கடல் சங்குகளை வெட்டி வளையல்கள் செய்வது எப்படி என்று ஷானுவுக்கு முதலில் கற்றுத் தந்தவர் அவரது உறவினர் விஸ்வநாத் சென்.
“வளையல்களில் வடிவம் செதுக்கி முகவர்களுக்கு அனுப்புவேன். அவர்கள் அதை விற்பார்கள். நான் சாதாரண வடிவம் செதுக்கிய வளையல்களை மட்டுமே தயாரிக்கிறேன். வடிவத்தை செதுக்கிய பிறகு அதில் தங்கத்தகடு சுற்றி விற்பனைக்கு அனுப்புகிறவர்களும் உண்டு,” என்று விளக்குகிறார் 31 வயது ஷானு கோஷ். அவர் தமது வயதில் பாதிக்கும் மேற்பட்ட காலம் இந்த வேலையை செய்துவருவதாக இவர் கூறுகிறார்.
மேற்கு வங்கத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாரக்பூரில் உள்ள ஷங்காபானிக் காலனியில் உள்ள பட்டறையில் இருக்கிறார் இந்த சங்கு கைவினைஞர். இந்தப் பட்டறையை சுற்றியுள்ள பகுதியில் ஆங்காங்கே சங்கு வேலைப்பாடு செய்து தரும் பட்டறைகள் உள்ளன. “லால்குத்தி முதல் கோஷ்பாரா வரையில் உள்ள பகுதிகளில் சங்கு கைவினைஞர்கள் கை வளையல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்,” என்கிறார் அவர்.
அந்தமானில் இருந்தும், சென்னையில் இருந்தும் சங்குகளை வரவழைக்கிறார்கள் முகவர்கள். ஒரு வகை கடல் நத்தையின் ஓடுதான் சங்கு ஆகும். இந்த சங்கின் அளவைப் பொறுத்து அது ஊது சங்காகவோ, வளையல் தயாரிப்பதற்கோ அனுப்பப்படும். தடிமனமான, பெரிய சங்குகளில் வளையல் செய்வது எளிது. சிறிய, லேசான சங்குகள் துளையிடும்போது எளிதில் உடைந்துவிடும். எனவே லேசான சங்குகள் ஊது சங்குகளாக பயன்படுத்தப்படுகின்றன. பெரிய சங்குகள் வளையல் செய்யப் பயன்படுகின்றன.










