திங்கட்கிழமை காலை 7 மணிக்கு மும்பையின் சஸ்ஸூன் டாக் படகுக்கரையில் மீன்களை கொண்ட படகு வந்துவிட்டதா என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் வந்தனா கோலியும் காயத்ரி பாட்டிலும்.
வீடு இருக்கும் கொலிவாடா பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கரைக்கு மீன் வாங்கவென நடந்து வந்திருக்கிறார்கள். மீன்களை வாங்கி அருகே இருக்கும் சந்தையில் (செவ்வாய் மட்டும் வியாழன்களில் பல மக்கள் மீன் சாப்பிட மாட்டார்கள் என்கிறார்கள்) விற்பதுதான் வாரத்தின் ஐந்து நாட்களுக்கு அவர்களின் வேலை.
“ஞாயிற்றுக் கிழமைகளில் நல்ல வியாபாரம் நடக்கும். ஆனால் நேற்று எனக்கு லாபம் கிடைக்கவில்லை. அந்த நஷ்டத்தை எப்படியாவது நான் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த வாரம் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு சிரமம் ஆகிவிடும்,” என்கிறார் 53 வயது வந்தனா. அவரும் 51 வயது காயத்ரியும் கோலி சமூகத்தை (மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட சமூகம்) சார்ந்தவர்கள். 28 வருடங்களாக நெருங்கிய நண்பர்கள்.
படகுகள் வரத் துவங்கிவிட்டன. காத்திருந்த 40-50 பெண்கள், மீன் விற்பவர்களைச் சுற்றி குழுமத் தொடங்கினர். படகு உரிமையாளர்களுக்காக மீன்களை விற்றுக் கொடுப்பவர்கள் அவர்கள்தான். “அட… 200 ரூபாய்க்கு தாருங்கள்,” எனக் கேட்கிறார் வந்தனா. ஒருவழியாய் 240 ரூபாய்க்கு சிறு அளவிலான இறால்களை வாங்கினார். பல கட்ட கடுமையான பேரங்களுக்கு பிறகு 9 மணி அளவில், அவரும் காயத்ரியும் வங்கவாசி, இறால் முதலிய மீன்களை வாங்கினர். விலை நிலவரத்துக்கு ஏற்ப 7-லிருந்து 10 கிலோ வரை மீன்களை அவர்கள் வாங்குவார்கள்
வந்தனா காயத்ரியை பார்த்துக் கை காட்டுகிறார்: “வாங்கியாச்சு, கிளம்பலாம்.”










