உடைந்த கைக்கு போடப்பட்டுள்ள கட்டு நாராயண் கெய்க்வாடை கவலையில் ஆழ்த்தியது. எனினும் அவர் தனது குல்லாவை சரிசெய்து கொண்டு தனது நீல நிற டைரி மற்றும் பேனாவுடன் பரபரப்பாக காணப்பட்டார்.
“என் பெயர் நாராயண் கெய்க்வாட். நான் கோலாப்பூரிலிருந்து வந்திருக்கிறேன். நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்?,” என கேட்டார் கோலாப்பூரின் ஜம்பாலி கிராமத்தைச் சேர்ந்த 73 வயது விவசாயி.
தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பிக்க குடில் அமைத்துள்ள அகமத்நகர் மாவட்ட பழங்குடியின விவசாயிகளிடையே அவர் கேள்விகளை எழுப்பினார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜனவரி 24-26 தேதிகளில் மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களில் திரண்ட விவசாயிகள் அவர்கள். அவர்களில் ஒருவரான நாராயண், ஷிரோல் தாலுக்காவில் உள்ள கிராமத்தில் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்திலிருந்து, 400 கிலோமீட்டர் தொலைவிற்கு கை காயத்துடன் பயணம் செய்து வந்துள்ளார்.
நாராயண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது கிராம விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பேசத் தொடங்கினார். “நான் விவசாயி என்பதால் என்னால் பிரச்னைகளை தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது,” என்று என்னிடம் ஜனவரி 25ஆம் தேதி சந்தித்தபோது தெரிவித்தார். தனது உடைந்த வலது கரத்துடன் மராத்தி மொழியில் குறிப்புகளை அவர் எடுத்தார். சிறிய அசைவுகளிலும் வலி ஏற்பட்டபோதிலும் அவர் பேசுகையில், “விவசாயிகள், வேளாண் தொழிலாளர்களின் போராட்டங்களை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதால் அது குறித்து நான் கேட்கிறேன்.”
ஆசாத் மைதானத்தில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் பேசியதாக பின்னர் அவர் என்னிடம் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் முதல்வாரம் தனது நிலத்தில் நாராயண் வேலை செய்துகொண்டிருந்த போது தென்னை மட்டை விழுந்து அவரது கையில் காயம் ஏற்பட்டது. கரும்பு, சோளம் ஆகியவற்றை பயிரிட்டுள்ள அவர், இரசாயன உரங்களின்றி காய்கறிகளையும் விளைவிக்கிறார். ஜம்பாலியில் உள்ள தனியார் மருத்துவரைச் சந்தித்தும் ஒரு வாரத்திற்கு மேலாக அவருக்கு வலி குறையவில்லை. வலியையும் அவர் பொருட்படுத்தாமல் வந்துள்ளார். “மருத்துவர் பரிசோதித்துவிட்டு சுளுக்கு ஏற்பட்டுள்ளது, கட்டுப் போடுங்கள் என்றார்,” என்கிறார் அவர்.








