மராத்வடாவின் சிறந்த பயிர் தாகம்தான். கரும்பை விடுங்கள். தாகம், மனிதன் மற்றும் வணிகம் எதையும் மறைத்து விடும். தாகத்தை அறுவடை செய்பவர்கள் கோடிக்கணக்கில் ஒருநாளுக்கு இப்பகுதியில் சம்பாதிக்கிறார்கள். சாலையில் தென்படும் வேன்களில் நீங்கள் காணும் காய்ந்துபோன கரும்புகள் கால்நடைத் தீவனமாக மிஞ்சும். அதே சாலைகளில் நீங்கள் பார்க்கும் “டேங்கர் லாரிகள்” லாபம் தேடி டவுன்களுக்கும் கிராமங்களுக்கும் ஆலைகளுக்கும் சென்று கொண்டிருக்கும். தண்ணீர் சந்தைகள்தான் பெரிய சந்தைகள். டேங்கர்கள் அவற்றின் அடையாளம்.
ஆயிரக்கணக்கான டேங்கர் லாரிகள் தினமும் மராத்வடாவில் குறுக்கும் மறுக்குமாக செல்கின்றன. தண்ணீர் சேகரிக்கின்றன. கொண்டு செல்கின்றன. விற்கின்றன. அரசின் ஒப்பந்தத்துக்கு இயங்குபவை சொற்பம்தான். அவற்றில் சில காகிதத்தில் மட்டும்தான் இருக்கும். தனியார் இயக்கும் டேங்கர் லாரிகள்தான் வேகமாக விரிவடையும் தண்ணீர் சந்தைகளுக்கு முக்கியமானவை.
எம்எல்ஏக்களும் நிறுவன முதலாளிகளாக இருந்து ஒப்பந்ததாரர்களாக மாறியவர்களும் ஒப்பந்ததாரர்களாக இருந்து நிறுவன முதலாளிகளாக மாறியவர்களும் டேங்கர் லாரி பொருளாதாரத்துக்கு முக்கியமானவர்கள். அதிகாரிகளும் கூட. பலர் டேங்கர் லாரிகளின் நேரடி உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அல்லது பினாமி பயன்படுத்துகிறார்கள்.
டேங்கர் என்பது என்ன? உண்மையில் பெரிய ட்ரம்களாக உருட்டப்பட்ட இரும்புத் தகடுகள்தான், டேங்கர்கள். 10,000 லிட்டர் தண்ணீர் டேங்கரில் 5 X 18 அடி தகடுகள் மூன்று இருக்கும். ஒவ்வொன்றின் எடையும் 198 கிலோவாக இருக்கும். உருட்டப்பட்ட இரும்புத் தகடுகள் ஒட்ட வைக்கப்பட்டிருக்கும். இவற்றை ட்ரக்குகளிலோ லாரிகளிலோ பிற பெரிய வாகனங்களிலோ கிடத்தி மாட்டி எடுத்துச் செல்ல முடியும். சிறு வாகனங்கள் சிறு கொள்ளளவு கொண்ட உருளைகளை சுமந்து செல்லும். ஒரு 5,000 லிட்டர் உருளையை ஒரு பெரிய வேனுக்கு பின்னால் பொருத்த முடியும். அந்த கொள்ளளவு 1000 மற்றும் 500 லிட்டர் ட்ரம் வரை இருக்கின்றன. சிறு ட்ராக்டர்களிலும் திறந்த ஆட்டோக்களிலும் மாட்டு வண்டிகளிலும் கூட கொண்டு செல்ல முடியும்.
தண்ணீருக்கான நெருக்கடி அதிகரிப்பதால் நூற்றுக்கணக்கான உருளைகள் ஒவ்வொரு நாளும் மாநிலத்தில் உருவாக்கப்படுகின்றன. ஜல்னா மாவட்டத்தின் ஜல்னா டவுனில் கிட்டத்தட்ட 1,200 டேங்கர்களும் ட்ரக்குகளும் ட்ராக்டர்களும் ஆட்டோக்களும் வெவ்வேறு கொள்ளளவு உருளைகளுடன் பறந்து கொண்டிருக்கின்றன. நீராதாரங்களுக்கு இடையேயும் தேவையுடன் இருக்கும் பொதுமக்களின் பகுதிகளிலும் அவை ஓடிக் கொண்டிருக்கின்றன. ஓட்டுநர்கள் வாடிக்கையாளர்களுடன் செல்பேசிகளில் பேரம் பேசுகிறார்கள். ஆனாலும் அதிக அளவிலான தண்ணீர் அதிகமாக பணம் கொடுக்கும் ஆலைகளுக்குதான் செல்கிறது. “டேங்கர் உரிமையாளர்கள் ஒருநாளில் 60 லட்சம் ரூபாயிலிருந்து 75 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் செய்கின்றனர்,” என்கிறார் மராத்தி தினசரியான லோக்சட்டாவின் லஷ்மண் ரவுத். “அந்தளவுக்கு தண்ணீர் சந்தை மதிப்பு வாய்ந்தது.” ரவுத்தும் அவரின் சக செய்தியாளர்களும் இந்தப் பகுதியின் தண்ணீர் வர்த்தகத்தை பல ஆண்டுகளாக செய்தியாக்கி இருக்கின்றனர்.
உருளைகளின் அளவு மாறும். ”ஆனால் இந்த டவுனில் அவற்றின் சராசரி கொள்ளளவு 5,000 லிட்டராக இருக்கிறது,” என்கிறார் ரவுத். இந்த 1,200 வாகனங்களில் ஒவ்வொன்றும் ஒருநாளில் குறைந்தது மூன்று பயணங்களை மேற்கொள்கிறது. 24 மணி நேரங்களில் அவை கிட்டத்தட்ட ஒரு கோடியே எண்பது லட்ச லிட்டர் தண்ணீரை சுமக்கின்ற்ன. தற்போதைய விலையான ஒரு லிட்டர் 350 ரூபாய் என்ற கணக்கில் பார்த்தால் ஒருநாளில் 60 லட்சத்துக்கும் அதிக வணிகம். அந்த விலைகளும் வீட்டுத் தேவை, கால்நடை, தொழில் நிறுவனம் என பயன்பாட்டுக்கு ஏற்ப மாறும்.”
டேங்கர் பொருளாதாரத்தை பஞ்சம்தான் இயக்குகிறது. டேங்கர்கள் உருவாக்கப்படுகின்றன. பழுது பார்க்கப்படுகின்றன. வாடகைக்கு விடப்படுகின்றன. விற்கப்படுகின்றன. வாங்கப்படுகின்றன. ஜல்னாவுக்கு சென்று கொண்டிருக்கும்போது பரபரப்பாக இருந்த ஓர் இடத்தைக் கண்டோம். அகமது நகர் மாவட்டத்தில் இருந்த ரகுரி பகுதி. ஒரு 10,000 லிட்டர் கொள்ளளவு டேங்கரை உருவாக்க இங்கு 30,000 ரூபாய் ஆகிறது. இரண்டு மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. ரகுரி ஆலையில், டேங்கர் தொழில்நுட்பத்தைப் பற்றிய உடனடி கல்வி பெற்றுக் கொண்டோம். “ஒவ்வொரு 5 X 18 அடி தகடும் 3.5 மிமீ தடிமன் கொண்டது,” என்கிறார் தயாரிக்கும் யூனிட்டின் உரிமையாளரான ஷ்ரீகாந்த் மெலாவானே. மனித சக்தி கொண்டு தகடுகள் உருட்டப்படும் இயந்திரத்தை எங்களுக்குக் காட்டுகிறார்.



