“இந்த அரசு விவசாயிகளை பற்றி கவலைப்படவில்லை. பெருநிறுவனங்களுக்கே ஆதரவாக இருக்கிறது. வேளாண் பொருட்கள் விற்பனைக் கூடமும் அவர்களிடமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் விவசாயிகளுக்கு உதவி செய்யாமல் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள்?” எனக் கேட்கிறார் கர்நாடகாவின் பெலகாவி மாவட்ட விவசாயக் கூலியான ஷாந்தா காம்ப்ளே.
பெங்களூரு ரயில்வே நிலையத்துக்கு அருகே மெஜஸ்டிக் பகுதியில் அமர்ந்திருக்கும் அவர் ‘மத்திய அரசை கண்டிக்கிறோம்’ என்கிற கோஷங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.
50 வயது ஷாந்தா, விவசாயிகளின் குடியரசு தின போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளவென ஜனவரி 26ம் தேதி காலை பேருந்தில் பெங்களூருவை வந்தடைந்தார். கர்நாடகாவிலிருந்து பல விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் ரயில்களிலும் பேருந்துகளிலும் வந்து கொண்டிருந்தனர். தில்லியில் நடக்கவிருக்கும் விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுதந்திர பூங்காவில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தனர்.
கிராமத்தில் உருளைக்கிழங்கு, பயிறு மற்றும் நிலக்கடலை நடவு செய்து நாட்கூலியாக 280 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தார் ஷாந்தா. விவசாய வேலை இல்லாதபோது ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைகள் பார்த்தார். அவருடைய 28 மற்றும் 25 வயது மகன்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வரும் கட்டுமான வேலைகள் பார்த்தனர்.
“எங்களுக்கென போதுமான உணவும் தண்ணீரும் கூட ஊரடங்கு காலத்தில் இல்லை,” என்கிறார் அவர். “அரசாங்கம் எங்களை பொருட்படுத்தவேயில்லை.”
ரயில்நிலைய மேடையில் நின்று ஒரு விவசாயக்குழு கோஷம் போட்டனர், “வேளாண் பொருள் விற்பனைக் கூடம் எங்களுக்கு வேண்டும். புதிய சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.”








