மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (MPSC) நுழைவுத் தேர்வில் தான் வென்றது தெரிய வந்த சில மணி நேரத்தில் பீட் என்ற இடத்தில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள சோலாப்பூருக்கு வண்டியில் அழைத்துச் செல்லும்படி நண்பரை கேட்டுக்கொண்டார் சந்தோஷ் காடே. அவரது வயது 25. அந்தப் பசுமையான கரும்புத் தோட்டத்துக்கு சென்று சேர்ந்தவுடன் மூங்கில், வைக்கோல், தார்ப்பாய் கொண்டு அமைக்கப்பட்டிருந்த ‘கோப்’ என்று அழைக்கப்படும் குடிலைத் தேடிப் போனார். அடுத்த சில நிமிடங்களில் அந்தக் குடிலை அவர் கிழித்தெறிந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, வருடத்தின் 6 மாத கால கரும்பு வெட்டும் பருவத்தில் கரும்புவெட்டும் தொழிலாளிகளான அவரது பெற்றோர் தங்கி வந்த குடில் அது.
“தேர்வு முடிவு வெளியான பிறகு NT-D (நாடோடிப் பழங்குடிகளில் உட்பிரிவு), பிரிவில் நான் முதலிடத்தில் வந்திருப்பதாக தெரியவந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட இனி என் அப்பாவும் அம்மாவும் கரும்பு வெட்டும் தொழிலாளிகளாக வேலை செய்யவேண்டியதில்லை என்பதில் கிடைத்த மகிழ்ச்சியே மிகப்பெரிய மகிழ்ச்சி,” என்கிறார் காடே. தம்முடைய 3 ஏக்கர் மானாவாரி நிலத்தை ஒட்டியுள்ள வீட்டின் அகன்ற தாழ்வாரத்தில் பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றில் அமர்ந்தபடி அவர் இதைக் கூறுகிறார்.
சந்தோஷ் காடேவின் வெற்றிச் செய்தி வந்தபோது அந்த இடத்தில் கண்ணீரும் வெடிச்சிரிப்பும் கலந்து பரவின. கடந்த 30 ஆண்டுகளாக வறட்சிப் பாதிப்புக்கு உள்ளாகும் பட்டோடாவில் இருந்து சோலாப்பூர் மாவட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் மகன்தான் காடே. ஸ்வர்காவ்ன் காட் பகுதியில் இருந்து 90 சதவீத குடும்பங்கள் தம்முடைய குடும்பத்தைப் போல கரும்பு வெட்டுவதற்காக, மேற்கு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவுக்கு இடம் பெயர்கின்றன என்று அவர் கூறுகிறார்.
வஞ்சாரி சமுதாயத்தை சேர்ந்தவரான சந்தோஷ் காடே, மகாராஷ்டிரா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றார். மாநில அளவிலான தர வரிசையில் பொதுப்பிரிவில் 16வது இடம் பிடித்த அவர் NT-D பிரிவில் முதலிடம் பிடித்தார்.
“எனது பெற்றோரின் ஆண்டாண்டு கால போராட்டத்தின் பலன் இது. அவர்களது வாழ்க்கை விலங்குகளின் வாழ்க்கையைப் போல இருந்தது,” என கூறுகிறார் காடே அறுவடைக் காலத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என்று விவரித்து. “அதை தடுத்து நிறுத்துவதும், கரும்பு வெட்டுவதற்காக இடம் பெயரத் தேவையில்லாத அளவுக்கு ஒரு நல்ல வேலையைத் தேடுவதுமே என் முதல் இலக்காக இருந்தது,” என்கிறார் அவர்.







