வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களை முகத்தில் பூசிக் கொண்டு மூக்கில் ஒரு புள்ளியும் இரு கன்னங்களில் இரு புள்ளிகளையும் வைத்துக் கொண்டு ஒரு நீலப் பாலிதின் பையால் செய்த கோமாளித் தொப்பியை அணிந்து கொண்டு, வேடிக்கையான பாட்டொன்று பாடி, ஓர் இயல்பான தாளம் கையில் ஓட, பார்த்தாலே சிரிப்பு ஏற்படுத்தும் வகையில் அவர் இருந்தார். அங்கிருந்த ஆரவாரம் வழக்கமானதுதான். ஜவ்வாது மலைகளின் சிறிய அரசுப் பள்ளியோ சென்னையின் பெரிய தனியார் பள்ளியோ சத்தியமங்கலக் காடுகளுக்குள் பழங்குடி குழந்தைகளுக்கான பள்ளியோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியோ எங்கானாலும், எழில் அண்ணாவின் கலை முகாம்கள் இப்படிதான் தொடங்கும். ஒரு சிறு நகைச்சுவை நாடகம் கொண்ட பாடலுக்குள் அண்ணா சென்றுவிடுவார். குழந்தைகள் தங்களின் தயக்கங்களை கைவிட்டு ஓடி விளையாடி ஆடிப் பாடலுடன் பாட அது உதவுகிறது.
திறன் வாய்ந்த கலைஞரான அண்ணா, பள்ளிகளில் இருக்கும் வசதிகளைப் பற்றி கவலைப்பட மாட்டார். பதிலுக்கு அவர் எதுவும் எதிர்பார்க்கவும் மாட்டார். தனியாக வசிப்பதற்கோ ஹோட்டல் அறை ஏற்பாடுகளோ, சிறப்பான உபகரணமோ எதுவும் கேட்க மாட்டார். மின்சாரமும் நீரும் அலங்காரக் கைவினைப் பொருட்கள் இல்லையென்றாலும் அவர் இயங்குவார். குழந்தைகளைT சந்திப்பதுதான் அவரது பிரதானத் தேவை. அவர்களுடன் உரையாடி இயங்குவதில் மட்டும்தான் அவர் கவனம் செலுத்துவார். மற்ற எல்லாமுமே இரண்டாம் பட்சம்தான். அவரின் வாழ்க்கையிலிருந்து குழந்தைகளை பிரிக்க முடியாது. குழந்தைகள் என வந்துவிட்டால் செயல்பாடும் வசீகரமும் அவருக்கு வந்து விடும்.
ஒருமுறை சத்தியமங்கலத்தில், வண்ணங்களை பார்த்திராத குழந்தைகளுடன் அவர் இயங்கினார். வண்ணங்களைக் கொண்டு கற்பனையாக ஒன்றை உருவாக்கச் செய்து, அது கொடுக்கும் புதிய அனுபவத்தை அவர்கள் முதன்முறையாக அனுபவிக்க அவர் உதவினார். இத்தகைய அனுபவங்களை களிமண் விரல்கள் என்கிற தன் கலைப் பள்ளியைத் தொடங்கி கடந்த 22 வருடங்களாக ஓய்வின்றி குழந்தைகளுக்காக தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நோய் வந்து நான் பார்த்ததே இல்லை. அவருக்கான மருந்து குழந்தைகளுடன் இயங்குவதுதான். குழந்தைகளுடன் இயங்க அவர் எப்போதுமே தயாராக இருப்பார்.
30 வருடங்களுக்கு முன் 1992-ம் ஆண்டில் அண்ணா சென்னையின் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைப் பட்டப்படிப்பு முடித்தார். “எனக்கு மூத்தவர்களான ஓவியர் தமிழ்செல்வன், ஆடை வடிவமைப்பாளர் பிரபாகரன், கல்லூரி வாழ்வில் மிகப் பெரும் ஆதரவு வழங்கிய ஓவியர் ராஜ்மோகன் ஆகியோர்தான் பட்டப்படிப்பை நான் முடிக்க உதவினர்,” என நினைவுகூர்கிறார். மண்பாண்ட சிலை வடித்தலில் படிப்பை முடித்துவிட்டு, கலைவேலைச் செயல்பாடுகளில் ஈடுபட சென்னையின் லலித் கலா அகாதெமியில் சேர்ந்தேன்.” அவரின் சிலை வடிக்கும் ஸ்டுடியோவிலும் கொஞ்ச நாட்கள் வேலை பார்த்தார்.
“என்னுடைய படைப்புகள் விற்கப்படத் தொடங்கியதும் அவை சாமானியர்களைச் சென்றடையவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அதற்குப்பிறகுதான் நான் வெகுஜன மக்களுக்கான கலைச் செயல்பாடுகளில் பங்கெடுக்கத் தொடங்கினேன். கிராமப்புறங்களும் தமிழ்நாட்டின் ஐந்திணை நிலங்களும்தான் நான் இயங்க வேண்டிய இடங்களென முடிவெடுத்தேன். என்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து களிமண் பொம்மைகளும் கைவினைப் பொருட்களும் தயாரிக்கத் தொடங்கினேன்,” என்கிறார் அவர். காகித முகமூடிகள், களிமண் முகமூடிகள், களிமண் வார்ப்புகள், ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், ஓரிகாமி போன்றவற்றை செய்ய குழந்தைகளுக்கு அவர் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.