“பொம்மைகளை எப்படி ஆட்டிவைக்க வேண்டும் என்று என் விரல்களில் கம்பிகளை கட்டி அப்பா சொல்லித் தந்தார்,” என்கிறார் அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை பகிரும் 74 வயது பிரேம்ராம் பட்.
“பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு அவர் செல்லும் பல்வேறு கிராமங்களுக்கும் எனக்கு ஒன்பது வயதிருக்கும்போதே அழைத்துச் செல்வார்,” என்கிறார் அவர். “நான் டோல் அடிப்பேன். மெல்ல எனக்கு பொம்மலாட்டத்தில் ஆர்வம் வந்தது. என் தந்தை லாலுராம் பட் அவற்றை எப்படி அசைப்பது என்று கற்றுத் தந்தார். நானும் அவற்றை கையாளத் தொடங்கினேன்.”
மேற்கு ஜோத்பூரின் பிரதாப் நகர தெருவோர குடிசைப் பகுதியில் பிரேம்ராம் வசிக்கிறார். 70 வயது மனைவி ஜூக்னிபாய், மகன், மருமகள், அவர்களின் 3 முதல் 12 வயது வரையிலான நான்கு குந்தைகளுடன் அவர் வசிக்கிறார். அவர்களின் குடும்பம் பட் (ராஜஸ்தானில் ஓபிசி என பட்டியலிடப்பட்டுள்ளது) சமூகத்தைச் சேர்ந்தது. நாக்பூர் மாவட்டத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு பல பட் குடும்பங்கள் ராஜஸ்தானின் ஜோத்பூர், ஜெய்பூர், ஜெய்சால்மர், பிகானிர் போன்ற பல்வேறு நகரங்களில் குடிபெயர்ந்ததாக சமூகத்தில் மூத்தவர்கள் சொல்கின்றனர்.
“பொம்மை செய்வதற்கும், பொம்மலாட்டத்திற்கும் எனக்கு எந்த பயிற்சியும் அளிக்கப்படவில்லை. என் தந்தையின் நிகழ்ச்சியைப் பார்த்து இக்கலையை கற்றுக்கொண்டேன்,” என்கிறார் 39 வயது சுரேஷ். அவர் பிரேம்ராமுடன் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று 10 வயது முதல் நிகழ்ச்சிகளில் உதவி வருகிறார். வீட்டில் பொம்மைகள் செய்ய அவர் உதவுகிறார். “எனக்கு 15 வயதானபோது பொம்மலாட்டத்தை கற்றுக் கொண்டேன். நான் தனியாகவே கிராமங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினேன்,” என்கிறார் அவர்.




