காலடியில் பசியப் புல்வெளி, தலைக்கு மேல் திறந்த வானம், காட்டுக்குள் ஓடும் அமைதியான ஓடை போன்றவற்றை மகாராஷ்டிராவின் எந்த கிராமப்பகுதியிலும் பார்க்க முடியும்.
ஆனால் ஒரு நிமிடம். இன்னொரு விஷயமும் இருப்பதாக கீதா சொல்கிறார். ஓடையைச் சுட்டிக் காட்டி, "பெண்களான நாங்கள் இடது பக்கம் செல்ல வேண்டும். ஆண்கள் வலப்பக்கம் செல்ல வேண்டும்," என்கிறார். அவரின் குப்பத்தில் இருப்பவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க பின்பற்றும் முறை அதுதான்.
"மழை பெய்தால், கணுக்கால் வரையிலான தண்ணீரில் குடை பிடித்தபடி நாங்கள் அமர வேண்டும். மாதவிடாய் காலத்தில் எப்படி இருக்குமென்பதை எப்படி சொல்ல முடியும்?" எனக் கேட்கிறார் 40 வயது கீதா.
புனே மாவட்டத்தின் ஷிருர் தாலுகாவிலுள்ள குருளி கிராமத்தின் வெளியிலிருக்கும் காலனியில்தான் அவர் வசிக்கிறார். 50 வீடுகள் கொண்ட காலனி. பில் மற்றும் பர்தி குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. மகாராஷ்டிராவில் பட்டியல் பழங்குடியாக பட்டியலிடப்பட்டிருக்கும் இரு சமூகங்களும் மாநிலத்தின் விளிம்புநிலையிலுள்ள ஏழ்மைச் சமூகங்கள் ஆகும்.
திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதில் இருக்கும் அசவுகரியத்தை பில் சமூகத்தைச் சேர்ந்த கீதா பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறார். "நாங்கள் உட்காருகையில் புற்கள் காயப்படுத்தும். கொசுக்கள் கடிக்கும். பாம்புக் கடி பயம் எப்போதும் இருக்கும்."
அங்கு வசிப்போர் ஒவ்வொரு அடியிலும் சவாலை சந்திக்கின்றனர். குறிப்பாக பெண்கள். காட்டுக்குள் செல்லும்போது தாக்கப்படும் அச்சம் அவர்களுக்கு உண்டு.




