“சாக்கடைக் குழி 20 அடி ஆழமிருக்கும். பாரேஷ்தான் முதலில் உள்ளே போனார். இரண்டு அல்லது மூன்று பக்கெட்டுகள் கழிவை எடுத்துக் கொண்டு மேலே வந்தார். சற்று நேரம் அமர்ந்தார். மீண்டும் உள்ளே சென்றார். உடனே அலறினார்…”
“என்ன நடந்ததென எங்களுக்கு தெரியவில்லை. எனவே கல்சிங் பாய் உள்ளே சென்றார். அமைதியாக இருந்தது. அடுத்து அனிப் பாய் சென்றார். உள்ளே சென்ற மூவரில் எவரும் சத்தம் எழுப்பவில்லை. எனவே அவர்கள் ஒரு கயிற்றில் என்னைக் கட்டி உள்ளே அனுப்பினர். யாரோ ஒருவரின் கையை என்னை பிடிக்க வைத்தார்கள். அது யாருடைய கை என தெரியவில்லை. அதை பற்றியதும் அவர்கள் என்னை இழுக்க முயன்றனர். அப்போதுதான் நான் மூர்ச்சையானேன்,” என்கிறார் பாவேஷ் மூச்சு விடாமல்.
பாரேஷ்ஷையும் இரண்டு சக ஊழியர்களையும் கண்முன்னே பறிகொடுத்த ஒரு வாரத்துக்கு பிறகு நாங்கள் பாவேஷை சந்தித்தோம். துயரத்தை நினைவுகூரும்போது அவர் வலியுற்றது வெளிப்படையாக தெரிந்தது. குரலில் துயரமும் அழுத்தமும் தோய்ந்திருந்தன.
குஜராத்தின் தாகோத் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது பாவேஷ் கடாரா ‘அதிர்ஷ்டவசமாக’ பிழைத்தவர். அதிர்ஷ்டவசமாக அந்தப் பேரழிவிலிருந்து உயிர் தப்பிய இருவரில் அவரொருவர். பாருச் மாவட்டத்தின் தாகெஜ் கிராமப் பஞ்சாயத்தின் விஷவாயு நிரம்பிய சாக்கடைக் குழியை ஐந்து பழங்குடிகள் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். உயிர் தப்பிய இன்னொருவர் தாகோதின் பலெந்தியா-பெதாபூரை சேர்ந்த 18 வயது பார்மர்.
அவர்களுடன் சேர்ந்து ஜிக்னேஷின் கிராமத்தை சேர்ந்த 20 வயது அனிப் பார்மர், தாகோதின் தந்த்காத்-சகலியாவை சேர்ந்தவர் 25 வயது கல்சிங் முனியா. 24 வயது பாரேஷ் கடாரா, அவரது சகோதரர் பாவேஷ் இருக்கும் ஊரை சேர்ந்தவர். இந்த மூவரும் சாக்கடைக் குழியில் மூச்சு திணறி இறந்து போயினர். (இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வயதுகள் ஆதார் அட்டைகளிலிருந்து எடுக்கப்பட்டவை. உறுதிபடுத்தாத தகவல்களாக கையாளப்பட வேண்டும். பெரும்பாலான இத்தரவுகள் கடைமட்ட அதிகாரிகளே போட்டுக் கொள்பவையாக இருக்கின்றன.)





















