என்னுடைய The Last Heroes புத்தகத்தில் இடம்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களிலேயே அநேகமாக வயது அதிகமானவரான தெலு மஹதோ, மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்ட பிர்ரா கிராமத்திலுள்ள அவரது வீட்டில் கடந்த வியாழக்கிழமை மாலை மறைந்தார். இப்புத்தகம் பதிப்பிக்கப்பட்டபோது உயிருடன் இருந்து, பிறகு இறந்து போயிருக்கும் முதல் நபரும் இவர்தான். புருலியாவின் 12 காவல்நிலையங்களை நோக்கி 1942ம் ஆண்டில் நடந்த எதிர்ப்பு அணிவகுப்பில் பங்குபெற்றவர்களில் கடைசியாக உயிரோடு இருந்தவர் அவர்தான். தெலுவின் வயது 103லிருந்து 105க்குள் இருக்கலாம்.
அவரின் மறைவால், இந்திய சுதந்திரத்துக்கு போராடி, இந்தியாவை சுதந்திர தேசமாக ஆக்கிய பொற்காலத் தலைமுறையை இழக்கும் காலத்தை இன்னும் அதிகமாக நெருங்கியிருக்கிறோம். அடுத்த ஐந்தாறு வருடங்களில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர் எவரும் உயிரோடு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டு விடும். புதிய தலைமுறைகளை சார்ந்த இந்தியர்கள், சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டோரை சந்திக்கவோ அவர்கள் பேசுவதை கேட்கவோ அவர்களுடன் பேசவோ அதற்கு மேல் முடியாது. யார் அவர்கள், எதற்காகப் போராடினார்கள், எதன் பொருட்டு போராடினார்கள் போன்றவற்றை நேரடியாக அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ள முடியாது.
ஆனால் தெலு மஹாதோவும் அவரின் வாழ்நாள் தோழரான லோக்கி மஹாதொவும் தம் கதைகளை சொல்ல ஆர்வத்துடன் இருந்தனர். நாட்டுக்காக தாங்கள் போராடியது பற்றியும் அதில் கொண்டிருக்கும் பெருமை குறித்தும் இளம் புதிய தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வம் கொண்டிருந்தனர். தெலு, இனி அவரது சொந்தக் கதையை சொல்ல முடியாது. அந்தத் தலைமுறையில் பிறந்து மிச்சமிருக்கும் பிறரும் அடுத்த 5-6 வருடங்களுக்கு பிறகு, தங்கள் கதைகளை சொல்ல இருக்க மாட்டார்கள்.
எதிர்காலத்தில் இளம் இந்தியர்களுக்கு அது எத்தனை பெரிய இழப்பு? மிகவும் குறைவாக மட்டும் தெரிந்தும் நம் காலத்தின் தெலுக்களை பற்றியும் அவர்தம் தியாகங்களை பற்றியும் அவர்களின் வாழ்க்கைகளை தெரிந்து கொள்வது நம் வாழ்க்கையை வடிவமைக்க உதவும் எனக் கற்றுக் கொள்ளவும் முடியாத தற்கால தலைமுறைகளுக்கு ஏற்கனவே எத்தனை பெரிய இழப்பு விளைந்திருக்கிறது?
குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு பெரியளவில் ஊதிப்பெருக்கப்படாமலும் புதிதாக உருவாக்கப்படாமலும் திணிக்கப்படாமலும் எழுதப்படும் தற்காலத்தில். பொதுச்சிந்தனையிலும் ஊடகத்தின் கணிசமான உள்ளடக்கங்களிலும் அச்சமூட்டும் வகையில் நம் பள்ளி புத்தகங்களிலும் கூட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் கொலையை சுற்றியுள்ள முக்கியமான உண்மைகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில்.






