“மேற்கு வங்கத்தின் பல விவசாயிகளுக்கு இந்த சட்டங்களை பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஆகவே தலைவர்களின் பேச்சை கேட்பதற்காக என் கிராமத்திலிருந்து சிலரை அழைத்து வந்திருக்கிறேன். ஊருக்கு திரும்பியதும் அண்டை வீட்டுக்காரர்களிடமும் நண்பர்களிடமும் அவர்கள் கேட்டதை சொல்வார்கள்,” என்கிறார் சுப்ரதா அதாக்.
10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பரா கமலாப்பூரிலிருந்து மார்ச் 14ம் தேதி 31 வயது விவசாயி சிங்கூர் கூட்டத்துக்கு வந்திருந்தார். வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயக் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் மார்ச் மாத மத்தியில் சட்டங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கு வங்கத்துக்கு வருகை தந்தனர். சிங்கூர் மட்டுமென இன்றி, அசன்சோல், கொல்கொத்தா மற்றும் நந்திகிராம் ஆகிய பகுதிகளிலும் அவர்கள் கூட்டங்கள் நடத்தினர்.
சிங்கூரின் நபபல்லி பகுதியில் காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை நடந்த சிறிய கூட்டத்தில் 500லிருந்து 2000 வரையிலான எண்ணிக்கையில் விவசாயிகளும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். கொல்கத்தாவிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டவுன் 2006-07-ல், டாடா மோட்டாரின் நானோ கார் தொழிற்சாலைக்கு 997 ஏக்கர் விவசாய நிலம் ஒதுக்கப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. 2016ம் ஆண்டில் உச்சநீதிமன்றம், விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பிக் கொடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அந்த நிலங்களில் பெரும்பாலும் பொட்டலாக கிடக்கிறது.
“ஒரு விவசாயியாக இருக்கும் எனக்கு இந்தியாவில் விவசாயம் இருக்கும் நிலை தெரியும்,” என்கிறார் சுப்ரதா. எட்டு பிகா (ஒரு பிகா என்பது 0.33 ஏக்கர்) நிலத்தில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விளைவிக்கிறார். “விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் கூட பிரிட்டிஷார் விவசாயிகளை சுரண்டினர். தற்போதைய அரசு அதே சூழலை மீண்டும் கொண்டு வருகிறது. உருளைக்கிழங்கு விவசாயத்தின் செலவுகள் அதிகரித்துவிட்டன. விதையின் விலை கூடிவிட்டது. இந்த கஷ்டமான வேலைகளுக்கான பணம் எங்களுக்கு கிடைக்காமல் கார்ப்பரேட்டுகளுக்கு கிடைத்தால் நாங்கள் எப்படி உயிர் வாழ்வது?








