இறந்துபோகும் வரை, 22 வயது குர்ப்ரீத் சிங் அவரது கிராமத்தில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஊர்வலங்கள் சென்று கொண்டிருந்தார். அவரின் அப்பாவான ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி ஜக்தர் சிங் கடாரியா மகனின் கடைசி உரையை நினைவுகூருகிறார். 15 பார்வையாளர்கள் அவரின் பேச்சை உன்னிப்பாக கவனித்திருக்கின்றனர். தில்லியின் எல்லைகளில் வரலாறு நிகழ்த்தப்படுவதாகவும் அங்கு சென்று அவர்களும் பங்களிக்க வேண்டும் எனவும் பேசியிருக்கிறார். அந்த உணர்ச்சிமிகு பேச்சுக்குப் பிறகு டிசம்பர் 2020ல் சட்டையை மடித்து விட்டுக் கொண்டு, அக்குழு தலைநகரத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றது.
பஞ்சாபின் ஷாகித் பகத் சிங் நகர் மாவட்டத்தில் பலாசவுர் தாலுகாவில் இருக்கும் மகோவல் கிராமத்திலிருந்து கடந்த வருடத்தின் டிசம்பர் 14ம் தேதி அவர்கள் கிளம்பினர். ஆனால் 300 கிலோமீட்டர் கடந்திருந்த நிலையில் ஒரு கனரக வாகனத்தால் அவர்களின் டிராக்டர் ட்ராலி ஹரியானாவின் அம்பாலா மாவட்டமருகே இடிக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. “அது ஒரு பெரும் மோதல். குர்ப்ரீத் இறந்துபோனார்,” என்கிறார் இளங்கலைப் பட்டதாரியான மகனைப் பற்றி ஜக்தர் சிங். “இந்தப் போராட்டத்துக்கு அவர் தன் உயிரையேக் கொடுத்தார்.”
செப்டம்பர் 2020ல் இந்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கெடுத்து உயிரிழந்த 700க்கும் மேற்பட்டவர்களில் குர்ப்ரீத்தும் ஒருவர். குறைந்தபட்ச ஆதார விலை முறையை அழித்து தனியார் வணிகர்களையும் பெருநிறுவனங்களையும் விலை நிர்ணயிக்க அனுமதித்து சந்தையில் அவற்றுக்கு பெரும் ஆதாயத்தை உருவாக்க வேளாண் சட்டங்கள் வழிவகை செய்யும் என்பதால் நாடு முழுவதும் இருந்த விவசாயிகள் அவற்றை எதிர்த்தனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகியப் பகுதிகளி விவசாயிகளை தில்லி எல்லைகளுக்கு போராட்டங்கள் நவம்பர் 26, 2020 அன்று கொண்டு வந்தன. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, தில்லி ஹரியானா எல்லையில் சிங்குப் பகுதியிலும் தில்லி உத்தரப்பிரதேச எல்லையில் காசிப்பூர் மற்றும் திக்ரியிலும் போராட்டக் களங்களை அவர்கள் அமைத்தனர்.
போராட்டங்கள் தொடங்கி ஒரு வருடத்துக்கும் அதிகமான நாட்கள் கழிந்த பிறகு, நவம்பர் 19, 2021 அன்று சட்டங்கள் திரும்பப் பெறப்படுமென பிரதமர் அறிவித்தார். விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறும் மசோதா நவம்பர் 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் போராட்டம், விவசாயச் சங்கங்களில் பல கோரிக்கைகளை அரசு ஏற்ற பிறகு டிசம்பர் 11, 2021 அன்றுதான் நிறுத்தப்பட்டது.
நீண்டப் போராட்டத்தில் நெருக்கமானவர்களை இழந்த குடும்பங்களிடம் நேரிலும் தொலைபேசியின் வழியாகவும் பேசினேன். நிலைகுலைந்து சோகமாக இருந்தாலும் கோபத்துடன் இருக்கின்றனர். போராட்டத்துக்காக உயிரைத் தியாகம் செய்த தியாகிகளாக அவர்களை நினைவுகூருகின்றனர்.
“விவசாயிகளின் வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம். ஆனால் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை,” என்கிறார் ஜக்தர் சிங். “விவசாயிகளுக்கு எந்த நல்லதையும் அரசு செய்யவில்லை. அது விவசாயிகளையும் உயிர்த்தியாகம் செய்தவர்களையும் அவமதித்திருக்கிறது.”

















