ஒரு பெண்ணுக்கான நீதி எப்படி இவ்வாறு முடிய முடியும்?
– பில்கிஸ் பானோ


Gandhinagar, Gujarat
|THU, AUG 25, 2022
நீதியின் முடிவுகள்: பில்கிஸ் பானோவின் வழக்கு
நீதிக்கான ஒரு தனிப் பெண்ணின் போராட்டமும் அவரை 2002ம் ஆண்டின் குஜராத் கலவரத்தின்போது வன்புணர்ந்த 11 குற்றவாளிகள் பெற்றிருக்கும் விடுதலையும் அச்சுறுத்தும் வகையில் இக்கவிதையின் மையத்தில் வீற்றிருக்கிறது
Poem
Illustration
Editor
Translator
மார்ச் 2002-ல் 19 வயது பில்கிஸ் யாகூப் ரசூல் ஒரு கும்பலால் கொடூரமாக வன்புணர்வுக்கு உள்ளானார். குஜராத்தின் தகோத் மாவட்டத்தில் அக்கும்பல், அவரது மூன்று வயது மகள் சலேகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை கொன்றது. அச்சமயத்தில் பில்கிஸ் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அந்த நாளில் அவர் லிம்கேதா தாலுக்காவில் உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் வசித்து வந்தார். அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அனைவரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் அனைவரும் அவருக்கு தெரிந்தவர்களும் கூட.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி மத்தியப் புலனாய்வு நிறுவனத்தால் 2003-ல் அந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒரு மாதம் கழித்து கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 2004-ல் உச்சநீதிமன்றம் விசாரணையை மும்பைக்கு மாற்றியது. அங்கு சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி குற்றஞ்சாட்டப்பட்ட 20 பேரில் 13 பேரின் குற்றத்தை ஜனவரி 2008-ல் உறுதி செய்தது. அவர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மே 2017-ல் பம்பாய் உயர்நீதிமன்றம் 11 பேரின் ஆயுள்தண்டனையை உறுதிச் செய்து, விடுவிக்கப்பட்ட ஏழு பேரின் விடுதலையை ரத்து செய்தது.
ஐந்து வருடங்கள் கழித்து ஆகஸ்ட் 15, 2022-ல் 11 பேரின் ஆயுள் தண்டனையும் குஜராத் அரசு நியமித்த சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரையில் குறைக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
பல வல்லுநர்கள் அவர்களின் விடுதலை சட்டப்பூர்வமானதுதானா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இங்கு தன்னுடைய கோபத்தின் குரலை பில்கிஸிடம் பேசுவதன் மூலம் கவிஞர் வெளிப்படுத்துகிறார்.
என்னுடையப் பெயராக இரு, பில்கிஸ்
உன் பெயரில் என்ன இருக்கிறது, பில்கிஸ்?
என் கவிதையில் ஒரு துளையை அது எரியச் செய்கிறது.
பாதுகாப்பான காதுகளில் ரத்தம் வழியச் செய்கிறது
உன் பெயரில் என்ன இருக்கிறது, பில்கிஸ்?
அலையும் நாக்கை அது செயலிழக்க வைக்கிறது
பேச்சின் நடுவிலேயே அது உறைந்து போகிறது
உன் கண்களில் திகைத்த சூரியன்களின் துக்கம்,
நான் கற்பனை செய்திருந்த உன் வலியின் காட்சிகள்
ஒவ்வொன்றையும் காண முடியாமல் செய்கிறது
யாத்திரை செல்லும் பாலையை அது முடிவின்றி எரிக்கிறது
சுழலும் நினைவுக் கடல்கள்
சீறும் உன் பார்வையால் தடுக்கப்பட்டது
நான் போற்றும் ஒவ்வொரு விழுமியத்தையும் காய்ந்து போக வைத்தது
இந்த போலி நாகரீகத்தை அடித்து நொறுக்கியது
சீட்டுக் கட்டு கோபுரம் போல, நன்றாக விற்கப்பட்ட ஒரு பொய்.
உன் பெயரில் என்ன இருக்கிறது, பில்கிஸ்?
அது மை புட்டிகளை எறிந்து
கவித்துவ நீதியின் சூரியகாந்தி முகத்தில் தெறிக்கிறது?
சுவாசிக்கும் உன் ரத்தத்தில் அது நனைந்து
இந்த அருவருப்பான பூமியை ஒருநாள்
சலேஹாவின் மிருதுவான தலையைப் போல் வெடிக்க வைக்கும்
வெறும் உள்பாவாடையுடன்
நீ ஏறிய மலை
அநேகமாக நிர்வாணப்படுத்தப்பட்டே இருக்கும்
புற்களே இல்லாமல் பல வருடங்களுக்கு
இந்த நிலத்தை வருடும் ஒவ்வொரு காற்றும்
ஆண்மையின்மையின் சாபத்தைத் தேடும்
உன் பெயரில் என்ன இருக்கிறது, பில்கிஸ்
ஆணுறுப்பைப் போன்ற என் பேனா
பாதியிலேயே நின்று
பிரபஞ்சத்தின் நீண்ட வளைவின்
தன் தார்மீக முனையை உடைத்துக் கொள்கிறது?
இந்தக் கவிதையும் அநேகமாக
மதிப்பின்றி போய்விடும்
இறந்து போன கருணை கொள்கையாக, நிழலில் நிகழும் சட்ட விவகாரமாக
இது உயிர்க்க நீ தொடு, தைரியத்தை சுவாசி
உன் பெயரை இதற்குச் சூட்டு பில்கிஸ்.
என் தளர்ச்சியடைந்த மந்த குடிமக்களுக்கு
பெயர்ச்சொல்லாக மட்டுமின்றி வினைச்சொல்லாகவும் மாறு பில்கிஸ்
அவிழ்ந்தலையும் பெயர்ச்சொற்களை உரிச்சொற்களாக உயர்த்து
போராடி உடைத்தெறியும் சுறுசுறுப்பான
கேள்விக்கான வினையுரிச் சொற்களை கற்றுக் கொடு பில்கிஸ்
மிருதுவான, நெகிழ்ந்த பேச்சுகளால்
தளர்ந்திருக்கும் என் மொழிக்கு
வலிமையின் உருவகத்தை
சுதந்திரத்துக்கான ஆகுபெயரை வழங்கு பில்கிஸ்
நீதிக்கான எதிரொலிப்பை
பழியுணர்ச்சிக்கு எதிர்க்கருத்தை வழங்கு பில்கிஸ்
உன்னுடைய பார்வையையும் அதற்கு வழங்கு பில்கிஸ்
உன்னிலிருந்து பாய்ந்து வரும் இரவு
அதன் கண்களுக்கு மையாகட்டும், பில்கிஸ்
பில்கிஸ் அதன் மோனை, பில்கிஸ் அதன் ஓசை
பில்கிஸ் இதயப்பாட்டு எழுப்பும் கம்பீரம்
இந்தக் கவிதைத்தாளின் கூண்டை உடைக்கட்டும்
உயர எழட்டும், பரந்து பரவட்டும்;
மனிதத்துக்கான வெள்ளைப் புறா
ரத்தத்தாலான இந்த பூவுலகை
தன் செட்டைக்குள் வைத்து
உன் பெயரால் குணப்படுத்தட்டும் பில்கிஸ்
இந்த ஒரு தடவை இது என் பிரார்த்தனையாகட்டும் பில்கிஸ்
தமிழில்: ராஜசங்கீதன்
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/நீதியின்-முடிவுகள்-பில்கிஸ்-பானோவின்-வழக்கு

