ஜரிகை நூலில் பூத்தையல் போடுவதில் ஜமில் அனுபவம் வாய்ந்தவர். ஹவுரா மாவட்டத்தை சேர்ந்த 27 வயது தொழிலாளரான அவர், கால்களை மடித்து தரையில் பல மணி நேரங்கள் அமர்ந்து கொண்டு, விலையுயர்ந்த துணிகளுக்கு பொலிவை கூட்டி ஜொலிக்க வைக்கிறார். இருபது வயதுகளில் எலும்பு காசநோய் வந்த பிறகு, ஊசியையும் நூலையும் தூர வைக்க வேண்டி வந்தது. நோயால் அவரின் எலும்புகள் பலவீனமாகின. நீண்ட நேரங்களுக்கு கால்களை மடக்கியிருக்க முடியாமல் அவருக்கு போனது.
“வேலை பார்ப்பதற்கான வயது இது. என் பெற்றோர் ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால் தலைகீழாக நடக்கிறது. என் மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டியிருக்கிறது,” என்கிறார் ஹவுரா மாவட்டத்தின் செங்கைல் பகுதியில் வாழும் இளைஞரான அவர். சிகிச்சைக்கு கொல்கத்தாவுக்கு செல்வார்.
அதே மாவட்டத்தில் ஆவிக் மற்றும் அவரது குடும்பம் கவுராவின் பில்கானா குப்பத்தில் வாழ்கின்றனர். பதின்வயதில் இருக்கும் அவருக்கும் எலும்பு காசநோய் இருக்கிறது. 2022ம் ஆண்டின் நடுவே அவர் பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. ஓரளவுக்கு அவர் தேறிக் கொண்டிருந்தாலும், பள்ளிக்கு மீண்டும் செல்ல முடியவில்லை.
ஜமில், ஆவிக் மற்றும் பிறரை 2022ம் ஆண்டில் இந்த கட்டுரைக்காக நான் சந்தித்தேன். அவ்வப்போது பில்கானா குப்பத்திலுள்ள அவர்களின் வீடுகளுக்கு சென்று பார்ப்பேன். புகைப்படங்கள் எடுப்பேன்.
தனியார் மருத்துவ மையங்களுக்கு செல்லும் அளவுக்கு வசதியில்லாத ஜமில் மற்றும் ஆவிக் தொடக்கத்தில், ஹவுரா மாவட்டத்தின் தெற்கு 24 பர்கானாஸின் கிராமப்புற பகுதிகளின் நோயாளிகளுக்கன தன்னார்வ தொண்டு மையத்தால் நடத்தப்பட்ட நடமாடும் மருத்துவ மையத்துக்கு சென்றனர். நிறைய பேர் வந்தனர்.






















