பிரம்மபுத்திரா ஆற்றில் பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய கொள்கலன்களில் பால் ஏற்றிக்கொண்டு சாலகுரா சாரிலிருந்து தினமும் அதிகாலை, இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு புறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்தில் படகு துப்ரி நகரத்திற்கு பால் எடுத்துச் செல்கிறது.
அசாம் பிரம்மபுத்திரா நதிக்கரையில் நீரோட்ட செயல்முறைகளால் உருவான பல மணல் பாங்கான, நிலையற்ற தீவுகளில் சாலகுரா சார் ஒன்றாகும் ( மணல் திட்டு மக்களின் போராட்டங்கள் என தொடங்கும் பாரியின் சார்கள் கட்டுரைகளைப் பார்க்கவும்). மதியத்திற்குள் திரும்பும் படகு, பிற்பகலில் துப்ரி நகரத்திற்கு அதிகளவு பால் எடுத்துச் செல்கிறது.
கீழ் அசாமின் துப்ரி மாவட்டத்தில் சார் பகுதியில் உள்ள மண்டல் குடும்பத்தின் பால் பண்ணையில் இருந்து பால் வருகிறது. அக்குடும்பம் 50க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை வைத்துள்ளது. இந்த பண்ணையில் ஒரு நாளைக்கு 100-120 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. "எங்களிடம் உள்ள பெரும்பாலான கறவை பசுக்கள், எருமைகள் அவற்றின் கறவைச் சுழற்சியின் உச்சத்தில் இருக்கும்போது, பால் உற்பத்தி ஒரு நாளுக்கு 180-200 லிட்டர் வரை இருக்கும்," என்று மூன்று குழந்தைகளின் தந்தையான 43 வயது தமீசுதீன் மண்டல் கூறுகிறார். துப்ரி நகரில் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.40 கிடைக்கிறது.





