“பல தலைமுறைகளாக நாங்கள் படகோட்டுதல் மற்றும் மீன் பிடித்தல் ஆகிய இரு வேலைகளைதான் செய்து வருகிறோம். தற்போதைய வேலையின்மை நிலையை பார்க்கையில், என் குழந்தைகளும் இதையேதான் செய்வார்கள் போல தெரிகிறது,” என்கிறார் விக்ரமாதித்ய நிஷாத். வாரணாசியின் சுற்றுலா பயணிகளையும் ஆன்மிக யாத்ரீகர்களையும் கங்கையின் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு படகில் கொண்டு செல்லும் வேலையை கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வருகிறார்.
ஆயிரம் கிலோமீட்டர் வரை கங்கை நதி ஓடும் உத்தரப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பு, கடந்த ஐந்து வருடங்களாக 50 சதவிகிதத்தில் தேங்கி நின்றிருப்பதாக இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 தெரிவிக்கிறது.
“உள்ளூர் தயாரிப்புக்கே முக்கியத்துவம் என்றும் பண்பாடுதான் வளர்ச்சி என்றும் மோடி பிரசாரம் செய்கிறார். பண்பாடு யாருக்கானது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்? காசியை சேர்ந்த எங்களுக்கானதா வெளியாட்களுக்கானதா?” எனக் கேட்கிறார். மோடி பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரின் பிரசாரம் நல்லபடியாக எதிர்கொள்ளப்படவில்லை என்னும் அந்த படகுக்காரர், “வளர்ச்சியை உண்மையாக நாங்கள் பார்க்க வேண்டும்,” என்கிறார்.






