அவரை நாங்கள் சந்தித்தபோது அவருக்கு 104 வயது. அறைக்குள்ளிருந்து வந்தவர், உதவுவதற்காக நான் நீட்டிய கைகளை உதறிவிட்டார். கைத்தடியைத் தாண்டி பபானி மஹதோ வேறு எந்த உதவியையும் நாடியதில்லை. அந்த வயதிலும் அவர் நின்றார், நடந்தார். உதவியின்றி அமர்ந்தார். மேற்கு வங்க புருலியா மாவட்டத்தின் செபுவா கிராமத்தின் பெரிய கூட்டுக் குடும்பத்தின் எல்லா தலைமுறையினரும் எந்த விஷயம் என்றாலும் விவசாயியாகவும் இல்லத்தரசியாகவும் இருந்த இவரைதான் சார்ந்திருந்தனர். அவர்களின் வாழ்க்கைகளுக்கும் எதிர்காலத்துக்கும் இவர்தான் மையமாக இருந்தார்.
ஆகஸ்ட் 29-30, 2024 நள்ளிரவில் சுதந்திரப் போராட்ட வீரர் பபானி மஹதோ உறக்கத்தில் உயிர் நீத்தார். அவருக்கு 106 வயது. நான் எழுதிய The Last Heroes: Foot Soldiers of Indian Freedom (பெங்குவின் நவம்பர் 2022) புத்தகத்திலுள்ள 16 சுதந்திரப் போராட்ட வீரர்களில் அவருடைய மறைவுக்கு பிறகு தற்போது வெறும் நான்கு பேர் மட்டும்தான் உயிரோடு இருக்கின்றனர். ஒருவகையில் பாரியின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகைப்படத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பல அசாதாரண சுதந்திரப் போராட்ட வீரர்களின் நேர்காணல்களில் அவருடையது தனித்துவமானது என சொல்லலாம். எங்களுடன் பல மணி நேரங்கள் உரையாடியதில், அவர் மட்டும்தான் பெருமைமிகு போராட்டத்தில் தன் பங்கை நிராகரித்து பேசியவர். “அந்த போராட்டத்தில் நான் என்ன செய்தேன்?” என நாங்கள் அவரை முதன்முறையாக சந்தித்த 2022-ல் கேட்டார். வாசிக்க: புரட்சிக்கு பபானி மஹதோ உணவளித்தபோது








