ஒரு முழு வருடத்தை சொந்த ஊரில் கடைசியாக செலவழித்தது எப்போது என்பது ரமேஷ் ஷர்மாவுக்கு நினைவிலில்லை. “இதை 15-20 வருடங்களாக நான் செய்து கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர் ஹரியானாவின் கர்னல் மாவட்டத்திலுள்ள காக்சினா கிராமத்தின் ஒரு நிலத்தில் கரும்பு வெட்டிக் கொண்டே.
44 வயது ரமேஷ் பிகாரின் அராரியா மாவட்டத்திலுள்ள அவரின் ஷாய்ர்கவோன் கிராமத்திலிருந்து அக்டோபர் தொடங்கி மார்ச் மாதம் வரை – பாதி வருடத்துக்கு – ஹரியானா மற்றும் பஞ்சாபில் விவசாயக் கூலியாக வேலை பார்க்க இடம்பெயர்கிறார். “பிகாரில் விவசாயியாக இருப்பதை விட ஹரியானாவில் கூலியாக இருந்து அதிகம் சம்பாதிக்கிறேன்,” என்கிறார் அவர்.
ஷாய்ர்கவோனில் ரமேஷ்ஷுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் வருடத்தின் ஆறு மாதங்களுக்கு அவர் விவசாயம் பார்க்கிறார். சம்பா பருவத்தில் (ஜூன் – நவம்பர்) நெல் பயிரிடுகிறார். “அவற்றில் பெரும்பாலும் சொந்த பயன்பாட்டுக்குதான்,” என்கிறார் அவர், தான் வெட்டும் கரும்பிலிருந்து பார்வை அகலாமல்.
ஷர்மாவின் பிரதான பணப்பயிர் சோளம்தான். குறுவை காலத்தில் (டிசம்பர் – மார்ச்) பயிரிடுகிறார். ஆனால் அப்பயிர் பெரிய அளவில் பணம் கொடுப்பதில்லை. “கடந்த வருடத்தில் (2020) என்னுடைய விளைச்சலை ஒரு குவிண்டால் 900 ரூபாய் என்கிற விலையில் விற்றேன்,” என்னும் அவர் 60 குவிண்டால் சோளம் அறுவடை செய்திருந்தார். “கமிஷன் ஏஜெண்ட் ஊருக்கு வந்து வாங்கிக் கொள்வார். அப்படித்தான் பல வருடங்களுக்கு நடக்கிறது.”
ரமேஷ்ஷுக்கு கிடைத்த விலை ஒரு குவிண்டாலுக்கு 1760 ரூபாய்தான். சோளத்துக்கென மத்திய அரசு 2019-20ல் விதித்த குறைந்தபட்ச ஆதார விலையிலிருந்து 50% குறைவு. பிகாரின் அரசு மண்டிகளில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்பது நடக்காத காரியமாகி விட்டது. எனவே ஷர்மா போன்ற சிறுவிவசாயிகள் நேரடியாக கமிஷன் ஏஜெண்டுகளுடன் பேரம் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
2006ம் ஆண்டில் பிகாரின் அரசு, பிகார் வேளாண் பொருள் சந்தை சட்டம். 1960-ஐ ரத்து செய்துவிட்டது. அதிலிருந்து மண்டி முறையும் மாநிலத்தில் இல்லாமல் போய்விட்டது. அந்த நடவடிக்கை விவசாயத் துறையை தாராளமயப்படுத்தி விவசாயிகள் தனியார் நிறுவனங்களிடம் சந்தைப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும் என அரசு குறிப்பிட்டது. மண்டிகள் ஒழிக்கப்பட்டதால் பிகாரின் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்துவிடவில்லை. மாறாக தரகர்களை சார்ந்து இயங்கும் தன்மையை அதிகமாக்கியது. விலைகளையும் தரகர்களே நிர்ணயிக்கும் நிலை உருவானது.








