ஆந்திர மாநிலம்  துள்ளூர் மண்டல் பகுதியிலுள்ள உத்தந்தராயுனிபாலம்  கிராமத்தைச் சேர்ந்தவர்   38 வயதான கைம்பெண் வேமுறி சுஜாதா, தலித் சமூகமான மாலா சமூகத்தைச்  சார்ந்தவர். கடந்த 2015 வரை விவசாயக் கூலியாகப்  பணிபுரிந்துள்ளார். அவருக்கென்று சொந்தமாக எந்த நிலமும் இல்லை. அவர் கூறுகையில் ,"ஒரு நாளைக்கு 150 ரூபாய் வருமானம் ஈட்டி வந்தேன், வாரத்தின் 6 நாட்கள் வேலை இருக்கும், ஆனால் தற்போது பெண்களுக்கு இங்கு  எந்த வேலையும் கிடைக்கவில்லை" என்று கூறினார்.

கடந்த 2014  ஆம் ஆண்டு, ஆந்திரபிரதேச மாநிலம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா என  இரண்டாகப் பிரிக்கப்பட்டப்பட்டது. அப்போது ஆந்திரமாநிலத்தின்  தலைநகராக  அறிவிக்கப்பட்ட   அமராவதி நகரம் செயல்படத்தொடங்கும் வரை,  ஹைதராபாத் நகரம் இருமாநிலங்களுக்கும் பொதுத்தலைநகராக   10 ஆண்டு நீடிக்கும்   என்றும்  அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து,  ஆந்திரபிரதேச மாநில அரசு அமராவதி பகுதியில்  உலகத்தரம் வாய்ந்த புதிய தலைநகர் அமைப்பதற்கு நிலங்களை  கையகப்படுத்தும்  பணியில் ஈடுபட்டிருந்தது.  அதிலிருந்து, குண்டூர் மாவட்டத்தில் விவசாய வேலைகள்   கிடைப்பது  மிகவும் சிக்கலானது.

கடந்த 2008 ஆம் ஆண்டு, சுஜாதாவின் கணவர் இறந்த பிறகு, விவசாயக் கூலியாக பணிபுரிந்து  அதில் வருகின்ற சொற்ப ஊதியத்தை வைத்து தனது இரு மகன்களை முன்னேற்ற போராடியுள்ளார். ஆனால்,  தற்போது அவரது மகன்கள் கூட வாழ்வாதாரத்திற்காகக் கடினமாக உழைக்காத தொடங்கியுள்ளனர்.  அவரது மூத்த மகனான  19 வயது  வேமுறி பிரசாத்  துள்ளூர் பகுதியிலுள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் 10 வகுப்பு வரை படித்த  நிலையில்   கடந்த 2015 ஆம் ஆண்டு பள்ளிக்கு செல்வதை நிறுத்தியுள்ளார்.இதேபோன்று,  ஒரு வருடம் கழித்து அதே பள்ளியில் படித்து வந்த  சுஜாதாவின் இளையமகனான 17 வயது கொண்ட வேமுறி ராஜாவும்  பள்ளியில்  இருந்து நின்றுள்ளார். தற்போது, இருவரும்  கிருஷ்ணா ஆற்றுப்பகுதியில் செயல்படும் மணல் குவாரியில்  தினக்கூலியாகப் பணிபுரியத் தொடங்யுள்ளனர். இதன்வழியாக, ஒரு நாளைக்கு 200-250 ரூபாய்வரை ஊதியமாக  பெற்று வருகின்றனர். குறைவான வேலைக் காரணமாக சுழற்சி  முறையில்  வாரத்தில் மூன்று நாள்   பணிபுரிந்து வருகின்றனர்.

மணல் குவாரி தொடங்கப்பட்டதில்  இருந்து  பெண்கள், அங்கு பணிக்கு அமர்த்தப்படவில்லை. மேலும் அவரது கிராமத்தில்  விவசாய வேலைகளும் கிடைக்கவில்லை. இதனால்,  சுஜாதாவைப் போன்றப்  பெண்கள்   பலர், தங்கள்  வீடுகளிலேயே   இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜா கூறுகையில்,"இது பெரிய அளவில் முதுகுவலி எடுக்கும் வேலை ,அதுமட்டுமல்லாமல் அதிகளவிலான ஆற்றல்   தேவைப்படக்கூடிய  வேலையும் கூட , மேலும், நாங்கள் அதிகாலை 6 மணிக்கெல்லாம் சென்று, மாலை 6 மணிக்கு தான்   திரும்பி வருகிறோம்" என்று   தெரிவித்தார்.

sand getting loaded into trucks
man standing on a truck loaded with sand.

வேமுறி சுஜாதா. கைம்பெண் , தலித் சமூகத்தைச் சார்ந்தவர் , அவரது  கிராமத்தில்  விவசாய வேலை கிடைப்பதில்லை.  அவரது மகன்கள் வேமுறி ராஜா (மேலே) மற்றும்  வேமுறி பிரசாத் இருவரும் மணல்குவாரியில் பணிபுரிந்துள்ளார் , குறைந்த வேலையே கிடைப்பதால் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர் .

ஆந்திரமாநிலத்தின் அமராவதி பகுதியில்  புதிய தலைநகருக்காக கட்டிடங்கள் கட்ட நிலமளித்த, கிருஷ்ணா நதியின் வடகரையில் உள்ள 29 கிராமங்களில் ஒன்று உத்தந்தராயுனிபாலம்  கிராமம் ஆகும். அமராவதி   நகரின் பகுதி-1  திட்டத்திற்காக, மாநில அரசு 33,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது(மற்றும் மொத்தமாக  100,000 ஏக்கர் நிலம் பகுதி-3 க்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது,இது  2050 ஆம் ஆண்டு நடைமுறைக்குவரவுள்ளது).

அமராவதி நிலையான தலைநகர மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக  கடந்த 2015 ஆம் ஆண்டு,  நிலம் திரட்டும் திட்டத்தின்(LPS) கீழ் நிலவுரிமையாளர்கள் அரசுக்கு தன்னிச்சையாக  நிலங்களை அளித்தனர். இவ்வாறு அளித்தவர்கள் ஒருவேளை  நிதி இழப்பீடு பெறவில்லை என்றால்,நகரம் நிர்மாணிக்கப்பட்டவுடன் ஒரு  இடத்தை இழப்பீடாக பெறலாம் என்று மாநில அரசு கூறியுள்ளது.

மேலும், நிலத்தை கையகப்படுத்தும்  அதிகாரபூர்வ  மையமான, ஆந்திரபிரதேச தலைநகர் பகுதி  மேம்பாட்டு ஆணையம் (APCRDA), கையகப்படுத்திய நிலத்தில்  கட்டிடங்கள் கட்டிய பிறகு, மீதமுள்ள இடங்களில்  சாலைகள், பொது கட்டிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் குடிமக்களுக்கான வசதிகள் ஆகியவற்றிக்காக   பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நிலம் திரட்டும் திட்டம் முழுக்க முழுக்க  நிலவுரிமையாளர்களுக்கு இழப்பீடு  வழங்குவதையே  கருத்தில் கொண்டுள்ளது.ஆனால், நிலத்தைச் சார்ந்திருந்த விவசாயக்கூலிகள்   போன்றோரின் நலனைக்  கருத்தில் கொள்ளவில்லை.

உத்தந்தராயுனிபாலம்  கிராமம்  1503 பேர்  மக்கள் தொகை கொண்டது. இந்தக் கிராமத்தில்  மூன்று காலனிப் பகுதிகள்  உள்ளது. அவை; ஊர்த்தெரு, அதற்கடுத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்   வாழக்கூடியப் பகுதி மற்றும் ஆற்றின் கரையோரமாக லங்கா ஒடுக்கப்பட்ட (தலித்)சமூகத்தைச்  சார்ந்தவர்கள் வசிக்கக்கூடிய பகுதி.  ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வாழக்கூடிய காலனிப்பகுதியில் ஏறத்தாழ 150  பேரும்,லங்கா ஒடுக்கப்பட்ட (தலித்) சாதியினர் வாழக்கூடியப் பகுதியில்  75 பேரும் வசித்து வருவதாக கிராமத்தினர்கள் தெரிவித்தனர்.

ஊர்த்தெருவில் ஆதிக்க சாதியான கம்மா சாதியைச் சார்ந்த   நிலவுடைமையினர்களும்,நடுத்தரவர்க்க விவசாயிகளும்  வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கக்கூடிய  தலித் சமூகத்தைச் சார்ந்த பெரும்பான்மையானவர்கள்  நிலவுடமையாளர்களிடம் விவசாயக்கூலிகளாகவும் குத்தகைக்காரர்களாகவும் வேலைகளுக்காக   அவர்களைச் சார்ந்திருக்கின்றனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, உத்தந்தராயுனிபாலம் கிராமத்தில்  169 விவசாயிகள் மற்றும் 556  விவசாயக்கூலிகள்  வசித்து வருவதாக  தெரியவந்துள்ளது. மேலும், நிலமற்ற ஏழைகளுக்கு நிலமளிக்கும் ஆந்திர பிரதேச மாநில நிலசீர்திருத்தச் சட்டம் (விவசாய நிலங்களை ஒழுங்குபடுத்துதல்),1973 ன் கீழ்    தலித் சமூகத்தைச் சார்ந்த  மிகக்குறைவானவர்களுக்கே   இந்தப்பகுதியில்  நிலஉரிமையாளர்களாக உள்ளனர்.

இதுகுறித்து 70 வயதான மண்டல சுப்பா ராவ்  கூறுகையில்," எப்போது நிலவுரிமையாளர்கள்  தங்கள் நிலத்தில்  விவசாயத்தை நிறுத்திவிட்டு , அரசுக்கு நிலத்தை அளித்தார்களோ, அப்போதிருந்தே விவசாயக்கூலிகள்  தங்கள் கூலிகளை இழந்தனர்" என்று  தெரிவித்தார். இந்நிலையில் விவசாயிகள்  நிலத்தை அளித்ததும்  அதற்கு பின்னர், கிருஷ்ணா ஆற்றின் கரையிலுள்ள  உத்தந்தராயுனிபாலம், போருபாலம், லிங்கயபாலம் மற்றும் வெங்கடபாலம் ஆகிய கிராமப்பகுதிகளில் மணல் அள்ளப்படுவது அதிகரித்துள்ளது. மேலும்,  ஆற்றில் இருந்து அள்ளப்படும்   மணல் தலைநகர் பகுதி உருவாக்கத்திற்காக  பயன்படுத்தப்பட்டும்  =வருகிறது.

overcast sky over field

மண்டல சுப்பா ராவ்  கூறுகையில் ," எப்போது நிலவுரிமையாளர்கள்  தங்கள் நிலத்தில்  விவசாயத்தை நிறுத்திவிட்டு , அரசுக்கு நிலத்தை அளித்தார்களோ , அப்போதிருந்தே நாங்கள் விவசாய வேலைகளை இழகைது தொடங்கினோம்" என்று தெரிவித்துள்ளார். வலது: உத்தந்தராயுனிபாலம் கிராமத்தைச் சார்ந்த  இளம் தொழிலாளர்கள் வேலைக்காக ஆற்றின் கரையில் காத்திருக்கிறார்கள் .

இந்த கிராமத்தின் இளைஞர்கள் தற்போது வருமானத்திற்காக மணல்  குவாரியையே   சார்ந்துள்ளனர்.ஆனால்  வயதானர்களுக்கு இங்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. சுப்பா ராவ் கூறுகையில்,"மணல்குவாரி வேலையை செய்வதற்காக , நான் சிலநாட்கள்  அங்கு சென்றேன். ஆனால்,அது மிகக்கஷ்டமாக  இருந்தது.  என் வயது முதிர்வின்  காரணமாக, என்னால் அந்த வேலையை செய்ய இயலவில்லை" என்று கூறியுள்ளார். சுப்பாராவ் அவரது மனைவி, 60 வயதான வெங்கயம்மா மண்டலவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு இருக்கும் ஒரே வருமானம்,  நிலம் திரட்டும் திட்டத்தின் கீழ் நிலமில்லா குடும்பங்களுக்கு,  10 ஆண்டுகளுக்கு   மாநில அரசு  வழங்குவதாக  அறிவித்த 2,500 ரூபாய் நிவாரணம் மட்டுமேயாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு உலகவங்கியின் ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள  அறிக்கையில், இந்த பகுதி மக்களின் சராசரி மாத வருமானம்  8476 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த தொகையுடன் அரசு வழங்கும் ஓய்வூதியத்தை ஒப்பிட்டால்  மிகமிகக்குறைவாகும்.

ஊதியம்  குறித்து  வெங்கயம்மா கூறிய போது,"ஆண்கள் நாளொன்றுக்கு 500 ரூபாயும்,பெண்கள்  நாளொன்றுக்கு 150-200 ரூபாய் வரை சம்பாதித்து வந்தார்கள்.வேலையும் 365 நாட்களும் கிடைத்துகொண்டிருந்தது. நிலமற்ற விவசாயக் கூலியின்  குடும்பத்திலுள்ள ஆண்,பெண் இருவரும் உழைத்தால்  ஒரு மாதத்திற்கு 15,000 லிருந்து 20,000 வரை சம்பாதிக்க முடியும் " என்று கூறினார். இதேபோன்று  சுப்பா ராவ் கூறுகையில்," கடந்த மாதம் 25 கிலோ அரிசி பை ஒன்றின்   விலை 1500 ரூபாய், இதில்  அரசு வழங்கும் 2500 ரூபாயை வைத்து எவ்வாறு நாங்கள் சமாளிக்க இயலும்?  என கேள்வியெழுப்பியுள்ளார்.  மேலும் " தலைநகர் உருவாக்கப்படுவதால்  எங்களின் வருமானம் வெகுவாக  குறைந்துள்ளது. அதேவேளையில்,(புதிய) போக்குவரத்து  (வேலைகளுக்காக வெகு தூரம் செல்லவேண்டியதால்) இதர செலவுகள்  மற்றும் மருத்துவ செலவுகளும்   வெகுவாக அதிகரித்துள்ளது." என்றும் கூறினார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 42 வயதான கைம்பெண்,கம்பம்பட்டி பூலக்ஷ்மி கூறுகையில்," முதலில் அரசு எங்களுக்கு எதுவும் வழங்கவில்லை, எல்லாவித  சலுகைகளும் நிலவுரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டது. நாங்கள் போராட்டம் நடத்திய பிறகு தான்,  எங்களுக்கு  இந்த வேர்க்கடலை போன்று சிறிய தொகையையே அரசு  வழங்கியது(ரூபாய் 2500). எனவே, மாநில  அரசு குடும்பத்திற்கு  ஒரு  மாதத்துக்கு குறைந்தபட்சம் 10,000 ருபாயாவது  நிவாரணமாக வழங்க வேண்டும்" என்று  கூறினார். மேற்கொண்டு தெரிவிக்கையில்,"அந்த நிவாரணத்தைக் கூட அவர்கள் காலம்தாழ்த்தி தான் வழங்குகிறார்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான்  பணத்தை  பெற்று வருகிறோம். இதற்காக, ஒவ்வொரு மாதமும் மாண்டடம்(அவர்கள் கிராமத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு  சென்று வருகின்றேன். அங்கு போய்வருவதற்கு  எனக்கு 40 ரூபாய் செலவாகிறது" என்றும் தெரிவித்தார்.

மாநில அரசு இப்பகுதியில் உள்ள, 29 கிராமத்தைச் சேர்ந்த    தொழிலாளர்களுக்கு,  மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்  365 நாட்களும் வேலைவாய்ப்பு தருவதாக உறுதியளித்திருந்தது . ஆனால் அந்த வேலை  தற்போது வரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பூலக்ஷ்மி கூறுகையில்,"இந்த 365 நாட்கள் வேலையை  கூட மறந்து விடுங்கள்.ஆனால், அமராவதி(2015) நகரத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு பின்னர்,   கடந்த நான்கு வருடத்தில், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு நாள் கூட எங்களுக்கு  வேலை அளிக்கப்படவில்லை" என்று  தெரிவித்துள்ளார்.

இடது: 18 வயதான இருமியாவின் ஊதியத்தில்  அவரது தாய் பூலக்ஷிமியையும் , குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். வலது:வேமுறி சுஜாதாவும் அவரது மகன் வேமுறி ராஜாவும் உத்தந்தராயுனிபாலம் கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டின் முன்  நிற்கிறார்கள்.

பூலக்ஷ்மியின்,  18 வயதுடைய  மகனான இருமியாவின் ஊதியத்தில் தான், 5 குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட அவரது  குடும்பம் வாழ்ந்து வருகின்றனர். இதில் அவரது  தங்கையும்,பூலக்ஷ்மியின்  இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.  கடந்த 2015 ஆம் ஆண்டு 10 வகுப்போடு  பள்ளிப் படிப்பை நிறுத்திய இருமியா, அதிலிருந்து நாளொன்றுக்கு   200-250 ரூபாய் ஊதியத்தில், வாரத்தில் மூன்று நாட்கள்  வேலைக்கு செல்கிறார்.  இதுகுறித்து  இருமியா கூறுகையில்," குறைந்த வேலைக்கு அதிக தொழிலாளர்கள் இருந்த நிலையில், நாங்கள்  வேலைகளைப் பகிர்ந்து கொண்டோம். ஒரு நாள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வேலைக்கு சென்றால், அடுத்த நாள் மாலா சமூகத்தைச் சார்ந்த ஆண்கள்  வேலைக்கு செல்வார்கள்"  என்று தெரிவித்தார்.

ஒரு மேகமூட்டமான மத்திய வேளையில்,மணல் குவாரியில்  வேலைபார்க்கும்  ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள்(சிலர் எம்பிஏ வரை படித்தவர்கள்) சீட்டு விளையாடுவதில் மூழ்கியுள்ளார்கள். இவர்கள்  ஹைதராபாத்  மற்றும் சில நகரங்களில் வேலை  தேடி அலைந்திருக்கிறார்கள்.அதில் சிலருக்கு  வேலையும் கிடைத்திருக்கிறது. இந்நிலையில், வேலை கிடைக்காதவர்கள்  வீட்டிற்கு  திரும்பி இருக்கிறார்கள்.  அங்கு அவர்களுக்கு    விவசாய வேலைகளும்   கிடைக்கவில்லை. இது குறித்து  ஏலூரு நகரிலுள்ள கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ பயின்ற 23 வயதான அங்கலா மதன் கூறுகையில்,"மணல் குவாரி வேலையும் நாளுக்கு நாள்  குறைந்து வருகிறது. ஆற்று படுகையில் மால் முற்றிலுமாக  தீர்ந்ததும்  வேலை முற்றிலுமாக முடிந்துவிடும்" என்று  தெரிவித்தார்.

இந்த ஆற்றுப்  படுகையில் ட்ரேடஜிங் கருவிகள் மற்றும்  இயந்திரப்  படகுகள் வழியாக தோண்டப்பட்டு மணல் அள்ளப்பட்டு, பின்னர் ஆற்றின் கரையில் குவிக்கப்படுகிறது.  இந்த குவாரியில் பணிபுரியும் குண்டூரில் எம்.பி.ஏ முடித்த  24 வயதான புலி சுதீர் இதுகுறித்து   தெரிவிக்கையில்,"நாங்கள் மணலை  டிராக்டரில் ஏற்றுவோம்.நாங்கள் எம்.பி.ஏ முடித்துள்ளோம். ஆனால் அது   இந்த வேலையை  செய்வதில் வந்து   முடிந்துள்ளது" என்று  கூறினார்.

இதேபோன்று, இதுகுறித்து  தெரிவித்த  சுதீரின்  உறவினரும்    எம்.பி.ஏ பட்டதாரியுமான  25 வயதுடைய பாரத் குமார், "குடும்பத்தில்  ஒருவருக்கு வேலை தருவதாக வாக்குறுதியளித்ததால்  தான், நாங்கள்  சந்திரபாபுவிற்கு வாக்களித்தோம். ஆனால்,  அந்த  சலுகை  அவரது  குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே  அறிவித்தாரா என்று எங்களுக்கு புரியவில்லை" எனக்  கோபத்தோடு  தெரிவித்தார். அவர்  கடந்த 2017 ஆம் ஆண்டு  மாநில அமைச்சரவையில் முதலமைச்சர்   சந்திராபாபு நாயுடுவின் மகன்,    நர லோகேஷ்  மந்திரி  பொறுப்பு வகித்தது குறித்து இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

ஆற்றுப் படுகையில்  இயந்திர முறையில் மணல் அள்ளக்கூடாது  என்று  தேசிய பசுமைத் தீர்ப்பாயமும், ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றமும்  எண்ணற்ற  தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஆனால் இந்த தீர்ப்புகளை மாநில அரசு ஒரு பொருட்டாக எண்ணவேயில்லை. இந்த குவாரியில் பணிபுரியும் ஒடுக்கப்பட்ட  சமூகத்தைச் சேர்ந்த மற்றுமொரு  எம்.பி.ஏ  பட்டதாரி(பெயர் குறிப்பிட விரும்பவில்லை) குறிப்பிடுகையில், "ஆளும்  தெலுங்கு தேசம் (TDP) கட்சியைச்  சார்ந்த, இந்த பகுதி   சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற  உறுப்பினர் மற்றும் சில அமைச்சர்களே, இந்த மணல் குவாரியோடு  சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்".  மேலும்," அவர்கள்  எங்கள்  தேவைகளைப்   பூர்த்தி செய்யவில்லை. ஆனால்  அடுத்த ஆண்டு வரவிருக்கும்    தேர்தலில் வெற்றி  பெறுவதற்காக  பணத்தை  (இந்த  குவாரி  மூலம் பணம்  ஈட்டுகிறார்கள்) செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்" என்றும்   தெரிவித்தார்.

'' ஆற்றில்  மணல்  அள்ளுவது நிறுத்தப்பட்டு ஆறு காப்பாற்றப்படவேண்டும்  மற்றும்   மாநில அரசு வாக்குறுதியளித்த  வேலைகளை உடனடியாக வழங்க வேண்டும் '

கடந்த மார்ச் 2017 அன்று, உத்தந்தராயுனிபாலம் கிராமத்தைச் சார்ந்த,  மூன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  குடும்பங்கள் வங்கியிலிருந்து பெற்ற கடன் மற்றும்  இதர வகையில்   12 லட்ச ரூபாய் திரட்டி தாங்களே மணல் அள்ளுவதற்காக  ட்ரெட்ஜ்ர் இயந்திரத்தை வாங்கிஇருக்கின்றனர்.  ஆனால், ஆதிக்க சாதியான  கம்மா சாதியின் தலைவர், இவர்களை அங்கு  மணல் அள்ளக்கூடாது  என தடுத்துள்ளார். எனவே அவர்கள்  கம்மா சாதியை சார்ந்த  ஒப்பந்தக்காரரிடம் தற்போது  பணிபுரிகிறார்கள். கம்மா சாதி தலைவரும், ஒப்பந்தக்காரரும்  தெலுங்கு  தேசம் கட்சியைச் சார்ந்தவர்கள் ஆவர். இதுகுறித்து  தெரிவித்த  ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  இளைஞர் குறிப்பிடுகையில்  ,"நாங்கள் மணல் அள்ளினால் அது சட்டவிரோதம். ஆனால், ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களின் கீழ், அதே மணல் குவாரியில் நாங்கள்  பணிபுரிந்தால் அது சட்டவிரோதமாகாது. மேலும், எங்களது வாழ்வாதாரத்தைக் காப்பதாக சாக்குப்போக்கு சொல்லி இது நியாயப்படுத்தப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

இதேவேளையில், கிருஷ்ணா ஆற்றின் படுகையிலும்,கரையிலும்  நடந்து வரும் மணல் சுரண்டலால் குறிப்பிடத்தக்க அளவில் சூழலியல் சீரழிவு  நடந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடத்திவரும்,   டெல்லி  ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின்  ஓய்வுபெற்ற பேராசிரியர், விக்ரம் சோனி  கூறுகையில்," ஆற்றில் நீர் சேமிக்கப்படுவதற்கு மணல்  மிகவும் அவசியமானது. மேலும்,    ஆற்றில்  போதிய அளவில் மணல் இருந்தால்    மட்டுமே, ஆற்றின்  சூழலியல் சமநிலையை பாதுகாக்க முடியும். இந்த ஆற்றில்(கிருஷ்ணா நதி) உள்ள  மணலின் அளவு சில இடங்களில் 30 மீட்டரும், முற்றிலும் மணல் அள்ளப்பட்டுள்ள  இடங்களில் 5 மீட்டரூமாக வேறுபட்டுள்ளது. இது அசாதாரணமானது. பல கோடி ஆண்டுகளாக உள்ள இயற்கையான ஆற்றுச்சூழல்,அரசியல்வாதிகளின் பணத்தாசைக்காக சுரண்டப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

எம்.பி.ஏ முடித்த இளைஞர்களோ  அல்லது ராஜா,பிரசாத் மற்றும்  இருமியாவோ, மணல்  குவாரியில்  வேலைபார்ப்பவர்களின்  பிள்ளைகளோ  தாங்கள் வாழ்வு எங்கு சென்றுகொண்டிருக்கிறது  என்பதை  தெரிந்து வைத்திருக்கிறார்கள்.மதன்  கூறுகையில்," ஆற்றில்  மணல்  அள்ளுவது நிறுத்தப்பட்டு ஆறு உடனடியாக காப்பாற்றப்படவேண்டும் மற்றும்   மாநில அரசு வாக்குறுதியளித்த  வேலைகளை உடனடியாக வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு  ராஜா  கூறும் போது,"எங்களுக்கு  என்ன செய்வதென்றே  புரியவில்லை ,  இந்த மணல்  முற்றிலுமாக அள்ளப்பட்டுவிட்டால் நாங்கள்   எவ்வாறு வாழ முடியும்" என்று  குறிப்பிட்டார்.

இதே தொடரில் மேலும் சில கட்டுரைகள்:

இது மக்களின் தலைநகர் இல்லை

புதிய தலைநகர், பழைய பிரிவினை செயல்பாடுகள்

‘அரசு உறுதி தந்ததை போல வேலைகள் தர வேண்டும்’

அதிகரிக்கும் நிலத்தின் விலை, வீழும் விவசாய வளம்

பெரிய தலைநகர், குறைவான சம்பளம் பெறும் புலம்பெயர தொழிலாளர்கள்

தமிழில்: பிரதீப் இளங்கோவன்

Rahul Maganti

Rahul Maganti is an independent journalist and 2017 PARI Fellow based in Vijayawada, Andhra Pradesh.

Other stories by Rahul Maganti
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan