வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கும் கட்டியைப் பற்றிக் கவலை கொள்கிறார் சுனிதா தேவி. அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை. வயிறு உப்பசமாக இருக்கிறது. இரண்டு மாதங்கள் கழித்து வீட்டருகே இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர் சொன்ன விஷயம் அவரை அவநம்பிக்கையில் ஆழ்த்தியது: “நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்.”
எப்படி அது சாத்தியமென அவருக்குப் புரியவில்லை. கர்ப்பத்தைத் தடுக்கவென அவர் காப்பர் டி எடுத்துக் கொண்டு ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை.
2019ம் ஆண்டு நடந்த சம்பவத்தை நினைவுகூர்கையில் வெளிறி மெலிவாக இருக்கும் அவரது முகம் இன்னும் அதிகமாக வெளிருகிறது. அவரின் தலைமுடி நேர்த்தியாக இழுத்து கொண்டையாக முடியப்பட்டிருக்கிறது. அவரின் ஒடுங்கிய கண்கள் சோர்வாக இருக்கின்றன. முகத்திலேயே பிரகாசமாக இருக்கும் பகுதி நெற்றியில் அவர் வைத்திருக்கும் சிவப்புப் பொட்டுதான்.
நான்கு குழந்தைகளுக்கு தாய் 30 வயது சுனிதா (உண்மையானப் பெயரில்லை). அவருக்கு இரண்டு மகள்களும் மகன்களும் 4 வயதிலிருந்து 10 வயதுகளுக்குள் இருக்கின்றனர். 2019ம் ஆண்டின் மே மாதத்தில், அவரின் கடைசி குழந்தைக்கு இரண்டு வயதாக இருக்கும்போது மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டாமென சுனிதா முடிவெடுத்தார். அவரிருந்தப் பகுதிக்கு வந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் மூலமாக குடும்பக் கட்டுப்பாடு முறைகளை அவர் தெரிந்து கொண்டார். எல்லா முறைகளையும் ஆராய்ந்தபிறகு அவர் அந்தரா என்கிற கருத்தடை முறையை தேர்ந்தெடுத்தார். ஊசி மூலம் செலுத்திக் கொண்டால் மூன்று மாதங்களுக்கு கர்ப்பத்தை அந்தரா தடுக்குமென சொல்லப்பட்டது. “முயற்சி செய்து பார்க்கலாமென எண்ணினேன்,” என்கிறார் அவர்.
அவரது 8 X 10 அடி அறையின் தரையில் ஒரு போர்வை மீது நாங்கள் அமர்ந்திருந்தோம். மற்றப் போர்வைகள் மூலையிலிருந்த ஒரு சிலிண்டர் மீது குவித்து வைக்கப்பட்டிருந்தன. சுனிதாவின் மைத்துனர் குடும்பம் பக்கத்து அறையில் வாழ்ந்தது. இன்னொரு அறையில் இன்னொரு மைத்துனர் வசிக்கிறார். தென்மேற்கு தில்லி மாவட்டத்தின் நஜாஃப்கரின் மகேஷ் கார்டன் பகுதியில் அந்த வீடு இருக்கிறது.
கோபால் நகரின் ஆரம்பச் சுகாதார மையம் சுனிதாவின் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்தரா ஊசி போட அங்குதான் சுகாதார செயற்பாட்டாளருடன் அவர் சென்றார். ஆனால் மையத்திலிருந்து மருத்துவர் வேறொரு யோசனை அளித்தார். “மருத்துவர் காப்பர் டியைப் பற்றி விளக்கத் தொடங்கினார். அது பாதுகாப்பான முறை என்பதால் அதை பயன்படுத்துமாறு என்னிடம் கூறினார்,” என்கிறார் சுனிதா. “மருத்துவரிடம் நான் காப்பர் டியைப் பற்றி கேட்கவே இல்லை,” என்றும் அவர் சொல்கிறார் உறுதியான குரலில். “ஆனால் மருத்துவர் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். ‘குழந்தைப் பெற்றுக் கொள்வதை நிறுத்த விரும்பவில்லையா?’ என என்னிடம் கேட்டார்.”








