நான் நர்மதா மாவட்டத்தில் உள்ள மஹுபதா கிராமத்தில் பில்ஸின் வாசவா குலத்தில் பிறந்தேன். மஹாகுஜராத் இயக்கத்திற்குப் பிறகு (1956-1960) தனி மொழிவாரி மாநிலமாக உருவானபோது, ​​குஜராத்தின் பகுதியான மகாராஷ்டிரா எல்லையில் (அப்போது பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதி) இருந்த 21 கிராமங்களில் எனது கிராமமும் ஒன்றாகும். அதனால் என் பெற்றோருக்கு மராத்தி தெரியும். பேசினார்கள். தபி மற்றும் நர்மதா நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் தெஹ்வாலி பிலி மொழி பேசும் பில் சமூகத்தினர் வசிக்கின்றனர். “தபியின் மறுபுறம் மகாராஷ்டிராவின் ஜல்கான் வரை மக்கள் ஏதோ ஒரு வகையான தெஹ்வாலியைப் பேசுகிறார்கள். சத்புரா மலைகளில் உள்ள மோல்கி மற்றும் தாட்கான் கிராமங்கள் வரை குஜராத்தின் பக்கம் அவர்கள் இதைப் பேசுகிறார்கள். இது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் பரந்திருக்கும் ஒரு பெரியப் பகுதி.

நான் தெஹ்வாலி பிலியில் எழுதுகிறேன். எங்களைப் பற்றி அதிகம் தெரியாதவர்கள் எங்களின் சமூகங்களை வைத்து எம் மொழியை அடையாளம் காணுகிறார்கள். எனவே, சில சமயங்களில் நான் வாசவியில் எழுதுகிறேன் என்று சொல்கிறார்கள் - என் குடும்பம் வாசவ குலத்தைச் சேர்ந்தது. குஜராத்தில் பழங்குடிகள் பேசும் மொழிகளில் நான் எழுதும் மொழியும் ஒன்று. குஜராத்தின் டாங்ஸில் உள்ள பில்கள் வார்லி பேசுகிறார்கள். இப்பகுதியைச் சேர்ந்த அசல் பில்கள் பிலி பேசுகிறார்கள். கொங்கனில் இருந்து வந்தவர்கள் கொக்னி பேசுகிறார்கள். வல்சாத்தில் அவர்கள் வார்லி மற்றும் தோடியா பேசுகிறார்கள். வியாரா மற்றும் சூரத்தில், கமிட்; உச்சல் பக்கத்தில் சௌதாரி; நிசாரில் அவர்கள் மவ்ச்சி பேசுகிறார்கள்; நிசார் மற்றும் சக்பரா இடையே, பில்கள் தெஹ்வாலி பேசுகிறார்கள். பிறகு அம்புடி, கதலி வாசவி, தத்வி, துங்க்ரா பிலி, ரத்வி, பஞ்சமஹாலி பிலி, துங்கரி கராசியா, துங்கரி பிலி...

விதையில் காடு போல ஒவ்வொரு மொழியிலும் மறைந்திருக்கும் பொக்கிஷங்களை கற்பனை செய்து பாருங்கள். அவை இலக்கியம், அறிவு, உலகக் கண்ணோட்டங்களைச் கொண்டிருக்கின்றன. எனது வேலையின் மூலம் இந்தப் பொக்கிஷத்தை வளர்க்கவும், பராமரிக்கவும், கொண்டாடவும் நான் போராடுகிறேன்.

தெஹ்வாலி பிலி மொழியில் தனது கவிதையை வாசிக்கிறார் ஜிதேந்திரா வாசவா

கவிதையின் ஆங்கில மொழியாக்கத்தை வாசிக்கிறார் பிரதிஷ்தா பாண்டியா

நாங்கள் காட்டு விதைகள்

சில வருடங்களுக்கு முன்பு
என் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டனர்
நிலத்தடியில்.
ஆனால் எங்களை
நிலத்தடியில் புதைத்துவிட
துணிந்து விடாதே.
பூமிக்கு வானம் போல
மழைக்கு மேகம் போல
ஆற்றுக்குக் கடல் போல
நாங்கள் இம்மண்ணுடன்
நீண்ட நெருங்கிய உறவு கொண்டிருக்கிறோம்.

மரங்களாக வளர்கிறோம்
நாங்கள் காட்டு விதைகள்.
விதைகள் காட்டுத்தனமாகவே இருக்க வேண்டும்.

நீங்கள் எங்களை மூழ்கடிக்க விரும்பலாம்
ஆழமான நீரில்
ஆனால் தண்ணீர் தானே
எங்கள் அசல் மையம்.
எறும்புகள் முதல் பூச்சிகள் வரை
மனிதர்கள் நாங்கள்
எல்லா வழிகளையும் அடைகிறோம்
எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் காட்டு விதைகள்.
விதைகள் காட்டுத்தனமாகவே இருக்க வேண்டும்.

நீங்கள் எங்களை மரங்கள் என்று அழைக்கலாம்
அல்லது விரும்பினால் தண்ணீர், அல்லது மலைகள் என்றழைக்கலாம்
சரி, எப்படியும் எங்களை ‘காட்டுத்தனமானோர்’ என்பீர்கள்.
அதுதான நாங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் காட்டு விதைகள்.
விதைகள் காட்டுத்தனமாகவே இருக்க வேண்டும்.

ஆனால் உனக்கு தெரியுமா தம்பி
விதையில் இருந்து
பிரிந்திருப்பதன் அர்த்தம் என்னவென
நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்
நீங்கள் உங்களை என்னவெனச் சொல்லுவீர்கள்
தண்ணீர் இல்லை என்றால்
மரங்கள் இல்லையென்றால்
மலைகள் இல்லையென்றால்?
என் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியாது என்று எனக்குத் தெரியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் காட்டு விதைகள்.
விதைகள் காட்டுத்தனமாகவே இருக்க வேண்டும்.

தமிழில் : ராஜசங்கீதன்

Jitendra Vasava

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள மஹுபாதாவைச் சேர்ந்த ஜிதேந்திர வாசவா, தெஹ்வாலி பிலி மொழியில் எழுதும் கவிஞர். ஆதிவாசி சாகித்ய அகாடமியின் (2014) நிறுவனத் தலைவரும், பழங்குடியினரின் குரல்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கவிதை இதழான லகராவின் ஆசிரியருமான இவர், ஆதிவாசி வாய்மொழி இலக்கியம் குறித்த நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவரது முனைவர் பட்ட ஆய்வு நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த பில்களின் வாய்வழி நாட்டுப்புறக் கதைகளின் கலாச்சார மற்றும் புராண அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. PARI-ல் வெளியிடப்பட்ட கவிதைகள் அவரது வரவிருக்கும் முதல் கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

Other stories by Jitendra Vasava
Illustration : Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan