பழங்குடியினரான நாங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டவென எங்களுக்கேயுரிய வழிகளை வைத்திருக்கிறோம். ஆறுகள், காடுகள், நிலம், நாட்கள் அல்லது ஒரு தேதி அல்லது மூதாதையர் என பலவகை பெயர்கள் சூட்டுவோம். ஆனால் காலப்போக்கில் எங்களின் விருப்பத்துக்கு பெயர் சூட்டும் உரிமை எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. நிறுவனமயப்பட்ட மதம் மற்றும் மதமாற்றங்கள் அந்த உரிமையைப் பறித்து விட்டது. எங்களின் பெயர்கள் மாறிக் கொண்டே இருந்தன. நாங்கள் மாற்றி மாற்றி வகைப்படுத்தப் பட்டோம். பழங்குடிக் குழந்தைகள் நகரத்திலுள்ள பள்ளிகளுக்கு சென்றபோது நிறுவனமயப்படுத்தப்பட்ட மதம் எங்களின் பெயர்களை மாற்றியது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் எங்கள் மீது திணிக்கப்பட்ட பெயர்களைக் கொண்டிருந்தன. இப்படித்தான் எங்களின் மொழிகளும் எங்களின் பெயர்களும் எங்களின் கலாசாரமும் வரலாறுகளும் பலியெடுக்கப்பட்டன. பெயர்சூட்டலில் சர்ச்சை இருக்கிறது. எங்களின் வேர்களுடனும் வரலாறுகளுடனும் இணைவில் இருந்த நிலத்தை தற்போது நாங்கள் தேடுகிறோம். எங்களின் இருப்பை அடையாளப்படுத்திய அந்த நாட்களையும் தேதிகளையும் நாங்கள் தேடுகிறோம்.

ஜெசிண்டா கெர்கெட்டா இந்தியில் கவிதை வாசிப்பதைக் கேளுங்கள்

பிரதிஷ்தா பாண்டியா வாசிக்கும் கவிதையின் ஆங்கிலப் பதிப்பைக் கேளுங்கள்

யாருடைய பெயர் இது?

நான் திங்கட்கிழமை பிறந்தேன்
எனவே என்னை திங்கா என்றழைத்தார்கள்
நான் செவ்வாய்க்கிழமை பிறந்தேன்
எனவே நான் செவ்வா அல்லது செவ்வாயன்
நான் வியாழக்கிழமை பிறந்தேன்
எனவே என்னை வியாழன் என அழைக்கிறார்கள்

வாரத்தின் நாட்களைப் போல்
காலத்தின் மார்பில் நான் நின்றேன்
ஆனால் அவர்கள் வந்து என் பெயரை மாற்றினார்கள்
என் இருப்பைக் குறித்த
அந்தத் தேதிகளையும் நாட்களையும் அவர்கள் அழித்தார்கள்

இப்போது நான் ரமேஷாகவோ நரேஷாகவோ மகேஷாகவோ
ஆல்பெர்ட்டாகவோ கில்பெர்ட்டாகவோ ஆல்ஃப்ரெடாகவோ இருக்கிறேன்
என்னை உருவாக்கிய மண் அல்லாத மண் கொண்ட
என் வரலாறல்லாத வரலாறு கொண்ட
எல்லா நிலங்களில் வழங்கப்படும் பெயர்களையும் கொண்டிருக்கிறேன்

அவர்களின் வரலாறுகளில் என் வரலாறை தேடுகையில்
ஒரு முக்கியமான விஷயத்தை உணர்ந்தேன்
உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு இடத்திலும்
கொல்லப்படுவது நான்தான்
ஒவ்வொரு கொலைக்கும் ஓர் அழகியப் பெயர் இருக்கிறது

தமிழில் : ராஜசங்கீதன்

Poem and Text : Jacinta Kerketta

ஒராவோன் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த ஜெசிந்தா கெர்கெட்டா ஒரு சுயாதீன எழுத்தாளரும் கிராமப்புற ஜார்கண்டைச் சேர்ந்த செய்தியாளரும் ஆவார். பழங்குடிச் சமூகங்களின் போராட்டங்கள் குறித்து கவிதைகள் படைத்து, அவர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை நோக்கிக் கவனத்தை ஈர்க்கும் கவிஞர்.

Other stories by Jacinta Kerketta
Painting : Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Other stories by Labani Jangi
Editor : Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Other stories by Pratishtha Pandya
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan