“பிறக்கும் குழாயை நோக்கி சிசு நகர நான் உதவுவேன்.”
குழந்தைகளை இவ்வுலகுக்குக் கொண்டு வந்த மருத்துவச்சிக் காலத்தை நினைவுகூர்கையில் குணமாயி மனோகர் காம்ப்ளேயின் கண்கள் ஒளிர்கின்றன. 86 வருடங்கள் கடந்துவிட்டது. கவனமும் சுதாரிப்பும் நிறைந்த மருத்துவச்சியாக இருந்தவர் அவர். குழந்தை பிறப்புக் குழாயிலிருந்து வரும் முறையை சொல்கையில் வேடிக்கையாக அவர், “கைகளிலிருந்து வளையல்களை கழற்றுவது போல்தான்,” என்கிறார். பாவனை செய்து காட்டும்போது அவரின் கைகளில் இருந்து கண்ணாடி வளையல்கள் சிணுங்கின.
குணமாயி, வக்தாரி கிராமத்தில் வசிக்கும் தலித் ஆவார். மருத்துவச்சியாக அவர் பணி தொடங்கிய 70 ஆண்டுகளில் ஒஸ்மனாபாத் மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான குழந்தைகளை தாயின் கருப்பையிலிருந்து பாதுகாப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். “கை கொண்டிருக்கும் மாயம் அது,” என்கிறார் அவர். கடைசியாக 82 வயதாக இருக்கும்போது நான்கு வருடங்களுக்கு முன் அவர் பிரசவத்துக்கு உதவினார். அவர் பெருமை கொள்கிறார். “என் கைகள் எப்போதும் தோற்றதில்லை. கடவுள் என்னுடன் இருக்கிறார்.”
குணமாயின் மகளான வந்தனா, சோலாபூர் மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார். அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கவிருந்த மூன்று குழந்தைகளை தான் பிறக்க வைப்பதைப் பார்க்குமாறு குணமாயி மருத்துவர்களிடம் கூறினார். “அவர்கள், ‘ நீங்கள் எங்களை விட திறன் வாய்ந்தவர் (பாட்டி) என்றனர்.” அவர்களின் ஆச்சரியத்தை நினைவுகூர்ந்து புன்னகைக்கிறார் குணமாயி.
பிரசவத்தையும் தாண்டியவை அவரின் திறன்கள். சோலாப்பூர், கொல்ஹாப்பூர், புனே போன்ற மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலிருந்து அவருக்கு அழைப்பு வரும். “குழந்தையின் கண்கள், காதுகள் அல்லது மூக்கில் சிக்கியவற்றை அகற்றுவதில் என் பாட்டி திறன் வாய்ந்தவர். விதையோ மணியோ எது சிக்கினாலும் குழந்தையை என் பாட்டியிடம் அழைத்து வருவார்கள்,” என்கிறார் அவரின் பெருமைமிகு பேத்தியான ஷ்ரீதேவி, சில மாதங்களுக்கு முன் பாரி குழு சந்தித்தபோது. வயிற்று வலி, மஞ்சள் காமாலை, சளி மற்றும் இருமல், காய்ச்சல் ஆகியவற்றுக்கு மூலிகை தீர்வுகள் வழங்குவதும் இந்த வேலைகளும் சேர்ந்ததுதான் மருத்துவச்சிக்கான வேலை என குணமாயி நம்புகிறார்.









