5 கிலோ எடை குறைந்த போது, அது பிரச்னைக்குரியது என்பதை பஜ்ரங் கெய்க்வாட் நன்கறிவார். “முன்பெல்லாம் நான் ஆறு லிட்டர் எருமைப் பால், 50 பாதாம் பருப்பு, 12 வாழைப்பழம், இரண்டு முட்டைகள் ஆகியவற்றை தினமும் சாப்பிடுவேன். ஒருநாள் விட்டு ஒருநாள் இறைச்சி சாப்பிடுவேன்,” என்கிறார் அவர். இப்போது அவர் ஏழு நாட்கள் இடைவேளையில் தான் இவற்றை சாப்பிடுகிறார் அல்லது அதைவிட அதிக இடைவேளை எடுத்துக் கொள்கிறார். அவரது எடையும் 61 கிலோவாக சரிந்துவிட்டது.
“ஒரு மல்யுத்த வீரர் எடையை இழக்கக் கூடாது,” என்கிறார் கோலாப்பூர் மாவட்டம் ஜூனி பர்கான் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பயில்வான் பஜ்ரங். “உணவு குறைந்தால் உடல் பலவீனமடையும். சண்டையின் போது சிறந்த அசைவுகளைத் தர முடியாது. பயிற்சியைப் போன்று எங்களின் உணவுமுறையும் மிகவும் முக்கியமானது.” மகாராஷ்டிராவின் கிராமப்புறத்தைச் சேர்ந்த பிற மல்யுத்த வீரர்களைப் போன்று பஜ்ரங்கும் களிமண் மல்யுத்தம், செம்மண்ணில் நடைபெறும் திறந்தவெளி போட்டிகள் போன்றவற்றில் கிடைக்கும் பரிசுத் தொகை மூலம் கிடைக்கும் பலமான உணவுமுறையைப் பெரிதும் சார்ந்துள்ளார்.
கோலாப்பூரின் டோனோலி கிராம மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஜ்ரங் பங்கேற்று 500 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. “கடுமையான காயங்களின் போதுக் கூட இத்தகையை இடைவேளையை நான் எடுத்துக் கொண்டதில்லை,” என்கிறார் அவர்.













