“அன்றைய மதியவேளையில் நானோ என் குழந்தையோ உயிர் பிழைப்போமோ என எனக்கு உறுதியாக தெரியவில்லை. நீர்க்குடம் உடைந்துவிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மருத்துவமனை இல்லை. சுகாதார ஊழியரும் இல்லை. ஷிம்லா மருத்துவமனைக்கு நான் செல்லும் வழியில் ஜீப்பில் வலி ஏற்பட்டது.. நிச்சயமாக என்னால் காத்திருந்திருக்க முடியாது. அங்கேயே பொலெரோவிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தேன்.” ஆறு மாதங்களுக்கு பிறகு இக்கட்டுரையாளர் அனுராதா மஹ்தோவை (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஏப்ரல் 2022-ல் சந்தித்தபோது குழந்தையுடன் அமர்ந்திருந்த அவர் மொத்த சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.
“பிற்பகல் மூன்று மணி ஆகவிருந்தது. நீர்க்குடம் உடைந்ததும் சுகாதார ஊழியரிடம் கணவர் தகவலை தெரிவித்தார். அவர் அடுத்த 15, 20 நிமிடங்களில் வந்து சேர்ந்தார். உடனே அவசர ஊர்திக்கு அவர் அழைத்ததாக ஞாபகம். அன்று மழை பெய்து கொண்டிருந்தது. அவசர ஊர்தி ஓட்டுபவர் 10 நிமிடத்தில் கிளம்புவதாகக் கூறினார்கள். ஆனால் வழக்கமாக வரும் நேரத்தை விட 1 மணி நேரம் அதிகமாக அன்று அவர்களுக்கு நேரம் ஆகியிருக்கும்,” என மழை நேரத்தில் சாலைகள் கொண்டிருக்கும் ஆபத்தை விளக்குகிறார் 20 வயதுகளில் இருக்கும் அனுராதா.
இமாச்சலப் பிரதேசத்தின் கோட்டி கிராமத்தின் மலைப்பகுதியில் ஒரு குடிசையில் மூன்று குழந்தைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளி கணவருடன் அவர் வசித்து வருகிறார். பிகாரின் பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால்பூர் கிராமம்தான் அக்குடும்பத்தின் பூர்விகம்.
2020ம் ஆண்டு ஷிம்லா மாவட்டத்தின் மஷோப்ரா ஒன்றியத்தின் கோட்டியிலிருந்து கணவருடன் இணைந்த அனுராதா சொல்கையில், “பொருளாதாரப் பிரச்சினைகளால் நாங்கள் எங்களின் ஊரிலிருந்து இங்கு இடம்பெயர வேண்டியிருந்தது. இரண்டு இடங்களில் வாடகை கொடுப்பது கஷ்டமான விஷயம்.” அவரின் கணவரான 38 வயது ராம் மஹ்தோ (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஒரு கட்டுமான தளத்தில் மேஸ்திரியாக பணிபுரிகிறார். வேலை மாறும் இடங்களுக்கெல்லாம் அவர் சென்று வேலை பார்க்க வேண்டும். தற்போது தகரக் கூரை வேயப்பட்டக் குடிசைக்கு எதிரில் இருக்கும் தளத்தில் அவர் பணிபுரிகிறார்.
சாதாரண நாட்களிலேயே ஓர் அவசர ஊர்தி அவர்களின் வீட்டடைவது கடினம். 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஷிம்லாவின் கம்லா நேரு மருத்துவமனையிலிருந்து அவசர ஊர்தி கோட்டியை அடைய 1.5லிருந்து 2 மணி நேரங்கள் ஆகும். மழை அல்லத் பனிப்பொழிவு சமயத்தில் இரு மடங்கு நேரமாகும்.










