“கடல் அரசன் திமிங்கிலம் ஆனாலும், நம்முடைய, மீனவர்களின் அரசன் மத்தி தான்.”
கேரள மாநிலம் வடகர நகரின் சோம்பால் மீன்பிடி துறைமுகத்தில் மீன் சுமைப் பணியாளராக இருப்பவர் பாபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெரும்பாலும் நெய் மத்தி மீன்களை வண்டியில் ஏற்றுவது, இறக்குவது என இந்த சுமை தூக்கும் பணியை சில பத்தாண்டுகளாக செய்துவருகிறார் இவர்.
காலை 7 மணிக்கு துறைமுகத்துக்கு வரும் 49 வயது சுமைப் பணியாளரான பாபு, வேலைக்கு என தனியாக வைத்துள்ள ஆடையை – ஊதா நிற முண்டு, டி-சர்ட், செருப்பு – அணிகிறார். பிறகு கடலை நோக்கிச் சென்று முழங்கால் ஆழமுள்ள கலங்கிய நீரில் நடந்து சென்று படகில் ஏறுகிறார். “தண்ணீர் வாடை அடிப்பதால், நாங்கள் (சுமைப் பணியாளர்கள்) எல்லோரும் வேலைக்கு என தனியாக செருப்பு, துணிகள் வைத்துள்ளோம்,” என்கிறார் அவர். துறைமுகத்தின் பரபரப்பெல்லாம் அடங்கி அமைதி திரும்பும் மாலை வேளையில் அவர் அங்கிருந்து கிளம்புவார்.
குளுமையான டிசம்பர் மாதத்தில், ஏற்கெனவே பரபரப்பாக வேலை நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் துறைமுகத்துக்கு வேலைக்கு வந்த பாபுவிடம் பேசினார் இந்த செய்தியாளர். கழுத்து நீண்ட வெள்ளை நிற கூழைக்கடாக்கள் தாழ்வாகப் பறந்துகொண்டும், படகில் இறங்கி மீன்கள் இருந்த மூங்கில் கூடை அருகே தத்திச் சென்றுகொண்டும் இருந்தன. கூடையில் இருந்த மீன்கள் சிலவற்றை கொத்திச் செல்ல அவை முயன்றன. மீன்கள் நிரம்பிய வலைகள் தரையில் கிடந்தன. மீன்களுக்காக பேரம் பேசும் மனிதர்களின் அரவம், துறைமுகம் முழுவதும் இருந்தது.










