சமையலறையில் தீ மூட்டப்பட்டுவிட்டது. தியாமங்கலாவிற்கு நிற்கக் கூட நேரமில்லை. அவர் இன்று காலை தோட்டத்தில் பறித்த சேனைக்கிழங்கு இலைகள், பூண்டு, வெங்காயம், தக்காளி இலைகளுடன் நண்டு தொக்கு போன்றவற்றை தனது சமையலறையில் பரபரப்புடன் எடுத்து வைக்கிறார்.
சன்ங்கியைச் சேர்ந்த அந்த 55 வயது பெண்மணி, நாகாலாந்தின் ஆவோ பழங்குடிகளின் சிறப்பு தயாரிப்பான மிபாங்மிங் என்ற உணவை தயார் செய்யப் போகிறார். “எங்கள் பழங்குடியினரிடையே காய்கறி கலவையில் பொதுவாக சமைக்கப்படும் ரோசுப் உணவிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது,” என சன்ங்கி மொழியில் விளக்குகிறார் தியாமங்கலா லாங்சாரி. அவர் தனது வயலில் விளைந்த மரபு அரிசியில் சமைத்த மிபாங்மிங் உணவை நாட்டுக் கோழி வறுவலுடன் பரிமாறுவார்.
மிபாங்மிங் உணவுக்கு விசேஷமான நறுமணத்தை கூட்டுவதில் உப்பு, பச்சை மிளகாய், தக்காளி, சிச்சுவான் மிளகு இலைகள், உள்ளூர் வகை பூண்டு இலைகள், இஞ்சி இலைகள், நொதிக்க வைக்கப்பட்ட நண்டு கூழ் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. அப்பருவத்தில் விளையும் புதிய காய்கனிகளையும் அவர் சமையலுக்கு பயன்படுத்துகிறார்.
சன்ங்கி கிராமத்தில் மொத்தமுள்ள மக்கள்தொகை 2,486 (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-ன்படி). அவர்களில் பெரும்பான்மை சமூகம் ஆவோ நாகா சமூகம் (பழங்குடியினமாக பட்டியலிடப்படுகிறது) ஆகும். ஆவோ நாகா மொழிக் குடும்பத்தில் பாதிக்கத்தக்க வகையை சார்ந்த சன்ங்கி மொழியை பேசுகிறார்கள். இம்மொழி, பாதிக்கப்படத்தக்கது யுனெஸ்கோவால் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
பிற சன்ங்கி பெண்களைப் போன்று தியாமங்கலாவும் சமையலுக்காக நெல் வயல்கள், காட்டுப் பாதைகள், நீர்நிலைகள் என இரண்டு மணி நேரம் பயணித்து மிபாங், தோட்டோ போன்ற உணவுப் பொருட்களை தேடித் தேடி சேகரிக்கிறார்.
“முன்பெல்லாம் வெளியிலிருந்து உணவுப் பொருட்கள் கிடைக்காது என்பதால் தேடல் மிகவும் அவசியம்,” என்கிறார் அவர் பாரியிடம். உள்ளூரில் விளையும் உணவுப் பொருட்களில் சமைப்பது அவரது தலைமுறை பெண்களுக்கு கைவந்த கலையாகவே உள்ளது. “இன்று அருகாமை சந்தைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்குவது போன்றில்லாமல், முன்பெல்லாம் மாற்று சாகுபடி வயல்கள், நெல் வயல்கள், வீட்டுத் தோட்டங்களில் விளைவதையே நாங்கள் சமைத்து சாப்பிட்டோம்.”
விளைபொருட்களை தேடித் திரிவதை பெண்களே செய்கின்றனர். அவ்வப்போது ஆண்களும் வயல்களில், காடுகளில் இருந்து விளைபொருட்களை கொண்டு வருகின்றனர். “எங்கள் பெற்றோர் அல்லது தேடலில் அனுபவம் மிக்கவர்களிடம் இருந்து எந்த தாவரத்தை சாப்பிட வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்ற அறிவையும், கண்டறியும் திறனையும் நாங்கள் கற்றோம். விவசாயம் அல்லது தேடலை இளம் தலைமுறையினர் விரும்புவதில்லை. அவர்கள் வேறு தொழிலை தேடிச் செல்கின்றனர்.” திமாப்பூர் சந்தையிலிருந்து அவரது அண்டை வீட்டார் வாங்கி கொடுத்த சிப்பி காளானும், விலை மதிப்புமிக்க தோட்டோவையும் சமைத்தபடி அவர் சொல்கிறார், “மிபாங்குடன் [சேனைக்கிழங்கு இலைகள்] தோட்டோ சேர்ந்தால் சுவையாக இருக்கும்.”
ஆவோ நாகா பழங்குடிகளின் உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய உட்பொருள் நண்டு தொக்கு. “சன்ங்கியில் தயார் செய்யப்படும் நண்டு தொக்கு சிறப்பானதாகவும், அதிக வரவேற்பை பெற்றுள்ளதாகவும்,” தியாமங்கலா பெருமையுடன் சொல்கிறார்.
அவர் அந்த ஜாடியை திறந்தவுடன் தித்திப்பான, நொதித்த மீன் வாசனை அறை முழுவதும் பரவுகிறது. ஆவோ நாகா பழங்குடியினரின் ஜூங்புங்நட்சுவின் சிறப்பே நெல் வயல்களில் ஆழமற்ற நீர்நிலைகளில் கிடைக்கும் நண்டுகளில் செய்யப்படுவது தான். நண்டுகள் வறுத்து, ஓடு நீக்கப்பட்டு இடிக்கப்பட்டு கருப்பு எள்ளுடன் கலக்கப்படுகிறது. பிறகு வாழை இலைகளில் சுற்றி தீக்கடியில் சில நாட்கள் நொதிக்கவைக்கப்படுகின்றன. ஆவோ நாகா பழங்குடியினரின் சட்னி, குழம்பு, கஞ்சி உணவுகளில் இந்த தொக்கு சிறப்பான சுவையை கூட்டுகிறது.
பல்வகை திறமைகளை கொண்டுள்ள தியாமங்கலா மண்பாண்டங்கள் செய்வதில் வல்லவர். படிக்க: சங்க்கியின் பெண் குயவர்கள்
இந்த ஆண்டு (2025) வெப்பநிலையை கணிக்க முடியவில்லை என்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்பட்டு நெல் வயல்களை சேதப்படுத்துவிட்டன என்றும் கூறுகிறார் அவர். “ஒரு நிலச்சரிவில் எங்கள் வீட்டுத்தோட்டத்தின் ஒரு பகுதி அழிந்துவிட்டது. சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என்பதால் நான் அதிகம் விதைத்திருந்த இஞ்சி செடிகளும் சேதமடைந்துவிட்டன.”
அவர் உள்ளூர் தயாரிப்பான சன்ங்கி மண்பாண்டங்களில் சமைப்பதால் உணவின் சுவை இன்னும் கூடுகிறது என்கிறார். நொதித்த நண்டு கூழுடன் கடுகு எண்ணெய் தாளிப்பு வாசம் சமையலறை முழுவதும் பரவுகிறது. நாங்கள் சாப்பிட தயாரானோம்.


