வேலைக்காகச் சென்ற ஒவ்வொரு கிராமத்தையும் மங்களா ஹரிஜன் நினைவில் வைத்திருக்கிறார். “குஞ்சூர், குராகுண்ட், க்யாதனகேரி… ஒரு வருடத்தில் ரட்டிஹல்லிக்கு கூட நான் சென்றிருக்கிறேன்,” என ஹவேரி மாவட்டத்தின் ஹிரெகெரூர் தாலுகாவின் கிராமப் பெயர்களை பட்டியலிடுகிறார். தினக்கூலி வேலை பார்க்க தினமும் 17-20 கிலோமீட்டர்கள் பயணித்து விவசாய நிலங்களுக்குச் செல்கிறார் விவசாயக் கூலியான மங்களா.
”இரண்டு வயதிலிருந்து கொனானடலிக்கு சென்று கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர். கொனானடலியும் மங்களாவின் கிராமமான மெனாஷினகாலும் ஹவேரியின் ரானிபென்னூர் தாலுகாவில் இருக்கின்றன. ஹிரெகெரூர் தாலுகா அங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அவரும் அவர் வசிக்கும் மெனாஷினகலின் மடிகா கெரிப் பகுதியின் - தலித் சமூகமான மடிகாக்கள் வசிக்கும் காலனி - பிற பெண்களும் 8லிருந்து 10 பேர் கொண்ட குழுக்களாக வேலை பார்க்க ஹவேரி முழுக்க பயணிக்கின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் 150 ரூபாய் ஒரு நாளுக்கு சம்பாதிக்கின்றனர். ஆனால் வருடத்தில் சில மாதங்களில் கையால் மகரந்தம் சேர்க்கும் வேலைக்கு அவர்கள் 90 ரூபாய் கூடுதலாக பெறுகின்றனர். இந்த வேலைக்காக மாவட்டத்தில் வெகுதூரம் அவர்கள் பயணிக்கின்றனர். அவர்கள் வேலை பார்க்கும் நிலங்களின் உரிமையாளர்களாக இருக்கும் விவசாயிகள் ஆட்டோக்கள் அமர்த்தி அவர்களை அழைத்து வருகின்றனர். வேலை முடிந்ததும் வீட்டுக்குக் கொண்டு போய் சேர்க்கின்றனர். “ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு நாளுக்கு 800லிருந்து 900 ரூபாய் வரை கட்டணம் வாங்குகின்றனர். எனவே அவர்கள் (விவசாயிகள்) எங்களின் ஊதியத்திலிருந்து 10 ரூபாய் பிடித்துக் கொள்கின்றனர்,” என்கிறார் மங்களா. “இதற்கு முன்பு ஆட்டோவெல்லாம் கிடையாது. நடந்தே செல்வோம்.”
சற்று எடை குறைவாக இருக்கும் 30 வயது மங்களா, கூரை வேயப்பட்ட ஓரறை குடிசையில் அவரின் கணவருடனும் - அவரும் தினக்கூலி தொழிலாளர்தான் - நான்கு குழந்தைகளுடனும் வசிக்கிறார். ஒரு விளக்கு அவர்களின் குடிசையில் ஒளிர்கிறது. ஒரு மூலை சமையலுக்கும் இன்னொரு மூலை துணிகள் குவித்து வைக்கவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மறுபக்கத்தில் உடைந்த ஒரு ஸ்டீல் பீரோ. நடுவே மிச்சமிருக்கும் வெளி உணவருந்தவும் படுத்து உறங்கவும் பயன்படுத்தப்படுகிறது. வெளியே ஒரு உயர்த்தப்பட்ட கல்லில்தான் துணிகளை துவைப்பார். பாத்திரங்கள் கழுவுவார்.










