முதன்முறை தியா கிட்டத்தட்ட தப்பி விட்டார்.
பேருந்தில் அமர்ந்திருந்த அவர், பேருந்து நிரம்ப பதைபதைப்புடன் காத்திருந்தார். சூரத்திலிருந்து ஜாலோத் செல்வதற்கான பயணச் சீட்டு எடுத்திருந்தார். அங்கிருந்து குஜராத்தை கடந்து ராஜஸ்தானில் அவரது வீடு இருக்கும் குஷால்கருக்கு செல்ல ஒரு மணி நேரமாகும் என அவருக்கு தெரிந்திருந்தது.
அவர் ஜன்னலில் வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் ரவி திடீரென பின்னாலிருந்து வந்தான். சுதாரிப்பதற்கு முன், கையைப் பிடித்து அவரை பேருந்திலிருந்து இழுத்து வெளியே போட்டான்.
சுற்றியிருந்த மக்கள், தங்களின் குழந்தைகளை பார்த்துக் கொண்டும் மூட்டை முடிச்சுகளை ஏற்றிக் கொண்டும் தங்களின் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். கோபத்தில் இருந்த அந்த இளைஞன் மீதும் பதட்டத்தில் இருந்த அந்த பதின்வயது பெண் மீதும் எவரின் கவனமும் செல்லவில்லை. “கத்துவதற்கு பயமாக இருந்தது,” என்கிறார் தியா. கடந்த காலத்தில் ரவியின் கோபம் கொடுத்த அனுபவத்தில், அமைதியாக இருப்பதுதான் சரியென அவருக்கு பட்டது.
ஆறு மாதங்களாக வீடாகவும் சிறையாகவும் இருந்த கட்டுமான தளத்தில் அந்த இரவில், தியாவால் தூங்க முடியவில்லை. அவரின் உடல் வலித்தது. ரவி அடித்ததால் அவரின் தோல் பல இடங்களில் விரிசல் கொண்டு காயங்கள் பெற்றிருந்தது. “முஷ்டிகளை பயன்படுத்தினான். என்னை உதைத்தான்,” என நினைவுகூருகிறார். “அவன் அவளை அடிக்கும்போது யாராலும் தடுக்க முடியவில்லை.” தலையிட்ட ஆண்கள், தியாவின் மீது தப்பான எண்ணம் கொண்டவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டார்கள். தாக்குதலை பார்த்த பெண்கள் தூரத்திலேயே இருந்தனர். யாரேனும் தடுக்க முயன்றால், ரவி சொல்வான், “இவள் என் மனைவி. நீ ஏன் தலையிடுகிறாய்?” என.
“ஒவ்வொரு முறை நான் தாக்கப்படும்போதும், காயத்துக்கு கட்டு போட மருத்துவமனைக்கு செல்வேன். 500 ரூபாய் செலவாகும். ரவியின் சகோதரன் சில நேரங்களில் பணம் கொடுப்பான். சமயங்களில் மருத்துவமனைக்கு துணை வந்து, “உன் பெற்றோர் வீட்டுக்கு போ,” என்பான்,” என்கிறார் தியா. ஆனால் அதை எப்படி அவரால் செய்ய முடியுமென இருவருக்குமே தெரியாது.

















