1962ம் ஆண்டின் அந்த நாளைத் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார் 82 வயது பாபு சுதார். அவரின் இன்னொரு மரக் கைத்தறியை விற்றிருந்தார். சொந்தப் பட்டறையில் தயாரித்த ஏழடி உயரத் தறி, கொல்காப்பூரின் சங்காவோன் கசாபா கிராமத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளரிடமிருந்து 415 ரூபாய் பெற்றுத் தந்தது.
அவர் உருவாக்கிய கடைசி மரத் தறியாக அது இல்லாதிருந்திருந்தால், சந்தோஷமான நினைவாக அது இருந்திருக்கும். ஆர்டர்கள் வருவது அதற்குப் பிறகு நின்றுவிட்டது. கையால் தயாரிக்கப்பட்ட மரத்தறியை வாங்குவதற்கு அதற்குப் பிறகு ஆளில்லை. ”எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது,” என அவர் நினைவுகூர்கிறார்.
அறுபது வருடங்கள் கழித்து இன்று, காலால் மிதித்து இயக்கும் தறியை உருவாக்கும் கடைசி மனிதர் கிராமத்தில் பாபுதான் என்பது கொல்காப்பூர் மாவட்டத்தின் ரெண்டாலைச் சேர்ந்த சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு காலத்தில் பிரபலமான கைவினைஞராக இருந்தவர் அவர் என்பதும் சிலருக்கு மட்டுமே தெரியும். “ரெண்டால் மற்றும் அருகாமை கிராமங்களின் பிற கைத்தறி த்யாரிப்பாளர்கள் அனைவரும் இறந்து விட்டனர்,” என்கிறார் 85 வயது வசந்த் தாம்பே. கிராமத்தின் முதிய நெசவாளர் அவர்தான்.
மரத்தில் கைத்தறி தயாரிக்கும் பாரம்பரியமே ரெண்டாலில் தொலைந்து விட்டது. “கடைசி கைத்தறி கூட இல்லை,” என்கிறார் பாபு, அவரது சிறிய வீட்டைச் சுற்றி இருக்கும் மின் தறிகளின் சத்தத்தினூடாக.
வீட்டுக்குள்ளே அமைந்திருக்கும் ஓரறைக்குள் அமைந்திருக்கும் பாபுவின் பாரம்பரியப் பட்டறை கடந்து போன ஒரு காலத்தின் சாட்சியாக இருக்கிறது. அடர்பழுப்பு, வெளிர்பழுப்பு, செம்பழுப்பு, அடர் செம்பழுப்பு எனப் பட்டறையிலிருந்த பழுப்பு நிறங்களின் கலவை மெல்ல மங்கலாகி கால ஓட்டத்தில் மினுமினுப்பு குறைந்து கொண்டிருக்கிறது.

























