தில் என்னால் ஒரு கட்டைத் தான் சுமந்து வர முடியும்,” என்கிறார் அவர். இரு கட்டுகளையும் பூச்சந்தைக்கு கொண்டு வருவதற்கு அவருக்கு சுமார் அரை மணி நேரம் ஆகிறது.
துளசியின் அன்றாட 32 மணி நேர தொடர் பணிகளில் இது ஒரு சின்ன விஷயம். இச்சமயத்தில் அவர் குறைந்தது 70 கிலோவை கிட்டதட்ட 200 கிலோமீட்டர் மொத்தமாக பயணித்து, கொண்டு வருகிறார். 32 மணி நேர தொடர் வேலையின் இறுதியில் அவருக்கு ரூ.400 கிடைக்கிறது.









