ஓர் அழிவு காட்சிக்கு மத்தியில் அவர் காய்ந்த புற்களின் பெரிய கட்டு ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறார். உடைந்த மூங்கில் குச்சிகல், கிழிந்த தார்ப்பாய்கள், மரக்கட்டைகள், துண்டு கயிறுகள், நசுங்கிய புடவைகள், வீட்டு பாத்திரங்கள், மண் படிந்த ஆடைகள் என பல அன்றாட பொருட்கள் கலைந்து கிடக்கின்றன. இதைத்தான் அவர்கள் வீடு என அழைக்கிறார்கள். இப்போதும் அது வீடுதான். டெல்லி வளர்ச்சி குழுமம், அவர்களின் தற்காலிக வீட்டை புல்டோசர்கள் கொண்டு தரைமட்டமாக்கிய சில நாட்களுக்கு முன்பு இதே வீடு வேறு நிலையில் இருந்தது. சில்லா சரோதா காதர் டவுனிலுள்ள இந்த வசிப்பிடத்தின் 10-15 குடிசைகளில் ரிட்ட தேவியின் வீடும் அடக்கம்.
ஆனால் அவரோ துளியும் கலங்காமல் ஒரு கையில் வைத்திருக்கும் புல்லின் ஓர் அங்குல அகல இலையை, இன்னொரு கையில் இருக்கும் கத்தியால் இரண்டு, மூன்று இழைகளாக கிழிக்கிறார். யமுனா ஷேத்ராவுக்கு அருகில் இருக்கும் அந்த வசிப்பிடத்தில் இருக்கும் அவருக்கோ மற்றவர்களுக்கோ வீட்டு வாசலில் நிற்கும் புல்டோசர் அச்சத்தை விளைவித்த காலம் முடிந்துவிட்டது. அப்பகுதியில்தான் டெல்லியின் ஆறு உயிர் பன்மைய மையங்களில் ஒன்றை அரசாங்கம் உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. “நிலம் அரசாங்கத்துடையது. எனவே எங்களின் குடிசைகளை அவர்கள் உடைக்கின்றனர். விளைவிப்பவர்கள், ஒரு வருட குத்தகைக்கு நிலத்தை எடுத்துக் கொள்வார்கள்.”
”நாங்கள் அக்ஷர்தாம் அருகே இருந்தபோது கூட இதுதான் நடந்தது,” என்கிறார் ரிட்டா. “ஒருவர் மீன் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு காக்கை மீனின் மிச்சத்தை கோவிலுக்குள் கொண்டு சென்றது. எனவே அவர்கள் மொத்த பகுதியை அழித்தார்கள். அது 2015-ல் நடந்தது. பிறகு நாங்கள் சில்லா காதரில் இருக்கும் இப்பகுதிக்கு வந்தோம். இங்கும் 4-5 முறைகள், இதே விஷயம் நடந்தது. ஆனால் நாங்கள் இங்குதான் இருக்கிறோம்.” அவரின் குடும்பம், ஒரு சிறிய 8X10 அடி அறையை 500 ரூபாய் வாடகை நிலத்தில் கட்டியிருக்கிறது.
”வாடகையை குஜ்ஜார் ஆளிடம் கொடுப்போம். அவரின் பெயர் ராஜ்வீர். சில்லாவில்தான் அவர் வசிக்கிறார். இந்த நிலத்தை, அவரின் தாத்தா ஏற்கனவே அரசுக்கு விற்றுவிட்டார். அதற்கான ஈடையும் அவர்கள் பெற்றுவிட்டார்கள். எனினும் இந்த நிலத்தை தனக்கு சொந்தமானது என்கிறார் அவர். ஏழைகளான எங்களை அடித்து மிரட்டி பணத்தை பிடுங்குவார்,” என்கிறார் ரிட்டா. “உங்கள் வயல், உங்கள் நிலம். உங்களுக்குதான் தெரியும். நாங்கள் என்ன சொல்ல முடியும்? எங்களுக்கு வசிக்க ஒரு இடம் வேண்டும். அவ்வளவுதான். நாங்கள் கல் வீடு கட்டுவதில்லை. அவர்கள் இடக்கும்போதெல்லாம் புது வீடை கட்டிக் கொண்டிருக்க முடியாது அல்லவா?” அவர் வெட்டிய புல் இழைகளை, ஒரு சிறு கட்டாக கட்டுகிறார்.
சமீபத்தில் நடந்த தகர்ப்பு பணிக்கு பின், இரு சுவர்களையும் ஒரு பிளாஸ்டிக் கூரையையும் ரிட்டாவின் குடும்பம் திரும்ப உருவாக்கிக் கொள்ள முடிந்தது. வசிப்பிடத்தில் இருக்கும் மக்களில் பெரும்பாலானோர், உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். ரிட்டா, பிகாரின் சுபால் மாவட்டத்திலிருந்து வந்தவர். பெற்றோர் வேலை தேடி பாஸ்பிதி கிராமத்திலிருந்து டெல்லிக்கு 1993ம் ஆண்டில் வந்ததிலிருந்து அவர் டெல்லியில் இருக்கிறார். கிட்டத்தட்ட 9.3 மில்லியன் மக்கள், பிகாரிலிருந்து பிற மாநிலங்களுக்கு இதே காரணத்துக்காக புலம்பெயர்வதாக 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. நிஷாத் மற்றும் திமார் என குறிப்பிடப்படும் மல்லா மீனவ சமூகத்தை சேர்ந்தவர் ரிட்டா. பிகாரில் அச்சமூகம் பட்டியல் சாதியாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.




















