ஓர் ஆண் பார்த்துக் கொண்டிருக்கும் கொடுமைக்கு இணையாக இந்த இருட்டோ அவ்வப்போது கூவி கடந்து செல்லும் ரயிலோ இருக்க முடியாது.
“இரவு நேரத்தில் எங்களுக்கு இருக்கும் ஒரே கழிப்பறை ரயில் தண்டவாளங்கள்தான்,” என்கிறார் 17 வயது நீது குமாரி.
யார்பூர் பகுதியின் 9ம் வார்டு குப்பத்தில் நீது வாழ்கிறார். குப்பத்தின் நடுவே வீடுகளுக்கு இடையில் குடிநீர்க் குழாய்கள் இருக்கும் ஒரு சிமெண்ட் தளத்தில் இரு ஆண்கள் உள்ளாடைகளுடன் அமர்ந்து தீவிரமாக சோப்பு போட்டுக் கொண்டிருந்தனர். ஒரு டஜன் சிறுவர்கள் நீருடன் விளையாடிக் கொண்டிருந்தனர். வழுக்கும் தரையில் விழுந்து கொண்டும் அடுத்தவரை இழுத்து விட்டுக் கொண்டும் வெடித்து சிரித்துக் கொண்டுமிருந்தனர்.
50 மீட்டர்கள் தொலைவில் ஒரு கழிப்பறை கட்டடம் இருக்கிறது. இந்த குப்பத்தில் இருக்கும் ஒரே கழிப்பறை அது. ஆனால் பயன்பாடின்றி கிடந்தது. அதன் பத்து அறைகளும் பூட்டப்பட்டிருந்தன. பொதுப் பயன்பாட்டுக்காக அவை திறக்கப்படும் நிகழ்வு தொற்றினால் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆட்டுக் குடும்பம் ஒன்று அதன் படிக்கட்டுகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. பின்னால், ரயில் தண்டவாளங்களில் குப்பை குவியல். பயன்படுத்தப்படக் கூடிய பொதுக் கழிப்பறை 10 நிமிடத் தொலைவில் இருக்கிறது. சிலர் ரயில் தண்டவாளத்தைத் தாண்டி யார்பூரின் மறுமுனையில் இருக்கும் கழிப்பறைக்கும் செல்வதுண்டு. அதுவும் 10 நிமிடத் தொலைவுதான்.
”சிறுவர்கள் எங்கும் எப்போதும் இயற்கைத் தேவையைத் தணித்துக் கொள்வார்கள். சிறுமிகள் தண்டவாளங்களை இரவு மட்டும்தான் பயன்படுத்த முடியும்,” என்கிறார் முதல் வருட இளங்கலை மாணவியான நீது. (இக்கட்டுரையில் எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டிருக்கிறது.) அவரது பகுதியிலிருக்கும் பிறச் சிறுமிகளைக் காட்டிலும் அவருக்கு அதிர்ஷ்டம் இருப்பதாக நினைக்கிறார். பகல் நேரத்தில் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் உறவினர் வீட்டின் கழிப்பறையை அவர் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
“மேலும் எங்கள் வீட்டில் இரண்டு அறைகள் உள்ளன. ஒரு அறையில் என் தம்பி உறங்குவான். இன்னொன்றில் என் தாயும் நானும் உறங்குவோம். எனவே என்னுடைய மாதவிடாய் நாப்கின்களை மாற்றிக் கொள்ளவேனும் தனியறை எனக்கு இருக்கிறது,” என்கிறார் நீது. “பிறச் சிறுமிகளும் பெண்களும் முழு நாளும் காத்திருந்து இரவு நேரம் ஆனப் பிறகு தண்டவாளத்தின் இருள் பகுதியில் நாப்கின்களை மாற்றுகின்றனர்.”










