மதிய வேலையில் பழைய அலுமினிய பாத்திரத்தின் கடைசி அரிசி தானியங்களை துடைத்து எடுக்கிறார் மாயா. அதுவே அவரது ஒருநாள் உணவு. அவருக்கும், ஷிவாவிற்கும் பாத்திரத்தில் வேறு மசூர் பருப்பு கிடையாது.
“நாங்கள் ஒருமுறை தான் உண்கிறோம். எங்கள் குழந்தைகளுக்காக இரண்டு வேளை சமைக்கிறோம். அவர்களுக்கு உணவு போதுமா என்று தான் முதலில் கவனிப்போம்,” என்கிறார் 23 வயது மாயா. “பெருந்தொற்று தொடங்கியது முதலே எங்களுக்கு ரேஷன் குறைவாக கிடைக்கிறது,” என்கிறார் தனது பழைய புடவைகளும் போர்வைகளும் கூரையாக போர்த்தப்பட்ட மூங்கில் குடிசைக்கு வெளியே நின்றபடி 25 வயது ஷிவா.
2020 மார்ச் மாதம் பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு தொடங்கியது முதல் மாயாவும், ஷிவா கண்டடியும் 2 முதல் 7 வயது வரையுள்ள அவர்களின் நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு உணவளிக்கப் போராடி வருகின்றனர்.
பீட் மாவட்டம் பீட் தாலுக்கா பந்தர்யாச்சிவாடி கிராமத்திலிருந்து 6 முதல் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திறந்த திடலில் அமைந்துள்ளது அவர்களின் தற்காலிக குடிசை. மழை பெய்தால் அவர்களின் வண்ணமயமான சுவரும், மேற்கூரையும் நீர் ஒழுகத் தொடங்கும்.
மசன்ஜோகி எனும் நாடோடி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் (மகாராஷ்டிராவில் ஓபிசி பிரிவினராக பட்டியலிடப்பட்டவர்கள்) 14 குடிசைகள் அங்கு அமைந்துள்ளன. அவர்கள் பாரம்பரியமாக யாசகத்தை நம்பி வாழுபவர்கள். கூலி வேலை தேடி குடும்பத்துடன் ஆண்டிற்கு ஒருமுறை மாநிலத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்கின்றனர்.













